சு. அர்த்தநாரீச வர்மா
சு. அர்த்தநாரீச வர்மா, (சேலம் சு. அர்த்தநாரீச வர்மா) (ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா) (கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா) (வரகவி அர்த்தநாரீச வர்மா) (பிறப்பு: ஜூலை 27, 1874; இறப்பு: டிசம்பர் 7, 1964) ஒரு கவிஞர். எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர். சமூகப் போராளியாகத் திகழ்ந்தார். சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். சமூகம், சமயம் சார்ந்து பல நூல்களை எழுதினார். பல இதழ்களை நடத்தினார்.
பிறப்பு, கல்வி
சு. அர்த்தநாரீச வர்மா, சேலத்தில் உள்ள சுகவனத்தில், சுகவன நாயகர்-இலக்குமி அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார். மெட்ரிகுலேஷன் படிப்பை நிறைவு செய்தார். திருப்பூந்துருத்தி, இந்திரபீடத்தில் சைவக் கல்வி பயின்றார். சிவயோகி கரபாத்திர சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருத மொழிகளைக் கற்றிந்தார். சோதிடம், சித்த மருத்துவம், கர்நாடக இசை பயின்று தேர்ந்தார்.