சி.வை. தாமோதரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:03, 20 January 2022 by Ramya (talk | contribs)


சி.வை. தாமோதரம் பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901) பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த முக்கியமான தமிழறிஞர்களில் ஒருவர்.

தனிவாழ்க்கை

சி.வை. தாமோதரம் பிள்ளை, யாழ்ப்பாணம் புத்தூர் அருகே சிறுப்பிட்டி என்ற கிராமத்தில் 12.09.1832 இல் பிறந்தார். அவர் பிறந்தது ஏழாலை என்ற குக்கிராமமாக இருந்தாலும் சிறுப்பிட்டி கிராமத்தையே தன் சொந்த ஊராகத் தாமோதரம் பிள்ளை கூறுகிறார். தந்தை வைரவநாதன், தாய் பெருந்தேவி ஆகியோருக்கு மூத்தமகனாகப் பிறந்தார். பாரம்பரியமாகத் தமிழ் உணர்வு உடைய குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் முதலில் யாழ்ப்பாணம் வள்ளியம்மை என்ற பெண்ணை மணந்தார். மனைவி இறந்தபின் மீண்டும் மறுமணம் புரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின் மனைவி இறந்தார். பின் 1890 இல் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பெண்ணை மணந்தார். மீண்டும் இரண்டு பிள்ளைகள். இந்த மனைவியுடன் சென்னையில் வாசம் செய்தார். இவரின் மூன்று மனைவிகளுக்குமாகப் பத்துப் பிள்ளைகள் உண்டு. இவர்களில் எட்டுப் பேர் சி.வை. தாமோதரம் பிள்ளை உயிரோடு இருந்தபோதே இறந்துவிட்டனர். எஞ்சிய இரண்டு பேரில் அழகுசுந்தரம் என்ற மகன் கிறிஸ்தவச் சமயத்திற்கு மாறிவிட்டார். அதனால் சி.வை. தாமோதரம் பிள்ளை அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். கடைசிவரை மகனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.


மகன்

சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகன் அழகுசுத்தாம் கிறிஸ்தவர் ஆனபின் தன் பெயரை பிரான்சிஸ் கிங்ஸ்பெச் தேசிகர் என்று வைத்துக்கொண்டார். இவர் சிறுவயதில் மெசபடோமியாவிற்கு ராணுவ வீரராகச் சென்றிருந்தார். இவர் திருவாசகத்தையும் சுவிசேஷத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதில் பிரபலமாயிருந்தார். இவர் "கிறிஸ்து தேவ உலகிலிருந்து இறங்கியவர் அல்லர். அவர் மனிதராக இருந்து தெய்வமானவர்” என்று பிரச்சாரம் செய்தார். கட்டுரையாகவும் எழுதினார். இது கிறிஸ்தவப் பணியாளர்களிடம் வெறுப்பை உண்டாக்கியது. இதனால் கிங்ஸ்பெரி திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இவர் தன் இறுதிக்காலத்தில் எழுதிய 'நான் ஏன் கிறிஸ்தவன் ஆனேன் என்ற சிறு நூல் பற்றி அப்போது பரவலாகப் பேசப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் இவரைப் பல்கலைக்கழ பதிப்புக்குழு உறுப்பினராக ஏற்றுக்கொண்டது. பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராவ்பகதூர் என்ற விரு கொடுத்தது.


கல்வி

ஈழத்தில் தந்தையிடமோ உறவினரிடமோ திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரிடமோ தமிழ் படிக்கும் வழக்கம் இருந்தது. சி.வை. தாமோதரம் பிள்ளையும் ஆரம்பக்காலத்தில் நிலாப்பள்ளியில் தந்தையிடம் படித்தார். சுன்னாகம் முத்துக்குமார நாவலரிடம் இலக்கணம் படித்தார். பின்னர் வட்டக்கோட்டை கல்விநிலையத்திலும், தெல்லியம்பதி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும் படித்தார் ( 1844-52 ). இக்காலத்தில் தமிழ்ப்புலவர் படிப்பில் சான்றிதழ் பெற்றார். ஆங்கில மொழி அறிவும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் இக்காலத்தில் பெற்றார். 1857 இல் சென்னைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது சி.வை. தாமோதரம் பிள்ளை மாணவராகச் சேர்ந்தார். பி.ஏ. படிப்பு முடித்தபோது சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு வயது 25. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராகப் பட்டம் பெற்றார்.

