under review

சிவக்கொழுந்து சிவாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 14:22, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொ.யு. 16- ஆம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சைவசித்தாந்த மரபுகளில் ஒன்று சிவாக்கிர யோகிகள் மரபு எனப்படுகிறது. சைவத்துறவிகள் துறவு பூண வேண்டிய முறை, ஒழுக வேண்டிய முறை ஆகியவற்றை வகுத்துரைத்தவர்

(பார்க்க சிவக்கொழுந்து தேசிகர் )

பிறப்பு, காலம்

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் பொ.யு. 16- ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் எனப்படுவதுண்டு.வேளாள மரபில் அருக்கவனம் என்னும் சூரியனார் கோயிலில் பிறந்து அங்கேயே மடம் அமைத்து வாழ்ந்தார். திருவீழிமிழலையில் மன்னர் அமைத்துத் தந்த மடத்தில் வாழ்ந்தார். இவர் நிகமாகம சைவ பரிபாலகர் என அழைக்கப்பட்ட சதாசிவ யோகீந்திரரின் மாணவர் (அபிதானசிந்தாமணி) சிவாக்ர யோகி என அழைக்கப்பட்டார்.

தொன்மம்

சிவாக்ர யோகி என அறியப்பட்ட சிவக்கொழுந்து சிவாச்சாரியார் தஞ்சாவூரில் சரபோஜி ஆட்சிக்காலத்தில் ஆகமங்கள் பற்றி வைணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டபோது அவர்கள் தங்கள் தோல்வியை ஏற்கமுடியாமல் சிவாக்ர யோகி இருந்த குடிசைக்கு தீயிட்டனர். குடிசை எரிந்தாலும் இவர் தீயினால் பாதிக்கப்படவில்லை. மன்னன் இவரை வணங்கி இவருக்கு மாணவனாகி திருவீழிமிழலையில் மடம் அமைத்துக்கொடுத்தான்.

சைவப்பணிகள்

சிவாக்ர யோகி ஏறத்தாழ 1564-ல் சிவஞானசித்தியாருக்கு விரிவுரை ஒன்றை எழுதினார் என்று கே.கே.பிள்ளை (தென்னிந்திய வரலாறு) குறிப்பிடுகிறார். சிவாக்ர யோகியின் ஐந்து சம்ஸ்கிருத நூல்கள் முக்கியமானவை. சைவ பரிபாஷை, சிவாக்ரபாஷ்யம் சிவஞானபோத லகு டீகை ஆகியவை சைவ மூலநூல்களை சம்ஸ்கிருதத்தில் விளக்குபவை.

பதினைந்தாம் நூற்றாண்டுவரை பிராமணர்களுக்கு மட்டுமே துறவுபூணும் உரிமை உள்ளது என்னும் தரப்பு இந்து மதப்பிரிவுகளுக்குள் வலுவாக இருந்தது. அதை விரிவாக மறுத்து சைவத்தில் பிராமணரல்லாதவர்களுக்கு துறவுபூணும் உரிமை மூலநூல்களின் அடிப்படையிலேயே உண்டு என்று நிறுவி அதற்குரிய நெறிமுறைகளையும் சொல்லும் நூல் சைவ சந்நியாச பத்ததி. இப்போதும் சைவத் துறவிகளுக்கான வழிகாட்டி நூலாக அது கருதப்படுகிறது

சைவ ஆலயங்களின் பூசைகளுக்கான நெறிமுறைகளை வகுத்துரைத்த கிரியா தீபிகை இப்போதும் சைவ ஆலயங்களில் வழிகாட்டு நூலாக உள்ளது

அமைப்பு

சிவாக்ர யோகி சூரியனார்கோயிலில் உருவாக்கிய மடம் அவருக்குப்பின் அவருடைய சீடர்களால் முன்னெடுக்கப்பட்டது. இது சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை எனப்படுகிறது. சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு. ஒன்று தருமபுர ஆதீன பரம்பரை. மற்றொன்று சிவாக்கிர யோகிகள் பரம்பரை பார்க்க சிவாக்கிர யோகிகள் பரம்பரை

நூல்கள்

  • சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிசுலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை
  • சிவநெறிப் பிரகாசம்
  • சிவஞான சித்தியார் உரை
  • சைவ பரிபாஷை (சம்ஸ்கிருத மூலம்)
  • கிரியா தீபிகை (சம்ஸ்கிருத மூலம்)
  • சைவ சந்நியாச பத்ததி (சம்ஸ்கிருதம்)
  • சிவாக்கிர பாஷ்யம் (சம்ஸ்கிருதம்)
  • சிவஞானபோத லகுடீகை (சம்ஸ்கிருதம்) இது தமிழ் மொழிபெயர்ப்போடு வெளிவந்துள்ளது.

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
  • கே.கே.பிள்ளை தென்னிந்திய வரலாறு


✅Finalised Page