ஜி.யு. போப்

From Tamil Wiki
Revision as of 01:57, 24 January 2022 by Subhasrees (talk | contribs) (ஜி.யு. போப் முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜி.யு. போப்
ஜி.யு. போப்

ஜி.யு. போப் (ஜார்ஜ் யூக்லோ போப்) (ஏப்ரல் 24, 1820 – பிப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ இறைப்பணிக்காக இந்தியா வந்த மதபோதகர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பணியாற்றிய தமிழறிஞர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற முக்கியமான நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தமிழிலக்கியங்களை மேலை நாட்டவர்க்கு அறிமுகம் செய்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, இளமை

ஜார்ஜ் உக்லோ போப் கனடாவின் ப்ரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820ல் பிறந்தார். தந்தை ஜான் போப் இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தின் பாட்ஸ்டோ-வை சேர்ந்தவர். தாய் காதரீன் யூக்லோ வடக்கு கார்ன்வாலின் ஸ்ட்ராட்டனை சேர்ந்தவர். தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்தபோது அங்கு போப் பிறந்தார். 1826ல் போப்புக்கு 6 வயதானபோது பெற்றோருடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார். வெஸ்லியன் பள்ளியிலும் ஹாக்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

குடும்பம்

ஜனவரி 1, 1842 இல் கடலூரில் ஒரு பாதிரியாரின் மகளான மேரி கார்வரை மணந்தார். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. 1845 இல், மேரி தூத்துக்குடியில் மரணம் அடைந்தார்.

அதன் பிறகு போப் சென்னைக்கு சென்றார். 29 ஜூன் 1848ல் ஹென்றிட்டா பேஜ் என்பவரை மணந்தார், 1849 இல் மனைவியுடன் இங்கிலாந்துக்கு சென்றார். பின்னர் 1851ல் இரண்டாவது முறையாக தமிழகத்தில் தஞ்சாவூர் வந்து சமயப்பணியை தொடர்ந்தார்.

இரண்டாவது திருமணத்தில் அவருக்கு பதின்மூன்று குழந்தைகள் பிறந்து நான்கு குழந்தைகள் இளமையிலேயே இறந்துவிட்டன.

பங்களிப்பு

இறையியல் பணி

ஜி.யு. போப் சிலை, திருவல்லிக்கேணி, சென்னை
ஜி.யு. போப் சிலை, திருவல்லிக்கேணி, சென்னை

மதபோதகராக வெஸ்லியன் கிறிஸ்தவ திருச்சபையில் சேர்ந்த ஜி.யு. போப், பத்தொன்பதாவது வயதில் இறைப்பணிக்காக 1839-ம் ஆண்டு தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்கள் தமிழ் கற்றார். சென்னைக்கு வந்து சாந்தோம் பகுதியில் தங்கினார், இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்து ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக தூத்துக்குடி அருகே இருந்த சாயர்புரத்தில் குடியேறினார்.

பிற்காலத்தில் தஞ்சாவூரிலும், ஊட்டியிலும் பெங்களூரிலும் பல வருடங்கள் இறைப்பணி புரிந்தார்.

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்னரும் ஜாதி உயர்வு தாழ்வுகளை கைவிடாது உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் தருமாறு கோரினார். ஜி.யு. போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து அவர்களால் ஏற்கப்படவில்லை. கிறிஸ்தவ சபையினரும் அவர்களை சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகினார். கிறிஸ்தவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றித் தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து ஊட்டி சென்றார்.

கல்விப் பணி

புலவர் ஆரியங்காவுப் பிள்ளை என்பவரிடமும் இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

சாயர்புரத்தில் அவர் ஆற்றிய சேவை சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது. அங்கே கிறிஸ்துவ மத போதகராகச் சென்றவர் கல்லூரி ஒன்றை அமைத்தார். சிறந்த ஆசிரியர்களை நியமித்து தமிழ், லத்தீன், கிரேக்கம், ஹீபுரு ஆகிய மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலை நாட்டு தத்துவம், உளவியல், கணிதம், தர்க்கம் ஆகியவற்றை முதன்முறையாக தமிழில் கற்பிக்கும் கல்வி நிலையமாக அது இருந்தது.

ஊட்டியில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தார், பின்னர் ஒரு பள்ளியை உருவாக்கினார். சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு அவர்களுடன் பேசுவதும் அவர் வழ்க்கம். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். அம்மலையில் வாழும் தோடர் இனத்தவரோடு பழகினார். நீலகிரித் தோடர் பேசும் மொழியைப் ஆராய்ந்து அதன் இலக்கணத்தை எழுதியுள்ளார்.

