ச. முருகபூபதி
மணல்மகுடி நாடக நிலத்தின் நிறுவனர் ச.முருகபூபதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் மிக முக்கிய நாடக ஆளுமையாக விளங்கிய மதுரகவி பாசுக்கரதாஸ் சுவாமி அவர்களின் மகள்வழிப் பெயரனும் எழுத்தாளர் எம்.எஸ் சண்முகம் அவர்களின் மகனும் ஆவார். எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன் மற்றும் கோணாங்கி இவரின் உடன் பிறந்த சகோதரர் ஆவர். மணல்மகுடியின் நிறுவனரும் இயக்குனருமாகிய ச. முருகபூபதி அவர்கள் 1987 ஆம் ஆண்டு தெரு நாடக இயக்கத்தைத் தொடங்கியது முதல் நடிகர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என சுமார் முப்பது ஆண்டுகளாக நாடகத்துறையில் செயல்பட்டுவருகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கான நாடகங்களை இயற்றியும் கற்பித்தும் குழந்தைகள் நாடகங்களில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டமைக்காகவும் இந்திய அரசின் சங்கீத் நாடக அகாடமி 2011 ஆம் ஆண்டிற்கான உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் விருதை வழங்கி கௌரவித்தது.