சரவாக் பழங்குடிகள்

From Tamil Wiki
Revision as of 05:31, 16 November 2022 by Aravink22 (talk | contribs) (Created page with "thumb|சரவாக் பழங்குடிகள் சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 71.2 % என மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. சரவாக்கில் மொத்தம்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சரவாக் பழங்குடிகள்

சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 71.2 % என மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. சரவாக்கில் மொத்தம் 28 பழங்குடி இனக்குழுக்கள் இருக்கின்றனர் என மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்படுகிறது.

பின்னணி

சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 2,707,600-ல் 70.5% அதாவது சுமார் 1,932,600 பழங்குடி மக்கள் ஆவர். சரவாக் பழங்குடி மக்கள் ஆஸ்திரோனீசிய மொழி (Austronesian language) பேசக்கூடியவர்கள். ஆஸ்ட்ரோனேசிய மொழி இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில், பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர், மத்திய மற்றும் தெற்கு பசிபிக் தீவு, மலேசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மற்றும் தைவான் ஆகியவற்றின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளின் குடும்பம் ஆகும். முன்பு இம்மொழி குடும்பம் மலாயோ-பாலினேசிய மொழி (Malayo-Polynesian languages) என்று அழைக்கப்பட்டது.

இனக்குழுக்கள்

சரவாக் மாநில அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தொடங்கி சரவாக் மாநிலப் பழங்குடியினக் குழுக்களாக இபான் மக்கள், பிடாயு மக்கள், உலு மக்கள் என மூன்று இனக்குழுக்களை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இவர்களின் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளதுடன் பல்வேறு பண்பாடுகளையும் கொண்டுள்ளனர்.

பிடாயு மக்கள்
சரவாக் பழங்குடிகள்

சரவாக் மாநிலத்தின் தென் பகுதியில் பிடாயு பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். காடுகளின் உட்புறங்களில் வசிப்பதால் நில டயாக் (Land Dayak) என பிடாயு மக்கள் அழைக்கப்படுகின்றனர். செலகாவ், ஜகோய்/சிங்காய், பியாத்தா, புகார்/சடோங், கூச்சிங் தெங்கா/ பிடாயு பாரு என ஐந்து குழுக்களை பிடாயு பழங்குடி குழு உள்ளடக்கியிருக்கிறது.

இபான் மக்கள்

இபான் பழங்குடியின மக்கள் சரவாக் மாநிலத்தில் வசிக்கும் மூத்தக் குடிகளில் ஒன்று. இபான் மனிதர்களின் மரபணுக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 50000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவுக்குப் பெயர்ந்த இனக்குழுவாகச் சொல்லப்படுகிறது. இபான் பழங்குடியின மக்கள் பொதுவாக கடற்டயாக் என அறியப்படுகின்றனர். கென்டான்யான், கெனிஞால், டயாக் மலாயிக், உராக் லவோய், ஒராங் லாவுட் ஆகிய ஐந்து பழங்குடிக் குழுக்களை இபான் பழங்குடி இனப்பிரிவு கொண்டிருக்கிறது.

ஒராங் உலு

சரவாக் மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்களில் சிறுபான்மைச் சமூகமாக ஒராங் உலு பழங்குடி மக்கள் கருதப்படுகின்றனர். ஒராங் உலு பழங்குடி மக்களில் 27 பழங்குடி குழுக்கள் அமைந்திருக்கின்றன. கயான், கென்யா, லுன் பவாங், கெலாபிட், பிசாயா, கிபுட், தகால், சாபான், பெனான், பெராவான், செகப்பன், லஹானான், கெஜாமான், புனான், சிஹான், பெகெத்தேன், தஞ்சோங், தபுந்திரிங், புனான் புசாங், தாத்து, பெமாலி என 27 பழங்குடி இனக்குழுக்களை ஒராங் உலு கொண்டிருக்கிறது.

நீதிமன்றம்

சரவாக் மாநிலப் பழங்குடி மக்களை ஈடுபடுத்திய நில, குடும்பப், பண்பாடு ஆகியவற்றுக்கான சிக்கல்களைக் களைய மலேசிய அரசாங்கம் 1992 ஆம் ஆண்டு பழங்குடி நீதிமன்றங்களைத் தோற்றுவித்தது. வட்டாரம், வட்டாரத் தலைமை, உயர் தலைமை, மாவட்டம், ரெசிடன்ட், மேல்முறையீடு என ஆறு வகையான நீதிமன்றங்களைப் பழங்குடி நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன.

பழங்குடிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்

பூர்வ நிலப்பறிப்பு

சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அதீத மேம்பாட்டுத் திட்டத்தால் பழங்குடி மக்கள் தங்கள் பூர்வநிலத்திலிருந்து வேறு நிலங்களுக்குக் குடியமர்த்தப்படுகின்றனர், 20005 ஆம் ஆண்டு தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 2000 நில அபகரிப்பு அல்லது கட்டாய மறு குடியேற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) தெரிவிக்கின்றது.

காடழிப்பு
சரவாக் நிலப்பரப்பின் காடழிப்பு (நன்றி The Edge)

காடுகளில் மேற்கொள்ளப்படும் சாலை, அணை போன்ற கட்டுமானங்களால் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. காடுகளையே வாழ்வாதாரமாகக் கொண்ட சரவாக் பழங்குடிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வறுமை
பழங்குடி வீடுகள்

சரவாக்கில் வசிக்கும் கயான். கென்யா,பெனான், லஹானான், உக்கிட் ஆகிய பழங்குடி மக்களின் சராசரி தனிநபர் வருமானம் அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட பல மடங்கு குறைவானதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. காடுகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரித்தல், சுற்றுலா வழிகாட்டிகளாகப் பணியாற்றுதல் போன்ற குறைந்த வருமானம் மட்டுமே ஈட்டக்கூடிய தொழில்களிலே பழங்குடி இன மக்கள் ஈடுபடுகின்றனர்.

நல வாழ்வுக்கான வசதியின்மை

பழங்குடி மக்கள் வசிக்கும் இடங்களில் நவீன மருத்துவ வசதிகள் இன்னும் முறையாக ஏற்படுத்தப்படாமலே இருக்கின்றன. குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் இறந்துபோகும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

பண்பாடு மாற்றங்கள்

மாறிவரும் நவீன வாழ்வுக்குப் பழக முடியாமல் தங்கள் பூர்வநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை முழுமையாகக் கைவிட முடியாமலும் பழங்குடி மக்கள் இக்கட்டான நிலையில் வாழ்கின்றனர். அதே சமயம், கிருஸ்துவம், இசுலாம் ஆகியச் சமயங்களைத் தழுவுவதால் தங்கள் பூர்வநம்பிக்கைகள், பண்பாடு ஆகியவற்றை மெல்ல இழந்து வருகின்றனர்.

உசாத்துணை

சரவாக் பழங்குடிகள் சுஹாகாம் (மனித உரிமைகள் ஆணையத் தரவுகள்)

சரவாக் பழங்குடிகள் வல்லினம் கட்டுரை

சரவாக் பழங்குடி இனப்பிரிவுகள்

சரவாக் பழங்குடி விவகார நீதிமன்றம்

ஒராங் உலு மக்கள்