சி.சரவணகார்த்திகேயன்

From Tamil Wiki
Revision as of 15:28, 18 January 2022 by Logamadevi (talk | contribs) (முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி. சரவணகார்த்திகேயன்

சரவணகார்த்திகேயன் (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1984) புனைவு, அபுனைவு, கட்டுரை, கவிதை வெளிகளில் 14 வயது முதல் இயங்கி வருவபர். பிரதானமாகத் தமிழ்ப் புனைவு எழுத்தாளர். இதுவரை 27 நூல்களை எழுதியிருக்கிறார். முகநூலில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவரது '96: தனிப்பெருங்காதல்' என்ற புத்தகம் வாசகர்களிடையே பெருவெற்றி பெற்றது

2015 முதல் ‘தமிழ்’ என்ற மின்னிதழை நடத்துகிறார். உயிர்மை, விகடன் தடம், ஆனந்த விகடன், குமுதம், தினமணி கதிர், காமதேனு, ஆழம், அகநாழிகை இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. இவரது ‘மதுமிதா - சில குறிப்புகள்’ கதை குறும்படமாகியிருக்கிறது. உயிர்மை வழங்கும் சுஜாதா விருதும் முதல் நூலான சந்திரயானுக்காக‌ தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதையும் பெற்றவர். பெங்களூரில் சர்வதேச தனியார் நிறுவனமொன்றில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.  ஊர் கோவை மற்றும் ஈரோடு.


பிறப்பு,கல்வி

கோவை சிங்காநல்லூரில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் இரா. சின்னதுரை - சி. தெய்வாத்தாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

ஈரோடு பிரசாந்தி வித்யா பவன்பள்ளியில் ஆரம்பக்கல்வியும், சின்னியம்பாளையம் பிரசாந்தி வித்யா பவன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும்  ஈரோடு , மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்தில் மேல்நிலைக்கல்வியும் முடித்தார்.

கிண்டி பொறியியல் கல்லூரியில்  கணிப்பொறியியல் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

பார்வதி யமுனாவை மார்ச் 9, 2008 ல் காதல் மணம் புரிந்தார். குழந்தைகள் ஞானி 11 வயது, போதி 10 வயது.

இலக்கிய வாழ்க்கை

 இதுவரை இரு நாவல்களும், நான்கு கதைத் தொகுதிகளும் வெளியாகி இருக்கின்றன. 13 வயதில் எழுத ஆரம்பித்து 2007ல் எழுத்துலகில் பிரவேசித்த‌ இவர் இதுவரை 27 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

69 என்ற ஆண் பெண் உறவு சார்ந்த குறுங்கதைகளின் தொகுப்பையும் கிருமி என்ற நீண்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். அந்தமான் தீவுகளின் கற்காலப் பழங்குடிகளின் வாழ்வையொட்டிய இவரது கன்னித்தீவு நாவல் பரவலாய் பாராட்டப்பட்து.இவரது முதல் நாவலான ’ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டது இதிகாசம், சரித்திரம், விஞ்ஞானம், காமம் எனப் பல தளங்களில் இவரெழுதிய பரிசோதனை முயற்சியான சிறுகதைகள் இவரது முதல் தொகுதியான இறுதி இரவு நூலில் இடம் பெற்றன. இவரெழுதிய ஆண் - பெண் உறவுச் சிக்கல்களைப் பேசும் சிறுகதைகள் மியாவ் என்ற இரண்டாம் தொகுப்பில் உள்ளன. இவரது புனைவுகள் ஜெயமோகன், பா.ராகவன் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை.

குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவில் இவரது ஒருத்தி நினைக்கையிலே.. என்பதை வைரமுத்து முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த‌ பரத்தை கூற்று (அகநாழிகை பதிப்பகம்) என்னும்150 சிறுகவிதைகளின் தொகுப்பை எழுத்தாளர் சாரு நிவேதிதா வெளியிட்டார். ஏழு பெண்பாற் பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் எழுதப்பட்ட தேவதை புராணம் (150 சிறுகவிதைகள்) தமிழ்பேப்பரில் தொடராகவும், பின் நூலாகவும் வந்தது. ரதி ரகசியம் என்ற பெயரில் காமத்துப்பால் குறள்களுக்குக் குறுங்கவிதை உரை நூல் எழுதினார் (தமிழ்பேப்பர்.நெட்டில் தொடராகவும் வந்தது).

இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி‌ முழு விஞ்ஞான, வரலாற்றுத் தகவல்களுடன் இவர் எழுதிய சந்திரயான் என்ற‌ நூல் தொழில்நுட்பப் பிரிவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது. 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்து ஆதாரப்பூர்வமாக இவர் எழுதிய புத்தகம் 2014 சென்னை புத்தகக் காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அதிகம் விற்பனையான நூல்களுள் ஒன்றாக இருந்தது

அம்ருதா இதழில் 2011 நொபேல் விருதுகள் பற்றி எழுதிய‌ விரிவான கட்டுரைகளும், பிற கட்டுரைகளும் கிட்டத்தட்ட கடவுள் என்ற நூலாக‌ வெளியானது. குங்குமம் இதழில் பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்களின் வரலாற்றை ச்சீய் பக்கங்கள் தொடராக எழுதினார். அது வெட்கம் விட்டுப் பேசலாம் என்ற நூலாக வெளியாகி இருக்கிறது.

இந்திய ராக்கெட் இயலின் சரித்திரத்தை குங்குமம் இதழில் தொடராக எழுதினார் (ஆகாயம் கனவு அப்துல் கலாம்). பின் சூரியன் பதிப்பகம் மூலம் அது நூல் வடிவம் பெற்றது. ஆதியோடு அந்தமாக இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறைகளில் ராக்கெட் தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சி பெற்றது என்பதை விரிவாக விவரிக்கும் இந்நூல் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டைப் பெற்றது.

96 திரைப்படம் பற்றி ரசனை அடிப்படையில் 96: தனிப்பெருங்காதல் என்ற‌ முழு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவரது திரைவிமர்சனங்கள் தொகுப்பு ஐ லவ் யூ மிஷ்கின்! கமல் ஹாசனின் அரசியல் என்ற அரசியல் கட்டுரைத்தொகுதி, சேர நன்னாட்டிளம் பெண்கள் என்ற ரசனைசார் கட்டுரைகளின் தொகுதி, பிரியத்தின் துன்பியல் என்ற இலக்கிய விமர்சனங்களின் தொகுதி ஆகியன‌ கிண்டில் மின்னூல்களாக வந்தன.

2014 மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழ் பேப்பரில் தொடர் கட்டுரைகள் எழுதினார். உயிர்மையில் இந்திய அரசியல் சாசனத்தை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதினார்.  விகடன்.காம் தளத்தில் ஹலோ... ப்ளூடிக் நண்பா! என்ற தொடர்பத்தியை எழுதினார். அதுவும் இன்ன பிற கட்டுரைகளும் சேர்த்து ஒரு கோப்பை பிரபஞ்சம் என நூலானது. கலைஞரின் நெஞ்சுக்கு நீதி சுயசரிதையின் முதற்பாகத்தைச் சுருக்கி எழுதி வந்தார்.

2019ல் இந்திய‌ அரசியல் சாசனத்தை முன்வைத்து எழுதிய கட்டுரைகள் இந்தி தேசிய மொழியா? என்ற தொகுப்பாகவும் சமூக, அரசியல் நிகழ்வுகளை ஒட்டிய கட்டுரைகள் அநீதிக்கதைகள் என்ற தொகுப்பாகவும் வெளிவந்தன. இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு Girls, Goddesses & Gentlewomen என்ற மின்னூலாக வெளியாகியுள்ளது (2020).

