சு. வித்தியானந்தன்

From Tamil Wiki
Revision as of 17:24, 3 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "சு. வித்தியானந்தன் (மே 8, 1924 – ஜனவரி 21, 1989) ஈழத்தின் கல்வியாளர், ஆய்வாளர், தமிழறிஞர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சு. வித்தியானந்தன் (மே 8, 1924 – ஜனவரி 21, 1989) ஈழத்தின் கல்வியாளர், ஆய்வாளர், தமிழறிஞர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். ஈழத்து கூத்துக்கலையை அடையாளப்படுத்தியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பழையில் வழக்கறிஞரான சுப்பிரமணியம், முத்தம்மா இணையருக்கு மகனாக மே 8, 1924இல் வித்தியானந்தன் பிறந்தார். வீமன்காமம் அவரை வளர்த்தெடுத்த ஊர். அவரது குடும்ப முன்னோடிகள் ஆறுமுக நாவலரின் செல்வாக்குக்குட்பட்டு கல்விக் கூடங்களை நிறுவினர். நண்பர்களாலும் அவரது மாணவர்களாலும் 'வித்தி' என அழைக்கப்பட்டார். வீமன்காமம் தமிழ் பாடசாலையில் தொடக்கக் கல்வியைக் கற்றார். தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றார். இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை இவரின் ஆசிரியர்கள். தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதலாமவர் வித்தியானந்தன். இருபத்தியாறாவது வயதில் லண்டனில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய வித்தியானந்தன் தனது மாணவியாக அறிமுகமான நுணாவிலைச் சேர்ந்த கமலாதேவி நாகலிங்கம் மீது காதல் கொண்டு 1957 இல் மனைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள். அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என்பன இவரின் பிள்ளைகளின் பெயர்கள். மனைவி கமலாதேவி அவர் நோயுற்று 1977 இல் மறைந்தார்.

ஆய்வாளர்

முனைவர் பட்டத்திற்காக பதிற்றுப்பத்தை ஆய்வுப் பொருளாக எடுத்தவர் அதனை ஆங்கில வடிவில் முடங்கிப்போக விடாமல் , "தமிழர் சால்பு' எனும் தமிழ் நூலாக மறுவரைவு செய்தார். இந்நூல், தமிழர் வரலாற்றின் தொடக்க காலப் பண்பாட்டைத் தெளிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியது.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார். இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து பேராசிரியர் வித்தியானந்தன் கலந்து கொண்டார். 1972-ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன்.

ஆசிரியப்பணி

ஆகஸ்ட் 1977இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். ஜனவரி 1979இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தரானார். யாழ்ப்பாண வளாகமாக இருந்த ஒன்றினை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு உழைத்தார். பல்கலைக்கழக மாணவர்களது தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக அவ்வவ்போது எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாயின.

மாணவர்கள்
  • கா. சிவத்தம்பி
  • க. கைலாசபதி
  • பொ. பூலோகசிங்கம்
  • ஆ. வேலுப்பிள்ளை

நாட்டாரியல்

ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தினார். தனது குருவான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகச் செயற்பாடுகளின் பரிணமிப்பாக நாட்டுக் கூத்துகளை நவீன வாழ்முறைக்கு உகந்த வகையில் நவீனப்படுத்தினார். அரங்காற்றுகை மட்டுமன்றி, பல நாட்டுக்கூத்துப் பிரதிகளை அச்சேற்றினார்

யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தோடு முரணுறும் துயரையும் சந்தித்தார். இது அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். அந்த மனச்சுமையோடு 1989 இல் அவர் மறைந்தார்.

அவரது நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது. இலங்கைத் அஞ்சல் திணைக்களம் 1997 நவம்பர் 11 அன்று வித்தியானந்தனின் அஞ்சல் தலையை வெளியிட்டது.

உசாத்துணை