சு. சமுத்திரம்

From Tamil Wiki
Revision as of 10:33, 2 September 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

சு. சமுத்திரம் ( 1941 – ஏப்ரல் 1, 2003)  தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

இளமை மற்றும் பணி

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941- ஆம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்த சு. சமுத்திரம் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.  கடையம் கிராமத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரி படிப்பை முடித்தார். அகில இந்திய வானொலியின் தமிழ் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். பின் மத்திய அரசின் செய்தி- விளம்பரத் துறையில் பணிபுரிந்தார்.

எழுத்து

சு. சமுத்திரம், தன் நண்பர்களுடன் இணைந்து "தேசிய முழக்கம்" என்கிற நாளிதழை வெளியிட்டார். 1973-இல் தில்லியில்  இருந்த சு.சமுத்திரம், கடல் மணி என்ற  கதையை குமுதம் இதழுக்கு அனுப்பினார். பிரசுரமான இவரது முதல் கதை இது.

சு.சமுத்திரம், அடிப்படையில் அவர் ஒரு காங்கிரஸ்காரர். இடதுசாரிக் கொள்கையில் நாட்டம் உடையவர், முற்போக்குச் சிந்தனையாளர்.

ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிக்கைகளில் சு.சமுத்திரம்  எழுதிய கதைகளில் யதார்த்தவாதமும், மனித நேயமும், எள்ளல் ஆகியவையும் எடுப்பாகத் தென்பட்டதால், சு.சமுத்திரம் இடதுசாரி வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளில் சு.சமுத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அவற்றில் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு கொண்டிருந்தார்.  இந்த இலக்கிய சங்கத்தில் ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடைபெறும். அதில் ஊருக்குள் புரட்சி,  சோத்துப் பட்டாளம் ஆகிய நாவல்ள் வெளியிடப்பட்டது. சு.சமுத்திரம் ,  கிறிஸ்தவ இலக்கிய சங்கம் பற்றி தாமரை, செம்மலர் ஆகிய இதழ்களில் எழுதியதால்  இடதுசாரி கட்சியை சேர்ந்தவர் என்று  முத்திரை குத்தப்பட்டார்.

சு.சமுத்திரம் , உலக புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடை ஏற்றினார்.  ஏகலைவன் பதிப்பகத்தை தொடங்கி தம் படைப்புகளை வெளியிட்டார்.

இலக்கிய இடம்

சு.சமுத்திரம், வணிக இதழ்களில்   எழுதினாலும் அந்த எழுத்து அனைத்தும் ஒரு நோக்கத்தொடு எழுதப்பட்டவை. இலக்கியத்தில் ஏழை எளியவர்களைப் பற்றி, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி சிறுகதைகளில் எழுதியவர்களை முன்னோடியாகக் கொண்டு எழுதப்பட்டவை.

"மனித மனத்தின் சிறுமையை, நம் அமைப்புகளின் ஈவிரக்கமற்ற தன்மையைப் பிடித்து நிறுத்திக் கன்னத்திலறைவதுபோன்ற நடையில் எள்ளலும் எரிச்சலுமாக எழுதியவர் அவர். வாசக ஊகத்துக்கோ கற்பனைக்கோ ஒரு துளிகூட மிச்சம் வைப்பதில்லை. பல கதைகள் ரத்தம் கொதிக்கச்செய்பவை. ஊமை ஜனங்கள், கைவிடப்பட்ட மக்கள் – அவருடைய மொழியில் சொல்லப்போனால் சோற்றுப்பட்டாளம்- தான் அவருடைய கதைமனிதர்கள். ஒவ்வொரு கதையும் அந்த மனிதர்களுக்காக நரம்பு புடைக்க தொண்டை தெறிக்கக் குரலெழுப்புகிறது. சு.சமுத்திரம், கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருந்தார்" என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.


அங்கீகாரம்

சு. சமுத்திரத்தின்  இலக்கியப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர் எழுதிய பாலைப் புறா நாவலை தமிழ்நாடு அரசின் சுகாதார துறை 5 ஆயிரம் பிரதிகளை விலை கொடுத்து வாங்கியதோடு, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தது.

இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்கள் வரிசையில், இரா. காமராசு எழுதிய சு. சமுத்திரம் பற்றிய நூல்  வெளியிடப்பட்டுள்ளது


படைப்புகள்

  சு. சமுத்திரம், 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள்  தெலுங்கு,  மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1990ல்  சு. சமுத்திரம் எழுதிய "வேரில் பழுத்த பலா" நாவலுக்கு 1990- ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவரது 'வாடாமல்லி'  நாவல் திருநங்கையரின் வாழ்வைப் பற்றிப் பேசும் முதல் தமிழ் நாவலாகும்.

விருதுகள்

சு. சமுத்திரம் பெற்ற விருதுகள்;

சாகித்திய அகாதமி விருது -1990.

தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்

இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு.

கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளை (மறைவுக்குப்பின்)

நூல்கள்

சு. சமுத்திரம் எழுதிய கீழ்காணும்  நூல்கள் அனைத்துமே நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன;

ஆகாயமும் பூமியுமாய்....

இல்லந்தோறும் இதயங்கள்

இன்னொரு உரிமை

ஈச்சம்பாய்

ஊருக்குள் ஒரு புரட்சி

என் பார்வையில் கலைஞர்

எனது கதைகளின் கதைகள்

ஒத்தைவீடு

ஒரு கோட்டுக்கு வெளியே

ஒரு சத்தியத்தியன் அழுகை

ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும

கடித உறவுகள

காகித உறவு

குற்றம் பார்க்கில்

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்

சத்திய ஆவேசம்

சமுத்திரக் கதைகள்

சமுத்திரம் கட்டுரைகள்

சாமியாடிகள்

சிக்கிமுக்கிக் கற்கள்

சோற்றுப்பட்டாளம்

தாய்மைக்கு வறட்சி இல்லை

தராசு

தலைப்பாகை

தாழம்பூ

நிழல் முகங்கள்

நெருப்பு தடயங்கள்

பாலைப்புறா

புதிய திரிபுரங்கள்

பூ நாகம்

மண்சுமை

மூட்டம்

லியோ டால்ஸ்டாய் (நாடகம்)

வளர்ப்பு மகள்

வாடாமல்லி

வெளிச்சத்தை நோக்கி

வேரில் பழுத்த பலா

மறைவு

2003- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3- ஆம் நாள் சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சு. சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம்பெருகக் கிடந்தார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டுசென்று சேர்த்தார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்கமுடியாது என எண்ணி அவசியமான அறுவை சிகிழ்ச்சை செய்யாமல் இரண்டரை மணிநேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருந்தார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது சு. சமுத்திரம் இறந்திருந்தார்

உசாத்துணை

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல், சு. சமுத்திரம், தினமணி இணைய இதழ்

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/apr/29/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-490460.html

கடலடியில், சு. சமுத்திரம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்:

https://www.jeyamohan.in/28818/

சு. சமுத்திரத்தின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகம்;

https://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-23.htm