ச. திருமலைவேற் கவிராயர்
ச. திருமலைவேற் கவிராயர் (பொ.யு. 1868) தமிழ்ப் புலவர். இவரது கருவைத்தலப் புராணம் முக்கியமான படைப்பு.
பிறப்பு, கல்வி
ச. திருமலைவேற் கவிராயர் 1868 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கரிவலம் வந்த நல்லூருக்கு அருகிலுள்ள எட்டிசேரியில் என்னும் ஊரில் சங்குப் புலவருக்கும் - வீரம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இளமையில் ஏட்டுக்கல்வி கற்றார். நிகண்டு, கருவையந்தாதி, குறவஞ்சி இலக்கியங்களைக் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். முகவூரிலிருந்த ராமசாமிக்கவிராயர், கந்தசாமிக் கவிராயரிடம் நன்னூல், அகப்பொருள், புறப்பொருள், யாப்பெருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் நூல்களைக் கற்றார்.
தனிவாழ்க்கை
ஆசிரியராகப் பிற மாணவர்களுக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தார். 1900 ஆம் ஆண்டு மதுரை உத்தமபாளையத்திற்கு அருகேயுள்ள பூசாரிக்கவுண்டன்பட்டிக்கு வந்தார். பாக்கியலட்சுமி என்ற மகளும், சங்கு என்ற மகனும் பிறந்தனர். தாய், தந்தை, ஒரு மகளும் இறந்தபிறகு இளைப்பு நோய்க்கு ஆளானார்.
இலக்கிய வாழ்க்கை
சேற்றூர் மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க பெற்றநாயகி அம்மைமீது கவி பாடினார். “மலைசாயப்பாடிய சங்குப்புலவர் குலத்தார்”; “மலை நகரக் கவிபகர்ந்த அமுதசங்குக் கவிராயன் வழியில் வந்தோன்” என்றும் பாராட்டப்பட்டார். செய்யுள்கள் பல இயற்றினார். ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவரிடம் பாடிப் பரிசில் பெற்றார். சேற்றூர் மன்னர் வடமலைத் திருவநாடசுந்தரதாசுத்துரையிடம் யாமம், திரிபு, சிலேடை முதலிய பாடி பரிசு பெற்றார். தேவதானம் கோவிலில் செய்யுட்கள் பாடினார். கரிவலம்வந்த நல்லூரின் செல்வர்களான வ. மருதப்பஞ்செட்டியார், ஆ. மருதப்பஞ்செட்டியார், பால்வண்ணஞ்செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க கருவைத்தலப்புராணம் பாடினார். நாற்பது படங்கள், 1345 செய்யுள்களையும் கொண்ட புராணமாக இயற்றினார். சீட்டுக்கவிகள், சிலேடைக்கவிகள், பிராதுக்கவிகள், யமகம் திரிபு சிலேடையணிந்த கவிகள், தனிக்கவிகள் இயற்றினார். சொற்போர் புரிவதிலும், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் பாடினார்.
இலக்கிய நண்பர்கள்
- சென்னிகுளம் அண்ணாமலைச் செட்டியார்
- எட்டயபுரம் மீனாட்சிசுந்தரக் கவிராயர்
- மு.ரா. அருணாச்சலக் கவிராயர்
- மு.ரா. சுப்ரமணியக்கவிராயர்
- மு.ரா. கந்தசாமிக் கவிராயர்
- புளியங்குடி முத்துவீரப்புலவர்
- வாசுதேவநல்லூர் கந்தசாமிப்புலவர்
சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்
- போடி நாயக்கண்ணூர் கு. அண்ணாமலைப்பிள்ளை
- மார்க்கயன்கோட்டை பழநிச்சாமியாசாரி
- சுந்தர ஆசாரி
- எட்டிசேரி அருணாச்சல கவிராயர்
- சங்குப்புலவர்
- செவ்வற்குளம் கந்தசாமிப்புலவர்
- தென்மலை ராமசாமிச்செட்டியார்
- சாமிநாதப்புலவர்
மறைவு
ச. திருமலைவேற் கவிராயர் 1944 ஆம் ஆண்டு, தன் எழுபத்தியைந்தாவது வயதில் காலமானார்.
நூல் பட்டியல்
- கருவைத்தலப்புராணம்
- கருவை மும்மணிமாலை
- கோமதியம்மை பதிகம்
- குருநாதத் தேவர் காதல்
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.