தொழில்

படிப்பு முடிந்ததும் தான் படித்த பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தக் காலத்தில் சென்னையிலிருந்து தினவர்த்தமானி என்னும் பத்திரிகை வியாழக்கிழமைதோறும் வந்தது. இதன் ஆசிரியராக பெர்சிவல் பாதிரியார் இருந்தார். அவர் இப்பத்திரிகையின் பொறுப்பிலிருந்து விலகியபோது தாமோதரம் பிள்ளையைச் சிபாரிசு செய்தார். இதற்காக சி.வை. தாமோதரம் பிள்ளை சென்னைக்கு வந்தார் . இக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த பிரிட்டிஷ் பேராசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் (பர்கால், வால்டர், எலியட், லூசிங்கடன் போன்றோர் ) தமிழ் கற்பித்தார். 1857 இல் இவர் கோழிக்கோடு உயர்தரப் பாடசாலையிலும் சென்னை ராஜதானிக் கல்லூரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார். சென்னை அரசாங்க கணக்குத் துறையிலும் அதிகாரியாக வரவு செலவு பணியாற்றியிருக்கிறார். இவர் உயர்பதவியில் இருந்தபோது சட்டப்படிப்பு படித்து ( 1871 ) நீதிமன்றப் பணிக்குச் சென்றார் . புதுக்கோட்டை சமஸ்தான நீதிபதியாக இருந்தபோது ஓய்வு பெற்றார் (1882 ). தன் இறுதி காலங்களில் வக்கீல் தொழில் செய்தார்.

இலக்கியப் பணி

தன்னுடைய 22 வயதில் 1854 -ல் நீதி நெறி விளக்கம் என்ற நூலை அச்சில் ஏற்றினார். தன் வாழ் நாளில் பத்து பழந்தமிழ் நூல்களை நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கிறார். சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த நூல்களின் முகவுரைகளில் அவரின் விசாலமான தமிழ் அறிவு வெளிப்படுகிறது. அரசு தனக்குக் கொடுத்த ஓய்வூதியம் முழுவதையும் ஆய்வுப்பணிக்கே செலவழித்தார். சி.வை. தாமோதரம் பிள்ளை கும்பகோணத்தில் தங்கினார். நூல்களைப் பதிப்பிக்க வசதியான இடமாகவும் வக்கீல் தொழில் செய்ய ஏதுவாகவும் இருந்ததால் ஓய்வுபெற்ற பின்பு கும்பகோணம் அமைந்தது.

பதிப்பாளராகவும், உரை நடையாளராகவும் இருந்தார். உதயதாரகை பத்திரிகையில் இவர் ஆசிரியராக இருந்தபோது சைவசமயம் குறித்த பல உரைநடைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் என நான்கு மொழிகளை அறிந்தவர். அரசுப் பேரகராதித் தொகுப்புக் குழு உறுப்பினர், கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறை உறுப்பினர் என்ப பல பதவிகளில் இருந்தவர். சென்னை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் இருந்தபோது தமிழ் மாணவர்களை சந்திப்பதும் ஊக்கப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பிற பணிகள்

சி.வை. தாமோதரம் பிள்ளை யாழ்ப்பான ஏழாலை சைவப்பிரகாச சபையை நிறுவியவர்.


பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள்

பிள்ளை யாழ்ப்பாணம் மிஷன் வித்தியாசாலையில் உபாத்தியராக இருந்தபோது மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடத்தில் ' நீதிநெறி விளக்க'த்தைப் பதிப்பித்தார் ( 1854 ). இதே ஆண்டில் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை வெளியிட்டார். உ.வே.சா. போன்றோர் பதிப்புக்கு இது முன்னோடி . 'வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் உரையும் ’ நூலை வெளியிட்டபோது ( 1881 ) தமிழ் இலக்கணக்கடல்களாக விளங்கிய அறிஞர்கள் இப்படி ஒரு நூலைக் காதால் கூடக் கேட்டதில்லையே என்றார்களாம். 1883 இல் திருத்தணிகை புராணத்தையும் இறையனார் அகப்பொருள் மூலம் நக்கீரர் உரை ஆகியவற்றை வெளியிட்டார். இறையனார் உரை வெளியான பிறகு தமிழ்மொழியை அகத்தியருடன் இணைத்துப் பேசும் வழக்கம் தீவிரமாகிஇருக்கிறது. இதை சி.வை. தாமோதரம் பிள்ளை கண்டித்திருக்கிறார்.

1885 இல் தொல்காப்பியம் பொருளதிகாரத்தை வெளியிட்ட போது இவர் பெரும் அளவில் கைப்பணத்தை இழந்திருக்கிறார். இந்த நூலைப் பதிப்பிக்க இவர் முன்உதவித் திட்ட அறிவிப்பை வெளியிட வேண்டி வந்திருக்கிறது. இதற்கு மிகவும் உதவியவர் சுப்பிரமணிய தேசிகர். இந்த நூல்களை வெளியிட்ட ஆழ்ந்த அனுபவத்தின் பின்புதான் சி.வை. தாமோதரம் பிள்ளை கலித்தொகையைப் பதிப்பித்தார் ( 1885 ). இவர் இந்நூலைப் பதிப்பிக்க ஆறுக்கும் மேற்பட்ட பிரதிகளைப் பரிசோதித்திருக்கிறார். இவற்றில் திருவாவடுதுறை பிரதியே நல்லபிரதி என்பதைக் கடைசியில் கண்டுபிடித்தார். கலித்தொகை பதிப்பித்தபோது அரசுமுறை மன்ற நடுவராய் இருந்தார். அதனால் புதுக்கோட்டை முகவரியில் இந்நூல் வெளிவந்தது. 1889 இல் ' இலக்கண விளக்கம் ' வந்தது . இதே ஆண்டில் சூளாமணியைப் பதிப்பிக்கத் திருவாவடுதுறைப் பிரதியைப் பயன்படுத்தினார். இந்தச் சமயத்திலும் கைப்பணத்தை இழந்திருக்கிறார். இவர் இந்து பத்திரிகையில் ஒருமுறை " என் கைப்பணம் இதுவரை ரூபாய் 3500 க்கு மேல் செலவழிந்துவிட்டது " என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். 1890,91 ஆம் ஆண்டுகளில் 'தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை'யை முழுவதுமாக வெளியிட்டார். இந்தச் சமயத்தில் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார். அங்குச் சில நாட்கள் இருந்துவிட்டுச் சென்னை வந்தார். இறுதியாக அவர் வெளி யிட்டது அகநானூறு பதிப்பு .

சூளாமணி வசனநூல், ஏசுவரலாறு, இராமன் கதை, சைவ சமயம் தொடர்பான சில உரைநடைகள் போன்றவற்றையும் 6 , 7 ஆம் வகுப்பு பாடநூல்கள் சிலவற்றையும் சி.வை. தாமோதரம் பிள்ளை வெளியிட்டுள்ளார்.

முதலியார் எனச் சிலரைச் சொல்லலாம. இவர்கள் எல்லோரும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுக்குப் பிற்பட்ட இலக்கியங்களில் கவனம் செலுத்தியவர்கள். சி.வை. தாமோதரம் பிள்ளை இவர்களிடமிருந்து வேறுபட்டு , சங்க இலக்கியங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்தினார் .

