சி.பா.ஆதித்தனார்

From Tamil Wiki
Revision as of 13:55, 30 March 2022 by Jeyamohan (talk | contribs)

சி.பா.ஆதித்தனார் ( ) தமிழ் இதழாளர். தினத்தந்தி நாளிதழ் நிறுவனர். தொழிலதிபர், அரசியல்வாதி.நாளிதழுக்குரிய மொழிநடையை வடிவமைத்து வரையறைசெய்தவர்.

பிறப்பு, கல்வி

சி.பா.ஆதித்தனாரின் இயற்பெயர் சி.பாலசுப்ரமணியன். திருநெல்வேலி மாவட்ட்த்தில் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக அமைந்துள்ள காயாமொழி என்னும் ஊரில் 27 செப்டெம்பர் 1905ல் சிவந்தி ஆதித்தனுக்கும் கனகம் அம்மையாருக்கும் பிறந்தார். ஆதித்தன் என்பது காயாமொழி ஊரிலுள்ள ஒரு குடும்பத்திற்கு பாண்டியர் காலம் முதல் அளிக்கப்பட்டுள்ள குடும்பப்பட்டம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் முதலில் வடம்தொட்டு இழுக்கும் உரிமை இக்குடும்பத்திற்கு உரியது. அந்நிலப்பகுதியில் அரசஅதிகாரம் உடையவர்களாக அவர்கள் விளங்கினர்.

ஆதித்தனார் ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம்பெற்றார். அங்கேயே இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின் எஃப்.எல் என்னும் சட்டப்படிப்புக்காக சென்னை சென்றார். அதை படித்துக்கொண்டிருக்கையிலேயே பாரிஸ்டர் படிப்புக்காக 1928 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.

லண்டனில் ஆதித்தனார் இந்திய மாணவர் சங்கத்தில் தங்கினார். இந்தியாவிலுள்ள இதழ்களுக்கு லண்டன் அரசியல் பற்றி லண்டன் கடிதம் என்னும் பகுதியை எழுதினார். தமிழில் சுதேசமித்திரன் இதழில் தொடர்ந்து அவர் எழுதிய லண்டன் கடிதம் பகுதிகள் வெளிவந்தன.