under review

சேரமான் கணைக்கால் இரும்பொறை

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சேரமான் கணைக்கால் இரும்பொறை சங்ககாலப் புலவர். இவரின் ஒரு பாடல் புறநானூற்றில் உள்ளது.

வரலாறு

சேர அரசர்களுள் இரும்பொறை மரபினர் என்ற கிளையைச் சேர்ந்தவர். மேலைக் கடற்கரைப் பட்டினங்களாகிய தொண்டி, மந்தை, நறவு என்ற பேரூர்களைத் தலைநகரங்களாகக் கொண்டு இரும்பொறை மரபினர் ஆட்சி செய்தனர். சேரமான் கணைக்கால் இரும்பொறை பல வெற்றிகளைக் கொடுக்கும் பெரிய வேற்படையும், உடல்வலிமையும் கொண்டிருந்தார். ஒருமுறை மதம் கொண்ட யானையை அடக்கினார். மூவன் என்ற அரசனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் கணைக்கால் இரும்பொறை வெற்றி பெற்று மூவனின் பற்களைப் பிடுங்கினார். அந்தப் பற்களை தொண்டி நாட்டு கோட்டையில் வாயிற்கதவில் வைத்தார்.

செங்கணான் என்ற சோழ அரசனுக்கும் இரும்பொறைக்கும் கழுமலம் அடுத்துள்ள திருப்போர்ப்புறத்தில் போர் நிகழ்ந்தது. இப்போரில் இரும்பொறை தோற்றார். செங்கணான் சேரனை குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தார். சிறையில் தண்ணீர் கேட்டபோது காவலர் இழிவு படுத்தியதால் அந்த நீரைப் பருகாமல் உறங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடியதாக புறநானூற்றில் ஒரு பாடல் உள்ளது. இவரின் அவைக்களப் புலவர் பொய்கையார். இரும்பொறையின் பெருமைகளை பொய்கையார் நற்றிணைச் செய்யுளில் பாடினார். சேரனின் இறப்பிற்குப் பின் பொய்கையார் கழுமலப் போரின் சிறப்பையும் அவரின் வெற்றிப் பெருமைகளையும் களவழி நாற்பது என்ற நூலில் பாடினார்.

பாடல் நடை

"சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு"

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.

உசாத்துணை


✅Finalised Page