under review

ஜாக்கோமே கொன்சால்வெஸ்

From Tamil Wiki
Revision as of 21:10, 7 November 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஜாக்கோமே கொன்சால்வெஸ் (சாங்கோபாங்கர் சுவாமிகள்) (ஜூன் 8,1676 - ஜூலை 17, 1742) கத்தோலிக்க அருட்தந்தை. இலங்கைத் திருச்சபையின் உந்துவிசையாக இருந்தவர். இலங்கை கத்தோலிக்க இலக்கியத்தின் தந்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜாக்கோமே கொன்சால்வெஸ் (சாங்கோபாங்கர் சுவாமிகள்) (ஜூன் 8,1676 - ஜூலை 17, 1742) கத்தோலிக்க அருட்தந்தை. இலங்கைத் திருச்சபையின் உந்துவிசையாக இருந்தவர். இலங்கை கத்தோலிக்க இலக்கியத்தின் தந்தை என அறியப்படுகிறார். இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் புழங்கும் ஜெபங்கள், வேதகல்வி நூல்களை தமிழில் எழுதினார். போர்த்துக்கேய-தமிழ்-சிங்கள அகராதியை இயற்றினர்.

பிறப்பு

சாங்கோபாங்கரின் இயற்பெயர் ஜாக்கோமே கொன்சால்வெஸ் (Jacome Gonclaves). அவரது முன்னோர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்ட கொங்காணி(கோவா) பிராமணர்கள். போர்ச்சுகீசியர்கள் கோவாவைக் கைப்பற்றிய காலத்தில் கோவாவின் திவாரிப் பகுதி பிராமணர்கள் பலர் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்து 1543-ல் ஞானஸ்நானம் பெற்றனர். ஜாக்கோமே கொன்சால்வெஸ் போர்ச்சுகீசியர் ஆட்சி செய்த கோவாவில் தோமஸ் கொன்சால்வெஸ், மரியானா அபீரு இணையருக்கு ஜூன் 8, 1676-ல் பிறந்தார். 1676-ல் ஜாக்கோமே கொன்சால்வெஸ் ஞானஸ்நானம் பெற்றார்.

கல்வி

திவாரியில் ஆரம்பக்கல்வி பயின்றார். இயேசு சபைக் கல்லூரி கோவாவில் பயின்றார். கோவா பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். 1696-ல் கோவா புனித தோமையார் கல்லூரியில் தத்துவக் கல்வி பயின்றார். அங்கு அமைப்பாளராகவும் பதவி வகித்தார். இதன் வழியாக கவிதை, உரைநடை, இசையில் ஆர்வம் வளர்த்துக் கொண்டார். ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றார்.

ஆன்மிக வாழ்க்கை

திவாரியில் கட்டளைக் குருவிடம் இலக்கண இலக்கியங்கள் கற்கச் சென்றார். கோவா சர்வகலா சாலையில் குருக்கல்வி படித்தார். பதினேழு வயதில் சர்வகலா சாலை பிரேவசப் பரிட்சையில் தேர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் பாலபண்டிதர் பட்டம் பெற்றார். அக்குயினா தோமையார் கல்லூரியில் தேவசாஸ்திரம் கற்றார். 1700-ல் தாய் தந்தையரை முழுவதுமாகத் துறந்து கோவா தியான சம்பிரதாய மடத்தில் கோவாவின் பேராயர் அகோஸ்டின்ஹோ டி அனுன்சியாகோவால் புனித கேத்தரின் தேவாலயத்தில் குருவாகப் பட்டம் பெற்றார். அவர் கோவாவில் உள்ள செயின்ட் பால் பல்கலைக்கழகத்தில் தத்துவக் கல்வியின் தலைவராக நியமிக்கப்பட்டார். நான்கு வருடத்திற்குப்பின் கோவா சர்வகலாசாலையில் உபந்நியாசம் செய்யும் வேலை கிடைத்தது. 1705-ல் இலங்கைக்கு ஞான அதிகாரியாகச் சென்றார். புரொடஸ்டண்ட் கிறிஸ்துவத்தை வலியுறுத்திக் கொண்டிருந்த டச்சுக்காரர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க சுவிசேஷப் பணிகள் செய்தார். அருட்தந்தை ஜேகப் வாஸ்க்கு மிஷனரிப்பணிகளில் உதவினார்.

இலங்கை வாழ்க்கை

ஜாக்கோமே கொன்சால்வெஸ் ஆகஸ்ட் 30, 1705-ல் இலங்கை தலைமன்னார் வந்தார். கொங்கனி, போர்த்துகீசியம், லத்தீன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை அறிந்திருந்தார். தமிழ் பயின்றார். மூணாறு மாவட்டத்தில் உள்ள மன்னார், அரிப்பு, முசலி, பிற இடங்களில் அவர் தனது முதல் பணியின் போது இந்த மொழியில் தேர்ச்சி பெற்றார். டச்சு மொழியையும் கற்றார். ஜோசப் வாஸ் அவரை சிங்களம் கற்க கண்டிக்கு அனுப்பினார். பிப்ரவரி, 1709 முதல் நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குருப்பணி செய்தார். 1300க்கும் மேற்பட்டவர்களை கத்தோலிக்கராக மாற்றினார். 1710-ல் அவர் கண்டியில் இருந்தார். சீதாவக்காவிற்கும் கொழும்பிற்கும் இடையில் சேவை செய்து கொண்டிருந்த போது, இலங்கையின் கரையோரத்தை கட்டுப்படுத்திய டச்சுக்காரர்களால் சித்திரவதை செய்யப்பட்டார். 1710-ல் ஜோசப் வாஸ் இறந்தார். 1711 இல் ஜாக்கோமே கொன்சால்வெஸ்ஸின் மூட்டு சிதைந்தது. புத்தளம், சீதாவாக்கா மற்றும் கொழும்பில் பணி செய்தார். 1713 வரை கண்டியில் தங்கினார். ஹங்குராங்கெத்த அரண்மனைக்கு அருகில் தேவாலயத்தை கட்டினார். கொச்சின் ஆயரின் துணைத் தலைவராகவும், இலங்கையில் உள்ள அனைத்து சொற்பொழிவாளர்களின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1725வரை வடக்கு பகுதிகளில் சேவை செய்தார். பின்னர் அவர் கொழும்பு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சேவை செய்தார். அவர் 1726இல் மன்னரிடம் சமாதானம் செய்யும் தூதுவராக பணியாற்றினார். 1729இல் நடக்கவிருந்த கிளர்ச்சியை நிறுத்துவதில் அவர் ஈடுபட்டார்.

கொச்சின் பிஷப் மூலம் கோவாவிற்கு திருப்பி அனுப்புமாறு சபையின் (கோவா) தலைவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டாலும், இலங்கையில் அவர் ஆற்ற வேண்டிய சேவையை மனதில் கொண்டு அதை நிராகரித்தார். அவர் தனது பல படைப்புகளை நீர்கொழும்புக்கு அருகிலுள்ள போலவத்தையில் எழுதினார். அச்சகம் இல்லாததால், தனது படைப்புகளை நகலெடுக்க பன்னிரெண்டு சிங்கள எழுத்தர்களை பணியமர்த்தினார்.

இலக்கிய வாழ்க்கை

ஜாக்கோமே கொன்சால்வெஸ் சிங்களத்தில் இருபத்தியிரண்டு, தமிழில் பதினான்க, போர்ச்சுகீசியத்தில் ஐந்து, டச்சில் ஒன்று என நாற்பத்தியிரண்டு புத்தகங்கள் எழுதினார்.

