சேர்.பொன். அருணாசலம்

From Tamil Wiki
Revision as of 16:53, 2 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "சேர்.பொன். அருணாசலம் (பொன்னம்பலம் அருணாசலம்) (14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். == பிறப்பு, கல்வி == பொன்னம்பலம் அரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சேர்.பொன். அருணாசலம் (பொன்னம்பலம் அருணாசலம்) (14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த ராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியார், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) இணையருக்கு மூன்றாவது மகனாக செப்டெம்பர் 14, 1853-ல் கொழும்பு நகரில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர்.பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

சேர்.பொன். அருணாசலம் தாய் மாமனாரான சேர். முத்துக்குமாரசுவாமியின் கண்காணிப்பில் கொழும்பில் வளர்ந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வி பயின்றார். இங்கு கல்வி கற்றபோது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் இளங்கலைமானிப் பட்டம் பெற்றார். 1880இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்தையும் கற்றார்.

தனி வாழ்க்கை

சேர்.பொன். அருணாசலம் மானிப்பாயைச் சேர்ந்த சுவர்ணம் நமசிவாயம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு எட்டு பிள்ளைகள். பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன் என்ற ஆண்பிள்ளைகள். மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா ஆகிய ஐந்து பெண்பிள்ளைகள். இவர்களில் பத்மநாபன், மகேஸ்வரி, மனோன்மணி, பத்மாவதி ஆகியோர் அருணாசலம் மறைவதற்கு முன்பே இறந்து விட்டனர்.

பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன் அருணாசலம் மகாதேவா பிற்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக இருந்தார். அருணாசலம் கேட்ட கொழும்புத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் மகாதேவாவிற்கு கிடைத்திருந்தது. டொனமூர் அரசாங்க காலத்தில் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்தார். 1947-ல் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராகப் போட்டியிட்டு அவரிடம் தோல்வியடைந்தார்.

பணிகள்

இங்கிலாந்தில் பாரிஸ்டர் ஆகவும் 1875 ஏப்ரலில் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் இலங்கை திரும்பினார். 1913ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். இவ்வனுபவம் காரணமாக மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகக் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். இவ்வனுபவத்தைப் பயன்படுத்தி சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதினார். தேசாதிபதியாக இருந்த சேர்.ஆர்தர் கோர்டன் இவரைப் பதிவாளர் நாயகமாக (1888–1902) நியமித்தார். பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இப்பதவியை வகித்த காலத்திலேயே சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகவும் இருந்தார். 1913ஆம் ஆண்டு அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

அரசியல் வாழ்க்கை

அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அருணாசலம் அரசியலில் நுழைந்தார். சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் உறுப்பினராக இருந்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய (தன்னாட்சி) உணர்வால் உந்தப்பெற்றார். தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915 ஜனவரி 29 ஆம் திகதி சமூகச் சேவை சங்கத்தினை உருவாக்கினார். அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1915 ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து தேசிய இயக்க அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தினார்.

தேசிய இயக்க அரசியலுக்காக 1917 டிசம்பரிலும், 1918 டிசம்பரிலும் இரு மாநாடுகளை ஒழுங்கு செய்தார். 1919 ஜூன் 25 ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் சேமாவிருத்திச் சங்கத்தை உருவாக்கினார். இதன் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரி. சுந்தரமும் பதவியேற்றனர். இச்சங்கம் 1920 இல் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]

1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இவரே நடுவராகத் தொழிற்பட்டார். எழுத்து வடிவில் ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.[1]

1921 ஆம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தலில் பிரதிநிதிகளைக் தெரிவு செய்யும் முறை இனவிகிதாசாரப் படி இருக்கவேண்டுமென்பதாலும், கொழும்பு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சேர். ஜேம்ஸ் பீரிஸ், நு. து. சமரவிக்கிரம போன்ற சிங்கள தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், சிங்களவர் தங்களைத் தெரிவு செய்யமாட்டாரகள் என்பதனைப்புரிந்து கொண்டு இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார். 1921 ஆகத்தில் தமிழர் அடையாள அரசியலை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு பல மொழிபெயர்ப்புகள் செய்தார். A Revel in Bliss என்பது தாயுமானவர் பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு. ‘A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar’ என்ற நூலை ஜி.யூ.போப் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்தார். Studies and Translations from the Tamil, Studies and Translations, Philosophical and Religious போன்ற ஆங்கில கட்டுரைத்தொகுப்புகளையும் வெளியிட்டார். திருக்கோவையார், கல்லாடம், திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானூறு போன்றவற்றிலிருந்தும் பாடல்கள் மொழிபெயர்ப்புச் செய்தார்.

விருதுகள்/ நினைவுச் சின்னங்கள்

  • 1913ஆம் ஆண்டு இவரது அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினர்.
  • ஏப்ரல் 3, 1930ஆம் ஆண்டு அரசாங்க சபை மைதானத்தில்(தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் அருணாசலத்தின் வெண்கலச்சிலை திறந்துவைக்கப்பட்டது.
  • இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரி சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் போன்றவற்றில் திறந்துவைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றிற்கு அருணாசலத்தின் பெயர் சூட்டப்பட்டது.

மறைவு

சேர்.பொன். அருணாசலம் ஜனவரி 9, 1924-ல், தனது 71 ஆவது வயதில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயப் பிரதேசத்தில் காலமானார்.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • A Revel in Bliss (1895)
  • A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar (1897)
  • Studies and Translations from the Tamil
  • Studies and Translations, Philosophical and Religious (1937, மறு பதிப்பு: 1981)

இவரைப்பற்றிய நூல்கள்

  • ஸ்ரீ பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஜீவிய சரித்திரச் சுருக்கம், நவாலியூர் க. சோமசுந்தரப் புலவரால் செய்யுள் நடையில் எழுதப்பட்டது. (சுதேச நாட்டியம், யாழ்ப்பாணம், 1928)

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை