சி. கமலநாதன்
சி. கமலநாதன் (அக்டோபர் 2, 1931 - ஏப்ரல் 18, 1992) மலேசியாவின் புதுக்கவிதை தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார். தாசரதீ, ரசிகன், ஆதிநாராயணா எனும் புனைப்பெயர்களில் அறியப்படுகிறார்.
பிறப்பு
சி. கமலநாதன் அக்டோபர் 2, 1931 சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பூச்சோங் நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னத்தம்பி குப்புசாமி. பெற்றோர் சின்னத்தம்பி - ஆதிலெட்சுமி ஆவர்.
கல்வி, தொழில்
சி. கமலநாதன் தமிழாசிரியராகவே தன் பணியைத் தொடங்கினார். தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணி ஓய்வும் பெற்றார்,
இலக்கிய வாழ்க்கை
கோ. சாரங்கபாணி, பைரோஜி நாராயணன், துரைசாமி போன்றோரின் ஊக்குவிப்பால் 1948ல் எழுத்துத் துறையில் ஈடுபட்டார் சி. கமலநாதன். குட்டிக்கதை, சிறுகதை, கட்டுரை, வானொலி நாடகம், மலாய் கதைகள், கவிதை, மொழிப்பெயர்ப்பு என பல துறைகளில் இவர் பங்களித்துள்ளார். மேலும் நாட்டுப்புற பாடல்களைத் தொகுக்கும் பணியிலும் ஆர்வமாகச் செயல்பட்டார், இவரது படைப்புகள் தமிழக ஏடுகளான குமுதம், ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது. இவரது படைப்புகள் தனி நூல்களாக இடம்பெறவில்லை.
முதல் புதுக்கவிதை
1965, ஏப்ரல் மாதம் தமிழ் மலர் நாளிதழில் சி. கமலநாதன் எழுதிய 'காலப்படகுகள்' கவிதையே மலேசியாவில் முதல் புதுக்கவிதை எனக் குறிப்பிடப்படுகிறது.
மரணம்
சி. கமலநாதன், ஏப்ரல் 18, 1992ல் மரணமடைந்தார்.