ச. கணபதிராமன்
ச. கணபதிராமன் (பிப்ரவரி 21, 1937 - 12 செப்டம்பர், 2022) பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடக நடிகர். நாட்டார் நுண்வரலாறுகள், கோயில் தலவரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தென்காசி அருகேயுள்ள அய்யாபுரம் கிராமத்தில் பிப்ரவரி 21, 1937இல் கணபதிராமன் பிறந்தார். இலஞ்சி ராமசாமிப்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர் படிப்பையும் பயின்றார்.
தனிவாழ்க்கை
ச. கணபதிராமன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிபுரிந்தார். தூத்துக்குடி காமராசர் பல்கலைக் கழகத்தில் 1968-1989 வரை பணியாற்றினார். 1989-1994 வரை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தார்.
அமைப்பு செயல்பாடுகள்
தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராக இருபது ஆண்டுகள் பணியாற்றினார். குற்றாலநாதர் கோயிலில் அறங்காவலராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
தென்காசி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களைச் சார்ந்த நாட்டார் வரலாறு, கோயில்களின் தல வரலாறு போன்ற 31 நூல்களை எழுதியுள்ளார். தென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு வருகை தந்த ரா.பி. சேதுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு சாகித்ய அகாதெமி பதிப்பாக ச. கணபதிராமன் எழுதி வெளிவந்தது. பன்னிரெண்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
கடையத்தில் இரு ஆண்டுகள் பாரதியார் தங்கியிருந்தபோது படைத்த படைப்புகள், பழகிய மனிதர்கள், எந்தப் பின்புலத்தில் எந்தப் பாடல்களைப் படைத்தார் என கள ஆய்வுக்குப் பிறகு கண்டறிந்து ”கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்” என்ற நூலை எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூலாக மட்டுமன்றி சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தற்போது வரையிலான கல்வி, சமூக, அரசியல் விஷயங்களை இந்நூலில் எழுதியுள்ளார். ச. கணபதிராமன் எழுதிய ”தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வரலாறு” என்ற நூலின் அடிப்படையில் தென்காசி வண்டிப்பேட்டை தெப்பகுளம் விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்ற தீர்ப்பை நீதிமன்றம் அளித்தது.
நாடக வாழ்க்கை
ச.கணபதிராமன் நாடகங்களில் நடித்தவர். அவர் நடித்த நாடகங்கள்
- கயல்விழி
- காலத்தின்கோலம்
- சாணக்கியன் சபதம்
- சேரன்செங்குட்டுவன்
நினைவுகள்
ச. கணபதிராமன் தன் வாழ்க்கை வரலாற்றை “என் வாழ்க்கைச் சுவடுகள்" என்ற நூலாக எழுதினார்.
விருதுகள்
- 1998இல் தமிழக அரசின் சிறந்த தமிழ்ப்பேராசிரியர் விருது பெற்றார்.
- 2017இல் தமிழக அரசின் பாரதி விருது பெற்றார்.
- தென்காசி திருவள்ளுவர் கழகம் வாசீக கலாநிதி விருது அளித்தது.
நூல்கள்
- பொருநை நாடு
- வாழ்வாங்கு வாழ்ந்த வளன்
- கம்பர் வாக்கும் நோக்கும்
- பாரி மகளிர்
- பாரதியின் பாவையர்
- தமிழ் இலக்கிய வரலாறு
- திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ வழிபாடு
- பொங்கி எழுந்த பொருநை (சுதந்திரப் போராட்ட வரலாறு)
- தமிழன் கண்ட இந்திய ஒருமைப்பாடு
- கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்
- முத்துக்குவியல்
- திருவள்ளுவரின் கவின்மிகு காமத்துப்பால்
- காரைக்கால் அம்மையார் வரலாறு
- கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்
- தெய்வப்புலவர்கள்
- கற்குவேல் அய்யனார்
- கோயில் வரலாறு
- திருமலைக்கோயில் வரலாறு
- தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வரலாறு
- செப்பறை அழகிய கூத்தர் கோயில் வரலாறு
- தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனும்
- மக்கள் கவிஞர் கம்பர்
- வேதபுரத்து நாயகிகள்
- சஷ்டி அபிராமிஅந்தாதி உரை
- பதினொன்றாம் பத்து
- திருவள்ளுவர் நற்கதிப்பாமாலை
- பாபாநெஞ்சு விடுதூது
- சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை வரலாறு
- திருக்குற்றால வரலாறு
- மதுவை ஒழிப்போம் மகிழ்வைப் பெறுவோம்
வெளிவராத நூல்கள்
- மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு
- கயத்தாறு கோதண்டராமசாமி கோயில் வரலாறு
உசாத்துணை
- ச. கணபதிராமன் மறைவு: தினமணி
- ச. கணபதிராமன்: என் வாழ்க்கைச் சுவடுகள்: தினமணி
- தென்காசி வண்டிப்பேட்டை தெப்பக்குளம் காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சொந்தமானது: தீர்ப்பளித்த முஸ்லிம் நீதிபதி
✅Finalised Page