சி. பங்காருப்பத்தர்
சி. பங்காருப்பத்தர் (பிறப்பு: பிப்ரவரி 3, 1871) தமிழ்ப்புலவர். சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர் என பலதுறைகளில் செயல்பட்டவர். விவேக தர்ப்பணம் மொழிபெயர்ப்பு முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் நமண்டியில் பிப்ரவரி 3, 1871-ல் பிறந்தார். பெற்றோர் சின்னத்தம்பிப்பத்தர், கங்கையம்மை.விஸ்வகர்ம குலம். நெற்குணம் எனும் ஊரில் தமிழும், தெலுங்கும் கற்றார். புதுச்சேரியில் குலத்தொழிலைக் கற்றார். புதுச்சேரி, குயப்பாளயம் பு.அ. பெரியசாமிப் பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கைவல்ய வேதாந்த நூலை வளவனூர் மடம் சண்முக அடிகளிடம் கற்றார். புதுவை சாந்தானந்த குருசரஸ்வதி அடிகளிடம் வடமொழி கற்றார். இலக்கண இலக்கியங்களை மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.
1902-ல் முத்தியாலுப்பேட்டை கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1906-ல் கல்வே கல்லூரி ஆசிரியராக இருந்தார். 1922-ல் விஸ்வகர்ம அவையை புதுவையில் நிறுவினார்.
இலக்கிய வாழ்க்கை
1895-ல் வித்யாபிவிருத்தி அவையில் உறுப்பினரானார். அந்த அவையிலிருந்து வெளிவந்த 'இலகுவேகம்’ இதழில் எழுதினார். தெலுங்கில் சாந்தானந்த அடிகள் எழுதிய வேதாந்த நூலான விவேக தர்ப்பணத்தை தமிழில் மொழிபெயர்த்தார்.
1912-ல் கலைமகள் கழகத்தை ஏற்படுத்தினார். உறுப்பினர்களுடன் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளின் தலைமையின் கீழ் சொற்பொழிவுகள் செய்தார். "கலைமகள்" இதழை நடத்தி அரிய கட்டுரைகளை வெளியிட்டார். செய்யுள்கள் பல பாடியுள்ளார். கட்டுரைகள் பல எழுதியுள்ளார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.
நூல் பட்டியல்
- விவேக தர்ப்பணம் (மொழிபெயர்ப்பு)
- தனிப்பாடல்கள்
உசாத்துணை
✅Finalised Page