சு. நடேசபிள்ளை
சு. நடேசபிள்ளை (மே 21, 1895 - சனவரி 15, 1965)) ஈழத்து தமிழ் எழுத்தாளர், கல்வியியலாளர், அரசியல்வாதி.
வாழ்க்கைக் குறிப்பு
நடேசபிள்ளை தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையா, தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப்பிள்ளையின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார். இயற்பெயர் நாகநாதன். பத்தொன்பது வயதில் பட்டதாரியான நாகநாதன் சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். இராமநாதனுடன் 1923இல் இலங்கை வந்தார் நடேசன். 1924இல் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வையாளராகவும் இருந்தார்.1926இல் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் செய்தார்.
பெயர்க்காரணம்
சேர் பொன். இராமநாதனும், சேர் பொன். அருணாசலமும் தமிழ்நாடு சென்றிருந்தபோது அருள்பரானந்த சுவாமிகள் மூலம் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டு நாகநாதனைப் பற்றி அறிந்தனர். இராமநாதன் நாகநாதனை ”நடேசன், இங்கே வா” என்று அழைத்த அன்றிலிருந்து அவர் பெயர் நடேசன் ஆகியது.
அரசியல் வாழ்க்கை
சு. நடேசபிள்ளை ஆங்கிலேய இலங்கையின் அரசாங்க சபை உறுப்பினராக 1934 முதல் 1947 வரை யாழ்ப்பாணப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக 1947 தேர்தலில் காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டு செல்வநாயகத்திடம் தோற்றார். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் சா.ஜே.வே. செல்வநாயகத்தை எதிர்த்து காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1952 முதல் 1956 வரை சுதந்திர இலங்கையின் அஞ்சல்,தந்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரானார். இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டதால் அவர் அக்கட்சியில் இருந்து பின்னர் விலகினார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை செனட் சபை உறுப்பினராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் சமயம் பயின்று ’தரிசனத்திரயம்’ என்ற நூலை எழுதினார். இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சிலவற்றை நடேசபிள்ளை எழுதினார். சென்னைத் தமிழ் வளர்ச்சிக்கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்தில் சில கட்டுரைகள் எழுதினார். சகுந்தலை வெண்பா என்னும் நூலை எழுதி வெளியிட்டார். ஆங்கிலப் பாடல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். வடமொழியில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி 343 செய்யுள்களில் அமைந்த "சகுந்தலை வெண்பா" என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். இது 1934இல் கலாநிலைய வெளியீடான ஞாயிறு என்னும் முத்திங்கள் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. இவரின் கட்டுரைகள் பல ஞாயிறு, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன. கலாநிலையம், ஆரிய திராவிட அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இவர் இருந்தார்.
நூல் பட்டியல்
- சகுந்தலை வெண்பா (1963)
- தரிசனத்திரயம்
- கதிர்காமநாதன் திருப்பள்ளியெழுச்சி
படைப்புகள் இடம்பெற்ற தொகுப்பு
- சென்னைத் தமிழ் வளர்ச்சிக்கழக கலைக்களஞ்சியம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:நடேசபிள்ளை, மயில்வாகனன்: noolaham
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.