தமிழ் என்ற மின்னிதழ் நடத்தி வருகிறார். இதுவரை ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன் ஆகியோரை விரிவான, ஆழமான‌ நேர்காணல் செய்து அதில் வெளியிட்டார். அவை மும்மூர்த்திகள் என்ற தொகுப்பாக‌ வெளிவந்துள்ளது. கலைஞரின் இலக்கிய‌ப் பங்களிப்புகளை முன்வைத்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறார். தன் சொந்த வலைதளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் புனைவில் சுஜாதாவும் கவிதையில் வைரமுத்துவும் பலமான பாதிப்பு செலுத்தியதாகவும். பிறகு சில காலத்துக்கு சாரு நிவேதிதா, மகுடேசுவரன் மற்றும் மனுஷ்ய புத்திரனின் சாயல் இருந்ததென்றும் கூறுகிறார். இவரது தற்போதைய அபுனைவு எழுத்துக்களில், தர்க்கத்திலும், கூறுமுறையிலும் ஜெயமோகனின் பாதிப்பு இருக்கிறது.  புனைவின் வடிவிலும் நுணுக்கத்திலும்  திரைப்பட‌ இயக்குநர் க்றிஸ்டோஃபர் நோலனின் பாணியைக் காணலாம்,ஆனால் இவை எல்லாமே நடை, வடிவம் போன்ற புறப் பண்புகளில், உள்ளடக்க அளவில் எவருடைய நீட்சி என்றும் நேரடியாகச் சொல்ல முடியாது, பொதுவாக எதிலும் அடங்காத ஒரு கதம்பத்தன்மையே தன் எழுத்தின் இயல்பு என்கிறார்.

திருக்குறள் காமத்துப் பாலுக்கு ஏற்கெனவே குறுங்கவிதை வடிவில் உரையெழுதியுள்ள‌ இவர் தற்போது கம்பராமாயணத்துக்கு தினமும் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார்.

நூல்பட்டியல் (இதுவரை)

சிறுகதைகள்

  • ஜி (தமிழினி)
  • கிருமி (உயிர்மை)
  • தான்தோன்றி (அரூ)
  • பெட்டை (தினமணி கதிர்)
  • நீதிக்கதை
  • நான்காம் தோட்டா (ஆனந்த விகடன்)
  • மயிரு (குமுதம்)
  • ஒரே ரத்தம்
  • இறுதி இரவு
  • E=mc2 (தமிழ்பேப்பர்)

கட்டுரைகள்

  • சேர நன்னாட்டிளம் பெண்கள்
  • பொச்சு (விகடன் தடம்)
  • கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி (உயிர்மை)
  • இந்தி நம் தேசிய மொழியா? (உயிர்மை) [அரசியல்]
  • எரிநட்சத்திரம் (குங்குமம்)
  • மீயழகி - 2021 [பெண்கள்]
  • ஜோல்னா பை - 2021 [இலக்கியம்]
  • மக்களின் அபின் - 2021 [அரசியல்]
  • கற்பதுவே கேட்பதுவே கருதுவதே - 2021 [ரசனை]
  • அம்பேத்கர் பெரியார் அயோத்திதாசர் - 2021 [அரசியல்]
  • ஒரு கோப்பை பிரபஞ்சம் - 2019 [ரசனை]
  • அநீதிக் கதைகள் - 2019 [சமூகம்]
  • ஐ லவ் யூ மிஷ்கின் - 2019 [திரைப்படம்]
  • கிட்டத்தட்ட கடவுள் - 2013 [அறிவியல்]

கவிதைகள்

  • ஒருத்தி நினைக்கையிலே (குங்குமம்)
  • முதல் நரை (ஆனந்த விகடன்)
  • இன்ன பிற‌
  • ரதி ரகசியம் - 2019 [உரை]
  • தேவதை புராணம் - 2012 [காதல்]
  • பரத்தை கூற்று - 2010 [சமூகம்]
  • புனைவு
  • கறுப்பு சிவப்பு வெளுப்பு - 2021 [குறுநாவல்] - மின்னூல்
  • 69 - 2021 [நுண்கதை]
  • கிருமி - 2021 [சிறுகதை]
  • கன்னித்தீவு - 2019 [நாவல்]
  • மியாவ் - 2018 [சிறுகதை]
  • ஆப்பிளுக்கு முன் - 2017 [நாவல்]
  • இறுதி இரவு - 2016 [சிறுகதை]

அபுனைவு

  • மும்மூர்த்திகள் - 2019 [நேர்காணல்]
  • 96: தனிப்பெருங்காதல் - 2018 [திரைப்படம்]
  • ஃபீனிக்ஸ் கனவுகள் [ஆகாயம் கனவு அப்துல் கலாம்] - 2016 [அறிவியல்]
  • ச்சீய் பக்கங்கள் [வெட்கம் விட்டுப் பேசலாம்] - 2014 [வரலாறு]
  • குஜராத் 2002 கலவரம் - 2014 [வரலாறு]
  • சந்திரயான் - 2009 [அறிவியல்]

