சுரேஷ் மான்யா

From Tamil Wiki
Revision as of 10:30, 28 May 2022 by Ramya (talk | contribs)

சுரேஷ் மான்யா (பி 1980) தமிழ் சிறுகதை ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

சுரேஷ் மான்யா திருச்சி மாவட்டம் இலால்குடியில் 14.04.1980 அன்று பிறந்தார். பெற்றோர்  தங்கராஜ் - ஜெனோவா. இவர் இலால்குடி  அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை மேலூர் அருள்மிகு கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறையில் பட்டயப் படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இளங்கலை சமூகவியலும் படித்தார்.

தனி வாழ்க்கை

சுரேஷ் மான்யாவின் சொந்த ஊர் இலால்குடியாய் இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லியல் சின்னங்களின் மீதான ஈடுபாட்டின் காரணமாய் 2013ஆம் வருடம் புதுக்கோட்டைக்கு குடிபெயர்ந்தார். தற்போது பொதுநூலகத் துறையின் இளநிலை உதவியாளராக புதுக்கோட்டை மாவட்ட மையநூலகத்தில் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சுரேஷ் மான்யா 2012 ஆம் வருடம் தனது நண்பர் மா.செல்லத்துரையுடன் இணைந்து ‘உயிர்மொழி’ என்ற சிற்றிதழைத் தொடங்கி அதன் ஆசிரியராய் இருந்தார். சபரிநாதன், சா.தேவதாஸ், இசை, பெருமாள்முருகன் ஆகியோரின் படைப்புகள் அவ்விதழில் வெளியாகியுள்ளன. இரண்டு இதழ்கள் வெளிவந்தபின் நிதிச்சுமையின் காரணமாக தொடர்ந்து ‘உயிர்மொழி’ வெளியாகாமல் நின்று போனது.

இவரது முதல் சிறுகதை உயிர் எழுத்து இதழில் 2016ல் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கல்நாகம்’ 2018ல் யாவரும் பதிப்பாய் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ஜெயமோகன், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, கந்தர்வன், வண்ணநிலவன், தி.ஜானகிராமன் ஆகியோரைத் தனது இலக்கிய ஆக்கங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருது

  • சௌமா இலக்கிய விருது (2019)