second review completed

சுதாகினி டெஸ்மன் றாகல்

From Tamil Wiki

சுதாகினி டெஸ்மன் றாகல் (பிறப்பு: அக்டோபர் 12, 1978) ஈழத்துப்பெண் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுதாகினி டெஸ்மன் றாகல் இலங்கை மட்டக்களப்பில் சுப்பிரமணியம், வாலாம்பிகை இணையருக்கு அக்டோபர் 12, 1978-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை மட்டக்களப்பு ஏறாவூர் மகாவித்தியாலயத்தில் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பட்டமாகக் கற்றார். கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றார். 2008 முதல் 2018 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு ஆசிரியர் மத்திய நிலையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

சுதாகினி டெஸ்மன் பெண் சஞ்சிகையின் எழுத்தாளர் வட்ட உறுப்பினராகவும் சரணி கலைக்கழகத்தின் உபசெயலாளராகவும் ஏறாவூர்பற்று கலாசாரப் பேரவையின் உறுப்பினராகவும் உள்ளார். தலைமைத்துவம், நாடகப் பயிற்சி பட்டறை போன்றவற்றின் ஆலோசகராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சுதாகினி டெஸ்மன் றாகல் கட்டுரை, விமர்சனங்கள், கவிதை, சிறுவர் கதை, நாடகங்கள் எழுதினார். 'கனல்', 'கண்ணாடி முகங்கள்' போன்ற கவிதைத் தொகுப்புக்களில் இவரது கவிதைப் படைப்புக்கள் வெளியாகின. 'அடையாளம்' என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 2013-ல் 'சொர்க்க வனம்' என்னும் சிறுவர்கதை அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றது. இது கலாசார அமைச்சினால் நூலாக வெளியிடப்பட்டது.

ஈழத்துப் பெண்கள் சஞ்சிகைகள், எண்பதுகளுக்குப் பின் ஈழத்தில் தமிழ்பேசும் பெண்கள் கவிதைகளின் போக்கும் வளர்ச்சியும், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச பாரம்பரிய விளையாட்டுக்கள், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தின் வாழ்வியற் சடங்குகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

விருதுகள்

  • 2013-ம் ஆண்டு சிறந்த நடிப்புக்கான விருது அகில இலங்கை ரீதியில் இவருக்கு வழங்கப்பட்டது.
  • கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதை எழுத்தாளர் பெற்றுள்ளார்.
  • சுதாகினியின் 2016-ம் ஆண்டு 'மறையாத மறுபாதி' என்னும் சிறுகதை தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதுடன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • அடையாளம்

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.