சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள சிரம்பான் நகரில் அமைந்துள்ளது. இப்பள்ளி 1935 ஆம் ஆண்டு உருவானது. இப்பள்ளியின் பதிவு எண் NBD 4081. இது அரசாங்கப் பகுதி உதவிப் பள்ளி ஆகும்.
வரலாறு
சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி மாநிலத்தில் சுங்கை காடுட் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளி சிரம்பான் தோட்டத்தில் வேலை செய்த ரப்பர் மரம் சீவும் தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அத்தோட்டத்தின் பெயரே பள்ளிக்கு இடப்பட்டது. ஒரு வகுப்பை மட்டுமே கொண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ பதிவு
1966ஆம் ஆண்டு இப்பள்ளி 172 மாணவர்களுடன் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் பகுதி உதவி பெறும் பள்ளியாகவும் மாற்றப்பட்டது. 1967 ஆம் ஆண்டில் இப்பள்ளி, கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் தத்தெடுக்கப்பட்டது.
பள்ளி விரிவாக்கம்
திரு. ஏசய்யா ஜோசப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் பள்ளி விரிவாக்கம் செய்யப்பட்டு 2 கட்டடங்களுடன் இயங்கியது. அப்பொழுதுதான் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதலாவது பள்ளி இதழ் வெளியிடப்பட்டது.
மழைக்காலச் சேதம்
திரு.தே.சுப்ரமணி அவர்கள் தலைமையாசிரியராக இருந்தபோது, மழைக் காலத்தில் பள்ளித் தளவாடப் பொருள்களும் அதிகமாகச் சேதமடைந்தன. அதன் பின்னர் திரு. க. அர்ஜுனன் இப்பள்ளிக்கு 14.4.2002 இல் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். வெள்ளத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தலைமை ஆசிரியர் க. அர்ஜுனன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆறு ஏக்கர் நிலம்
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தினர் பள்ளியை மாற்றிடத்தில் அமைப்பதற்கு 6 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன் வந்தனர். மேலும், பள்ளிக் கட்டடத்தை இலவசமாகக் கட்டித் தரும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.
11.10.2006ல் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கே.ஆர்.சோமசுந்தரம் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். புதிய கட்டடத்தின் நிர்மாணிப்புப் பணிகள் 1.11.2007 இல் முடிவடைந்தது.
புதிய கட்டடம்
புதிதாக இரண்டு மாடிக் கட்டடத்துடன் நிறுவப்பட்ட சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி டத்தோ ஶ்ரீ சாமிவேலு அவர்களால் 26.11.2007ஆம் நாள் மாலை 3.00 மணிக்குத் திறப்பு விழா கண்டது.
உசாத்துணை
- நம்நாடு நாளிதழ், பிப்ரவரி 25, 2014
- 1897 - 2011 நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி