being created

சி. மோகன்

From Tamil Wiki

Work in progress by Muthu Kalimuthu

சி. மோகன் (C.Mohan) நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வு, விமர்சனம், கட்டுரை, ஓவியம், திரைப்படம், மொழிபெயர்ப்பு, உடையாடல், நூல் பதிப்பு, சிறுபத்திரிகை ஆகியவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. விமர்சன கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறந்த உரையாடல்காரராக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பாதிப்பை உருவாக்கியவர்.


பிறப்பு, கல்வி

சி. மோகன், 1952 ஜூன் 12ஆம் தேதி மதுரையில் பிறந்தவர். வேறுஊர்களில் இளமைக்கால வாழ்க்கை அமைந்தாலும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தோடு 1967ல் மதுரைக்கு வந்திருக்கிறார்கள். 1967ல் இருந்து 1983ல் வரை மதுரையில் வாழ்ந்திருக்கிறார். மதுரையில் படிக்கும்போது எழுத்தாளர் ஜி.நாகராஜனிடம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

தனி வாழ்க்கை

ஜி. நாகராஜனின் இறுதிக்காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்தது தொடங்கி தத்தநேரியில் தகனம் செய்யும் வரை உடன் இருந்திருக்கிறார். அந்த நினைவுகளை ‘ஓடிய கால்கள்’ என்ற சிறுகதையாகவும் எழுதியிருக்கிறார். ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும் என்ற நூலின் வாயிலாக அவரது ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார். பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது நாகர்கோவிலுக்கு அடிக்கடி சென்று ஜி.நாகராஜன் எழுத்துக்களைத் தொகுக்கும் பணியைச் செய்திருக்கிறார். சாகித்ய அகாடமி வெளியிட்ட இலக்கியச் சிற்பிகள் என்ற தொகுப்பில் ஜி.நாகராஜன் பற்றி எழுதியிருக்கிறார்.

மதுரையில் வாழ்ந்த ப.சிங்காரம் அவர்களை சந்தித்திருக்கிறார். புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் நாவல்கள் குறித்த சி.மோகனது கட்டுரை வாயிலாக அந்த நூலின் மீதான வெளிச்சம் பரவியது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழ் முதுகலை படிக்கும் நாட்களில் சிறுபத்திரிகை செயல்பாடுகளில் தீவிரமாக இருந்திருக்கிறார். விழிகள், வைகை போன்ற சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற சி மோகனின் மொழியாக்கப் படைப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.

ஏறத்தாழ எண்பது கட்டுரைகள் கொண்டது, ‘சி.மோகன் கட்டுரைகள்’ தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் அகப்படுத்தியிருக்கும் பரப்பு மிகவும் விசாலமானது. படைப்பிலக்கியம் குறித்தும், ஓவியம் – சிற்பம் – இசைத் துறைகளின் பிரகாசக் கோபுரங்களான ஆளுமைகளைக் குறித்துமான பெருநூல். வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்குமென, அவர் தன் பெருவாழ்விலிருந்து சேர்த்திருக்கும் கலையனுபவ ஆவணம். கலை நுகர்வில் ஆழ்ந்த நெடும் பயணத்தின் திரட்டு இது.

மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் உச்சங்களுள் ஒன்றாகக் கொண்டாடப்படுவது, இவர் மொழிபெயர்த்த, ஜியாங் ரோங் எழுதிய சீன நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. தமிழ் மொழியாளுமைக்காகவும் மிகப் பெரிதும் சிலாகிக்கப்பட்டது இது; இந்தத் துறையில் மிகச் சிறந்த முன்மாதிரியாக ஸ்தானம் பெற்றிருக்கிறது. நவீன மனிதனின் வன்மப் பேராசையால் வேரற்றுப்போனதொரு தொல்குடி வாழ்வும் அழிந்துபட்ட இயற்கையும் வாசிப்பில், மனச் சருமம் உரித்து கசியச் செய்யும் ரத்தம் பிறகு ஒருபோதும் உலர்வதில்லை.

பலரின் நூல்களில் அவரது கருத்துகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. பலரின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கின்றன. சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, சம்பத்தின் ‘இடைவெளி’ முதலிய நூல்களின் உருவாக்கத்திலும் இவரது கையும் கருத்தும் ஒருமித்திருக்கின்றன.

இவரது கலை நாளக் கற்றைகளில் உலவி உயிரளிக்கும் இலக்கியத்தோடு, ஓவியம் – ஓவியர்கள் மீதான தீவிர நாட்டமும் பரவசம் கொண்டு பிணைந்திருக்கிறது. இதுதான் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ எனும் நாவலாயிற்று. இந்த நாவல், மறைந்த ஓவியர் ராமானுஜத்தைப் பற்றியது. ஒரு ஓவியனைக் குறித்து சி.மோகன் தன் மனமொழியின் நிறங்கள் கொண்டு தீட்டியிருக்கும் ஓவியம் இது.

இலக்கிய இடம், மதிப்பீடு

'தண்ணீர் சிற்பம்’, ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ எனும் அவரது கவிதைத் தொகுப்புகளின் கவிதைகள், எளிமையான வாசிப்பு அணுகுதலில் ஒத்திசைபவை. எளிமையாக வெளிப்பட்டிருப்பதாலேயே பல கவிதைகள் அதைத் தன் ஒற்றைக் குணமாகக் கொண்டிருப்பதில்லை. ‘மனவியல் அறிந்த மகத்தான கவிஞராக விளங்குகிறார் சி.மோகன்’ என்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன்.

படைப்புகள்

நூல்கள்
  • மஞ்சள் மோகினி (சிறுகதைத் தொகுப்பு)
  • நவீன உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • ரகசிய வேட்கை (சிறுகதைத் தொகுப்பு)
நாவல்கள்
  • விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
  • கமலி
சிறுகதைகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஓநாய் குலச்சின்னம்
கவிதைகள்
  • தண்ணீர் சிற்பம்
  • எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை
கட்டுரைகள்
  • காலம் கலை கலைஞன்
  • நடைவழிக்குறிப்புகள்
  • நடைவழி நினைவுகள்
  • ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும்
  • சுந்தரராமசாமி சில நினைவுகள்
  • சி.மோகன் கட்டுரைகள்
நேர்காணல்கள்
  • அங்கீகரிக்கப்படாத கனவின் வலி

விருதுகளும் பரிசுகளும்

  • விளக்கு விருது (2014)
  • கனடா இலக்கியத்தோட்ட விருதுகள் (2013)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.