பதிப்பாளராக சிரமங்கள்

சி.வை. தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாவைப் போல் ஏடு தேடி அலைந்திருக்கிறார் . தமிழ் ஏட்டுப் பிரதிகளைத் தேடி அலைந்த அனுபவத்தை அவர் விரிவாக எழுதவில்லை என்றாலும் பதிப்புகளின் முகவுரையில் கோடிட்டுக் காட்டுகிறார். ஏடுகளில் உள்ள தவறு, அதைத் தாளில் பெயர்த்தெழுதும்போது சிரமம் பற்றி குறிப்பிடுகிறார். பலரிடம் ஏடு தேடி அலைந்த ஏமாற்றத்தையும் எழுதியிருக்கிறார் .

சி.வை. தாமோதரம் பிள்ளை தான் சேகரித்த ஏட்டுப் பிரதிகளை முதலில் பிரதி செய்துவிட்டுத் தகுதியான அறிஞர்களின் உகவியடன் பாடபேதங்களைக் குறித்துக்கொண்டு திருத்திய பிரதியையே அச்சுக்கு கொடுப்பார்.

வெளியிட்ட நூல்கள் பட்டியல்

  • நீதி நெறி விளக்கம்- 1854
  • தொல்காப்பியம் சேனாவரையர் - 1854
  • வீரசோழியம் மூலம் – 1881
  • பெருந்தேவனார் உரை - 1881
  • திருத்தணிகை புராணம் - 1883
  • இறையனார் அகப்பொருள் மூலம் – 1883
  • நக்கீரர் உரை – 1883
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் - 1885
  • கலித்தொகை - 1885
  • இலக்கண விளக்கம் – 1889
  • சூளாமணி - 1889
  • தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை - 1890,91
  • அகநானூறு - 1891

பதிப்பு முக்கியத்துவம்

தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முன்னோடிகளாகப் புதுவை நயனப்ப முதலியார், திருவேங்கடாசல முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார் ( 1795-1852 ), ஆறுமுக நாவலர் ( 1822-1879 ), வில்லிவாக்கம் தாண்டவராய

இறுதிக்காலம்

சி.வை. தன் இறுதிக்காலத்தில் உயிலில் தன் மகனான கிங்ஸ்பெரிக்குச் சொத்து கிடையாது என்று எழுதிவைத்தார். தன் சொந்த நூல்நிலையத்துப் புத்தகங்களையும் ஏடுகளையும் விலைக்குக் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தைத் தன் மகளின் படிப்புக்குக் கொடுக்கும்படி எழுதியிருந்தார். தன் 69 ஆம் வயதில் (1901) மறைந்தார். இவரின் மரணப் படுக்கையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோது அதை ஏற்க உறுதியாக மறுத்திருத்ய்ர்; அதனால்தான் இறந்தார் என்ற கருத்தும் உண்டு . இவரது உடல் சென்னை புரசைவாக்கம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

பிற அறிஞர்கள் சி.வை.தா பற்றி

வையாபுரிப்பிள்ளை

சிறந்த ஆய்வாளரான வையாபுரிப்பிள்ளை சி.வை. தாமோதரம் பிள்ளையை ஆறுமுகநாவலர், மகாலிங்கையர் ஆகியோருடன் ஒப்பிட்டுக் கூறுவார். "முக்கியமாக சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முயற்சியைப் பாராட்டுகிறேன். இவர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் , ஒருசிலர் தம்மைத் தவிர தமிழ் நூல்களைப் பதிப்பிடும் பணியைச் செய்தவர்களை எல்லாம் பழித்துவந்தார்கள் . ஆனால் சி.வை தாமோதரம் பிள்ளை இவர்களில் முழுக்க வேறுபட்டவராய் இருந்தார்" என வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

உ.வே.சா.

தாமோதரம் பிள்ளை கும்பகோணத்தில் வந்து வசிக்கப்போகிறார் என்பது தெரிந்து எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. சேலம் ராமசாமி முதலியார் கூறியபடி பழைய தமிழ் நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ் நாட்டில் எனக்குத் துணைசெய்வார் ஒருவரும் இல்லை . நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன் . ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மாத்திரம் எஞ்சியது . இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று

உசாத்துணை

அ.கா. பெருமாள்: ”தமிழறிஞர்கள்” புத்தகம்