தமிழ்ப் பணி

1851 ஆம் ஆண்டு இரண்டாவது முறை தமிழகம் வந்தபோது எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் இருந்தார். இந்தக் கால கட்டத்தில் புறநானூறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களைக் கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

42 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த போப் 1882-ம் ஆண்டு தனது 62-வது வயதில் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். 1885-ல் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து அங்கு மாணவர்களுக்குத் தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.

1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.

1893-ல் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாலடியார் மொழியாக்கத்துடன் ஆராய்ச்சியோடு கூடிய முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். நாலாடியாரின் பொருளை விரித்து உரைக்கிறார், அத்துடன் நாலாடியாரில் உள்ள வெண்பா, அதன் ஆங்கில வடிவம், இறுதியில் விரிவுரை என அமைத்திருந்தார். இதுதவிர பாட்டு முதற்குறிப்பு அகராதி, சொற்பொருள் அகராதி தவிர நூலின் இறுதியில் பொது அகராதி ஒன்றையும் அவர் தொகுத்து அளித்திருந்தார்.[1]

நாலடியார் மொழியாக்கத்தைத் தொடர்ந்து திருவாசகத்தை மொழியாக்கம் செய்தார். முதுமையிலும் அப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, 1900 ஏப்ரல் 24ஆம் தேதி அதை வெளியிட்டார். திருவாசகம் முன்னுரையில் “என் எண்பதாவது பிறந்தநாளில் இதை வெளியிடுகிறேன். 1837ஆம் ஆண்டில் முதன்முதலில் தமிழ் படிக்கத் தொடங்கினேன். நெடுங்காலம் உண்மையான பற்றுக் கொண்டு தமிழ் நூல்களை ஆராய்ந்தேன். இந்நூல் வெளியீட்டோடு என் இலக்கியப் பணி முற்றுப்பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

போப் திருவாசகம் மொழிபெயர்ப்பு தன் இறுதி இலக்கியப் பணியாக இருக்கக் கூடுமென எண்ணினார். அதன் பின்னர் எட்டாண்டுகள் அவர் வாழ்ந்து மணிமேகலையின் ஆங்கில மொழியாக்கத்தைத் துவக்கினார். அது நிறைவுறவில்லை. அவர் மறைந்த பிறகு அதன் பகுதிகள் ‘சித்தாந்த தீபிகை’யில் வெளியாயிற்று. வாழ்வின் இறுதிக்காலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். புறநானூற்றின் சில பகுதிகளையும் மொழிபெயர்த்தார், அந்நூல் குறித்த கட்டுரைகளையும் எழுதினார்.

மறைவு

  1. இறப்புக்குப் பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் (அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
  2. தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.
  3. கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும்

என்ற மூன்று விருப்பங்களை ஜி.யு.போப் நண்பரிடம்  தெரிவித்திருந்தார்.

ஜி.யு.போப் 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி காலமானார்.

போப் அவர்களின் விருப்பப்படி அவர் கல்லறையை அமைக்க பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வ கேசவராய முதலியார் தமிழர்களிடம் நன்கொடை வசூலித்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார். ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் ஒரு மரத்தடியில் சலவைக்கல்லால் ஆன போப் கல்லறை உள்ளது. அதில் பொறிக்கப்பட்டு உள்ள ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம்[2]:

“தென்னிந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் உக்ளோ போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளை போதிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். மொழிக்காகவும், சமயப்பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது”

படைப்புகள்

ஜி.யு. போப் எழுதிய நூல்கள்:

  • First Catechism of Tamil Grammar for Schools.
  • Second Catechism of Tamil Grammar for Schools.
  • Third and complete Grammar of the - Tamil Language in both its dialects, with the native authorities.
  • Grammar of the Tulu Language
  • Tamil - English.and English - Tamil Lexicon
  • Tirukkural — English Translation.
  • Naladiyar — ⁠English Translation.
  • Tiruvasagam — English Translation.
  • Select Stanzas from Purananuru, Purapporul Venba Malai etc.translated into English. (Contributed to the journal of the Royal Asiatic Society and the Siddantha Deepika.)

விருதுகள்

விக்டோரியா மகாராணியின் வைர விழாவையொட்டி ’ராயல் ஏஷியாட்டிக் சொசைட்டி' என்ற சங்கத்தில் ஒரு தங்கப்பதக்கம் பரிசாக வழங்கி வந்தார்கள்.  உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் பேசும் மக்களிடையே கீழை நாடுகள் தொடர்பான அறிதலை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக செயலாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதக்கம் வழங்கப்படும். 1906ஆம் ஆண்டில் அப்பரிசு பெறுவதற்கு உரியவராகப் ஜி.யு. போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உசாத்துணை

தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்