சிற்பி (சிவசரவணபவன்)

From Tamil Wiki
Revision as of 11:02, 7 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அண்மையில் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) கலைச்செல்வி ஆசிரியர் அமரர் 'சிற்பி' சிவசரவணபவன் அவர்களின் நினைவு தினத்தினையொட்டி (நவம்பர் 9) முகநூற் பதிவொன்றினை வெளியிட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அண்மையில் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) கலைச்செல்வி ஆசிரியர் அமரர் 'சிற்பி' சிவசரவணபவன் அவர்களின் நினைவு தினத்தினையொட்டி (நவம்பர் 9) முகநூற் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "நல்லாசானும் சிறந்த எழுத்தாளரும் ஈழத்துச்சிறுகதைத்தொகுதியை முதன்முதலில் வெளியிட்டவரும்   கலைச்செல்வி மாத இதழின் ஆசிரியருமாக அதனை 8 வருடங்கள் தன்னந்தனியனாக நின்று வெளியிட்டவரும் (1958 - 1966 ) கலைச்செல்விமூலம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது 5 ஆவது நினைவு தினம் ( 1933 - 2015 ) நாளை ஆகும் (நவம்பர் 9) தமிழகச் சிற்றிதழ்களின் செல்வாக்கு மிகப்பெரும் அளவில்  இங்கு விளங்கிய வேளை ஈழத்தில் ஓர் இலக்கிய உணர்வு பொங்கி எழ கலைச்செல்வி காலாய் அமைந்தது வரலாறு.அதை ஞானம் சஞ்சிகை தக்க முறையில் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. நிலவும் நினைவும்  சத்திய தரிசனம் நினை வுகள் மடிவதில்லை  ஆகியவை  இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும் உனக்காகக் கண்ணே சிந்தனைக்கண்ணீர்  அன்பின்குரல் ஆகியவை இவரது நாவல்களாகும். உனக்காகக் கண்ணே நூலுருப்பெற்றது. வேறு பல உயரிய இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டு சிறப்புப் பெற்ற இவர் உயர் கௌரவங்களையும் பெற்றவர் என்பதும்தெரிந்ததே. அன்னாரை இவ்வேளை நினைவில் கொள்வோம்."

யாழ்நங்கை அவர்கள் 'ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது' என்று கூறுவது உண்மையான கூற்று. அதற்கு யாழ்நங்கை அவர்களே நல்லதோர் உதாரணம். மாணவியான யாழ்நங்கை அவர்களின் ஆரம்பகாலப்படைப்புகளுக்குக் களமமைத்துக் கொடுத்தது கலைச்செல்வி. தொடர்ந்து 62இல் அவர் வீரகேசரியில் உதவியாசிரியராகப் பதவி பெற்றபோது அதனை வாழ்த்தியொரு குறிப்பினையும் கலைச்செல்வி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நூலகம் தளத்தில் கலைச்செல்வி இதழ்கள் பலவற்றைக் காணலாம். அவற்றினூடு பயணித்தபோது இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எவ்விதம் வளமூட்டியதோர் இதழாகக் கலைச்செல்வி விளங்கியது என்பதையும் உணர முடிந்தது. 'தனிமரங்கள் தோப்பாவதில்லை' என்பார்கள். ஆனால் தனிமரங்களும் ஏனைய மரங்களை அரவணைத்துத் தோப்பாவதுண்டு என்பதற்குப் பலரை உதாரணங்களாகக் காட்ட முடியும். மல்லிகை டொமினிக் ஜீவா, ஞானம் ஞானசேகரன்,  கலைச்செல்வி சிற்பி சிவசரவணபவன் போன்றோர் தனி மனிதர்களாக நின்று எழுத்தாளர்களை அரவணைத்து அவர்கள்தம் பங்களிப்புகளினூடு இலக்கியத்தோப்புகளை உருவாக்கியவர்கள்.

கலைச்செல்வியின் முக்கிய சாதனைகளாக நான் கருதுவது:

1. இளம் எழுத்தாளர்களுக்குக் களமமைத்துக்கொடுத்து ஊக்குவித்தது.

2. எழுத்தாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டது. வளர்ந்து வந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது.

3. பல்வேறு கலை, இலக்கியக்கோட்பாடுகளைக் கொண்டிருந்த எழுத்தாளர்களின் படைப்புகளையும் கலைச்செல்வியில் வெளியிட்டது. எஸ்.பொ , மு.தளையசிங்கம், சொக்கன், அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன், இலங்கையர்கோன் , அ.செ.முருகானந்தன் ... என்று பலரும் கலைச்செல்வியில் எழுதினார்கள்.

4. கவிதைகள், சிறுகதைகள், நாவல்களை வெளியிட்டு அவ்விலக்கிய வடிவங்களை ஊக்குவித்தது. சிறந்த கதைகளுக்குச் சன்மானம் வழங்கியது. நாவல் போட்டியொன்றை நடத்தியது. முதற் பரிசுக்கு ரூபா 1000 வழங்கி அப்போட்டியினைச் சிறப்பாக நடத்தியது. அதன் நடுவர்களிலொருவராக எழுத்தாளர் அகிலனுமிருந்தார். அகிலனின் சந்திப்பு நாவலும் தொடராகக் கலைச்செல்வியில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  உதயணன், செம்பியன் செல்வன், சிற்பி பலரது நாவல்கள் கலைச்செல்வியில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

5. படைப்புகளுக்கு, அட்டைப்படங்களுக்கு அழகிய ஓவியங்களை வெளியிட்டதன் மூலம் ஓவியர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தது.

6. கலை, இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. கலைச்செல்வி இதழ்களைத்தேடினால் , ஆவணச்சிறப்புள்ள கலை, இலக்கியத் தகவல்களை, படைப்புகளை அவற்றில் காணமுடியும். எழுத்தாளர்கள் பலரின் இளமைக்காலத் தோற்றப்புகைப்படங்களைத் தேடுகையில் நான் முதலில் தேடும் சஞ்சிகைகளில் கலைச்செல்வியுமொன்று.