சாங்கோபாங்கர் சுவாமிகள் அக்காலத்தில் வழக்கிலிருந்த கலவைத் தமிழில், வடமொழிச் சொற்கள் மிகுதியாகப் பயின்ற உரைநடையில் நூல்கள் பல எழுதினார். சிங்களத்திலும் பாலிச் சொற்களை மிகுதியாகச் சேர்த்து எழுதினார். 'சுகிர்த தர்ப்பணம்', 'அற்புத வரலாறு', 'தர்ம உத்தியானம்', 'ஞானவுணர்ச்சி' என்னும் சிறு நூல்களையும், 'சுவிசேஷ விரித்துரை, புராந்திமபச்சிம காண்டம்' போன்ற பெரிய நூல்களையும் எழுதி வெளியிட்டார். சாங்கோபாங்கர் விரிவான போர்த்துக்கேய-தமிழ்-சிங்கள அகராதி ஒன்றை இயற்றினர். அது வெளிவரவில்லை. திரைவிருத்தம் (கட்டியம்), ஆனந்தக்களிப்பு சிந்து, பதம் முதலான பாவகைகள் எழுதினார். கத்தோலிக்க மதம் சார்ந்த புத்தகங்கள் எழுதினார்.

மொழிபெயர்ப்பு

கத்தோலிக்க ஜெபங்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்தார். கத்தோலிக்க மந்திரங்களை லத்தீனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

ஓவியங்கள்

சாங்கோபாங்கர் சுவாமிகள் வரைந்த ”ஏசுவின் சிலுவைப்பாடுகள்” ஓவியங்கள் புனித ஆரோபண அன்னை ஆலயத்தில் உள்ளன.

மறைவு

சாங்கோபாங்கர் ஜூலை 17, 1742-ல் இலங்கை நீர்க்கொழும்பில் காலமானார். 1852-ல் இவரது கல்லறை அருட்தந்தை ஃப்லோரட்டினே கிரேசியாவால் திறக்கப்பட்டது. புதிய தேவாலயத்தில் இஅவ்ரின் எலும்புகள் வைக்கப்பட்டன. மீண்டும் கல்லறையைத் திறந்து ​​அவரது சிலுவை மற்றும் ஒரு பல் எடுக்கப்பட்டு நைனாமடமாவில் உள்ள வியாகுலமாதா தேவாலயத்தில் வைக்கப்பட்டது.

நூல் பட்டியல்

தமிழ், சிங்களத்தில் எழுதியவை
  • கிறீஸ்தியானி ஆலயம்
  • தேவ அருள்வேத புராணம்
  • சத்திய வேதாகம சங்கேஷபம்
  • சுவிசேஷ விரித்துரை
  • வியாகுல பிரசங்கம்
  • சுகிர்த தர்ப்பணம்
  • சுகிர்த குறள்
  • அற்புத வரலாறு
  • தர்ம உத்தியானம்
  • ஞானவுணர்ச்சி
  • சுவிசேஷ விரித்துரை
  • * புராந்திமபச்சிம காண்டம்
தமிழில் மட்டும் எழுதியவை
  • வாத்தியாரும் குடியானவனும் தர்க்கித்துக் கொண்ட தர்க்கம்
  • நவதர்க்கம்
  • ழசல்மன் வேதம்
  • கடவுள் நிர்ணயம்
  • நாலு வேதம்
  • சிந்துப் பிரார்த்தனி முதலிய கீர்த்தனங்கள்
சிங்களத்தில் மட்டும் எழுதியவை
  • தேவநீதிவிஸர்ஜனய
  • அஞ்ஞான அவஷதய
  • புத்தபண ப்ரத்யக்‌ஷய
  • புத்துழல
  • பேதகாறயங்கே தர்க்கய
  • வேதகாவ்ய
  • மங்கல கீத்திய
  • ஆனந்த களிப்புவ
போர்ச்சுகீசியத்தில் எழுதியவை
  • கத்தோலிக்கு உரோமான் திருச்சபையின் உண்மை
  • சிவிசேஷக் குறிப்புகள்
  • மீசாமில் மனசாட்சிச் சந்தேகங்களுக்கு விடை
  • கல்வீனின் தப்பறைகளைக் கண்டிக்கும் சுருக்க்மான தர்க்கம்
ஒல்லாந்தத்தில் எழுதியவை
  • கல்வீன் மதத்தவரின் கண்டனை
இவரைப்பற்றிய நூல்
  • சங்கோபங்க சுவாமிகள் - ஞானப்பிரகாச சுவாமிகள்

உசாத்துணை

இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.