கட்டுரை - ஆங்கிலம்

  • Girls, Goddesses & Gentlewomen - 2020 [Experience] - Kindle E-Book

சினிமா பங்களிப்பு

  • அருண் வசீகரன் இயக்கும் படத்துக்கு திரைக்கதை, வசனம் (2021)
  • பிரபல இளம் இயக்குநரின் OTT Anthology படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் (2020)
  • மதுமிதா: சில குறிப்புகள் குறும்படத்துக்கு கதை (2017)
  • இறுதி இரவு சிறுகதையைத் தழுவிய குறும்படத்துக்கு திரைக்கதை மேற்பார்வை (2016)
  • PS அர்ஜுன் இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் (2015)
  • PS அர்ஜுனின் தமிழ் / மலையாளப் படத்தின் (JANANAM) திரைக்கதை, வசனம், பாடல் (2014)
  • APIGEE நிறுவன‌த்துக்காக LIFE OF API என்ற ஆங்கிலக் குறும்படம் : எழுத்து - இயக்கம் (2013)
  • சந்திரசேகரனுடன் இணைந்து திரைப்படத்துக்கு விவாதம் & Skeleton Script (2010)
  • மகேஷ் குமார் இயக்கத்தில் Light & Sound குறும்படத்துக்கு கதை & Skeleton Script (2009)
  • ராஜ்மோகன் இயக்கத்தில் போர்க்களம் படத்துக்குப் பாடல்கள் (2006)

கட்டுரை(மின்னூல்கள்)

  • Girls, Goddesses & Gentlewomen [Social] - Amazon KDP (2020)
  • பெண் + கள் + ஊர் [அனுபவம்] - Amazon KDP (2019)
  • சேர நன்னாட்டிளம் பெண்கள் [ரசனை] - Amazon KDP (2018)
  • பிரியத்தின் துன்பியல் [இலக்கியம்] - Amazon KDP (2018)
  • கமல் ஹாசனின் அரசியல் [அரசியல்] - Amazon KDP (2017)

பிற முயற்சிகள்

  • தமிழ் (காலாண்டு மின்னிதழ்)
  • மு.க.நூல் (கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' - சுருக்கம்) - Facebook Page
  • அனுநானூறு (அனு ஸிதாரா உபாசனைக் கவிதைகள்)
  • இலவச‌ மின்னூல்கள்
  • வானவில் - 2018 ['ச்சீய் பக்கங்கள்' - LGBT பற்றிய‌ பகுதிகள்]
  • ச்சீய்... - 2015 ['ச்சீய் பக்கங்கள்' - நூலாக்கம் பெறாத பகுதிகள்]

அரசியல் செயல்பாடுகள்

நேரடிக் கள அரசியல் செயல்பாடுகள் ஏதுமில்லை இடதுசாரிகளோடு இணக்கம் உண்டு

2013ல் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தீவிர பாஜக எதிர்ப்பு அரசியலை எழுத்துக்களில் (கட்டுரைகள், புத்தகங்கள், ஃபேஸ்புக் / ட்விட்டர் பதிவுகள்) தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்துத்துவ, ஃபாசிஸ எதிர்ப்புதான் அடிப்படை. காந்தி மீது பெரிய மயக்கம் உண்டு. சமத்துவச் சமூகத்துக்காக காந்தி, அம்பேத்கர், பெரியாரைக் கைகொண்டு எழுதுகிறார். திமுக அனுதாபி. கலைஞர் மீது பிரியம். இப்போது திருமாவளவன் மீது நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் சமயங்களில் மட்டும் திமுகவை ஆதரித்து எழுதுகிறார், மற்ற சமயங்களில் அதன் மீதான ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சிக்கிறார். தமிழ் இன வெறி அரசியலை எதிர்க்கிரார். கடவுள் நம்பிக்கை கிடையாது.

