சி. நாகலிங்கம் பிள்ளை
சி. நாகலிங்கம் பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் சின்னத்தம்பியார், அன்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் அண்ணன் சி. தாமோதரம் பிள்ளை. வண்ணார் பண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் நாவலரவர்களால் இவருக்கு ஏடு தொடக்கப்பட்டது. நன்னூல், திருக்குறள், திருக்கோவையார், யாப்பருங்கலக்காரிகை ஆகியவற்றுடன் சித்தாந்த சாஸ்திரங்களையும் செந்திநாதையர், இளையதம்பி உபாத்தியாயர் ஆகியோரிடம் கற்றார். செந்திநாதையர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சமஸ்கிருதம் முறையாகப் படித்தார். நாவலர், பொன்னம்பலப்பிள்ளை ஆகியோர் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்தில் வாரந்தோறும் நிகழ்த்திவந்த சமய, புராண, விரிவுரைகளை கேட்டார். 1879இல் தந்தை, தாய், தமையன் ஆகியோருடன் சிதம்பரத்துக்குச் சென்று அங்கேயே தங்கினார்.
பதிப்பாளர்
1930இல் இலங்கைக்குத் திரும்பி அச்சியந்திரசாலையை வதிரியில் நிறுவினார். நாலு மந்திரி கும்மி, கரவை வேலன் கோவை- உரை, சி. தாமோதரம்பிள்ளை சரித்திரம், நல்லைவெண்பா, தஞ்சை வாணன் கோவை, சந்தியாவந்தன ரகசியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.
இலக்கிய வாழ்க்கை
சி. நாகலிங்கம் பிள்ளை புராணங்கள் பல எழுதினார். "ஞான சித்தி” என்ற பத்திரிகையை நடத்தினார்.
நூல் பட்டியல்
- திருநெல்வாயிற் புராணம் (1934)
- தகழிண கைலாச புராணம்
- கதிர்காம புராணம் (செய்யுள்) (1932)
- திருவைகற் புராணம் (1942)
- திருத்திலதைப் பதிப் புராணம்
பதிப்பித்த நூல்கள்
- நாலு மந்திரி கும்மி
- கரவை வேலன் கோவை உரை
- சி. தாமோதரம்பிள்ளை சரித்திரம்
- நல்லைவெண்பா
- தஞ்சை வாணன் கோவை (சொக்கப்ப நாவலர் உரை)
- சந்தியாவந்தன ரகசியம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.