அங்கீகாரங்கள்

  • சுகன்யா தேவி கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் செய்த முனைவர் ஆய்வில் [சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள்] எடுத்துக் கொண்ட நூல்களில் ஒன்று ‘பரத்தை கூற்று’ – 2014
  • விஷ்ணுபுரம் விருது விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டார் (2018). பெங்களூர் வாசகசாலை, ஐஐஎஸ்சி வாசகர் வட்டம் போன்ற குழுக்களில் இவரது புனைகதைகள் விவாதிக்கப்பட்டுள்ளன‌ (2018). சிங்கப்பூரில் இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கை நடத்தினார் (2019). மதுமிதா - சில குறிப்புகள் கதை குறும்படமானது. இறுதி இரவு, ஒரே ரத்தம் ஆகிய சிறுகதைகள் குறும்பட ஆக்கத்தில் இருக்கின்றன.
  • அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி (2019 & 2020), உயிர்மை வழங்கும் சுஜாதா விருதுக‌ள் (2018 & 2019), ப்ரதிலிபி நுண்கதைகள் போட்டி (2017) ஆகியவற்றுக்கு நடுவராக செயல்பட்டிருக்கிறார். விஜய் டிவியின் நீயா நானா, ஜீ தமிழ் தமிழா தமிழா, கலைஞர் டிவி நெஞ்சே எழு விவாதங்களில் விருந்தினராகப் பங்கேற்றார். சில வெளிவராத படங்களின் திரைக்கதை - வசனத்தில் பணியாற்றி இருக்கிறார்.

விருதுகள்

  • உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருது [இணையம்] - 2017
  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூல் பரிசு [தொழில்நுட்பம்] - 2009
  • குங்குமம் இதழில் கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுத்த‌ முத்திரைக் கவிதை - 2007
  • திருப்பூர் இலக்கிய விருது [படைப்பிலக்கியம்] - 2019
  • பிரதிலிபி - அகம் நடத்திய‌ ‘ஞயம் பட வரை’ கட்டுரைப் போட்டி [முதல் பரிசு] - 2016
  • தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி [ஆறுதல் பரிசு] - 2018
  • அந்திமழை இதழ் - நம்பிக்கை நட்சத்திரம் [பன்முகத் திறமை] - 2015

இணைப்புகள்

  • புத்தகங்கள் (writercsk.com)
  • சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’ | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • கன்னித்தீவு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • சி.சரவணகார்த்திகேயன், Author at தமிழினி (tamizhini.in)
  • Amazon.com: C.Saravanakarthikeyan: Books, Biography, Blog, Audiobooks, Kindle
  • கமல் ஹாசனின் அரசியல்: Kamal Haasanin Arasiyal (Tamil Edition) eBook : C. Saravanakarthikeyan,
  • சி.சரவணகார்த்திகேயன்: Amazon.in: Kindle Store
  • இறுதி இரவு: Irudhi Iravu (Tamil Edition) eBook : C. Saravanakarthikeyan, சி. சரவணகார்த்திகேயன்: Amazon.in: Kindle Store
  • பரத்தை கூற்று : விழா நன்றியுரை (writercsk.com)
  • சரவணகார்த்திகேயன் சி (vikatan.com)
  • பொன்னி: தங்கத் தாண்டவம் - சி. சரவணகார்த்திகேயன் - தமிழினி (tamizhini.in)
  • மும்மூர்த்திகள் - சி.சரவணகார்த்தியேன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com
  • க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் - Uyirmmai
  • நூல்நோக்கு: எல்லைகளற்ற கதைகள் | book review - hindutamil.in
  • ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே!’ ஹலோ... ப்ளூடிக் நண்பா! | Stalin's mispronunciation gives a boost to Thirumavalavan's campaign - Hello Blue Tick Nanba (vikatan.com)
  • விசை படைப்பிலக்கியத் திட்டம்: மர்மக் கதை எழுதும் உத்திகள் , விசை பயிலரங்கு செய்திகள் - தமிழ் முரசு Key Trainer News in Tamil, Tamil Murasu
  • அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி 4-வது ஆண்டாக அறிவிப்பு! (yourstory.com)
  • உயிர்மை பதிப்பகத்தில்  வெளியான நூல்களை வாங்க: Uyirmmai Books
  • பிற பதிப்பகங்களில் வெளியான‌ நூல்களை வாங்க‌: Common Folks
  • கிண்டில் மின்னூல்களை வாங்க‌: Amazon India

தொடர்புக்கு

  • ட்விட்டர்: @writercsk