சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். தஞ்சை பெரிய கோயிலில் நிகழ்த்துகலையாக நடிக்கப்பட்டு வந்தது.
ஆசிரியர்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். கும்பகோணத்துக்கு அருகிலுள்ள கொட்டையூரைச் (ஏரண்டபுரி) சேர்ந்த தண்டபாணி தேசிகரின் மகன். சிவபக்தரான தேசிகர் கொட்டையூருக்கு அருகிலுள்ள சக்திமுற்றத்தில் கோயில் கொண்ட சிவக்கொழுந்தீசரின் பெயரை மகனுக்கு இட்டார்.
சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்தவராக விளங்கினார். இவர் அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் இவரைத் தம் அரண்மனைப் புலவர் ஆக்கினார். அங்கு இவர் பல மருத்துவ நூல்களையும் கவிதை வடிவில் இயற்றினார்.
பாட்டுடைத் தலைவர்
சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட மராட்டி மன்னர் துளஜாஜியால் தன் அரியணைக்கு வாரிசாகத் தத்தெடுக்கப்பட்டவர். துளஜாஜி தன் விருப்பக் கடவுளான திரிபுவனம் சரபேசர் பெயரை சரபோஜி எனத் தன் மகனுக்கு இட்டார். இவருக்கு முன் சரபோஜி என்ற பெயரில் ஓர் மன்னர் ஆண்டிருந்தமையால் இவர் இரண்டாம் சரபோஜி ஆவார். சரபோஜி மன்னர் 1798-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சரபோஜி மன்னர் மராட்டி, தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன், வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். தஞ்சாவூரில் சரஸ்வதி மகால் என்ற நூல் நிலையத்தை நிறுவினார். இன்றியமையாத நூல்கள் பலவற்றைப் பதிப்பிப்பதற்காக அச்சகம் ஒன்றையும் நிறுவினார். தம் அரண்மனையில் அரும்பொருள் காட்சி நிலையத்தையும் ஏற்படுத்தினார். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்காக மருத்துவச் சாலை ஒன்றையும் உருவாக்கினார்.
நூல் அமைப்பு
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகையச் சார்ந்தது. நூலின் முதற் பகுதியில் சிறப்புப் பாயிரம், காப்புச் செய்யுள், கட்டியக்காரன் வருகை, கணபதி வருகை ஆகியன இடம்பெறுகின்றன. பின்னர், பாட்டுடைத் தலைவராகிய சரபேந்திரர் உலா வருகின்றார். அவ்வுலாவைப் பந்து விளையாடிக் கொண்டிருந்த மதனவல்லி என்ற பெண் பார்க்கிறாள். தலைவர் மேல் காதல் கொள்கிறாள். உலா மதனவல்லியைக் கடந்து செல்கின்றது. மதனவல்லி காதல் துன்பத்தால் வருந்துகின்றாள். தன் காதலைத் தெரிவித்துத் தலைவனிடம் தோழியைத் தூது அனுப்புகின்றாள். அப்போது குறத்தி வருகின்றாள். குறத்தியை அழைத்துத் தலைவி குறி கேட்கின்றாள். குறத்தி உன் விருப்பம் நிறைவேறும் என குறி சொல்கிறாள்.அப்போது குறத்தியைத் தேடி அவள் கணவன் சிங்கன் வருகின்றான். அவன் குறத்தியைக் காணாது வருந்துகின்றான். இறுதியில் குறத்தியைத் தேடிக் கண்டுபிடிக்கின்றான். மகிழ்ச்சி அடைகின்றான். இறுதியில் மங்களம் என்ற பகுதி இடம்பெறுகின்றது. குறத்தி தன் மலை வளம் கூறுதல், குறவன் குறத்தி உரையாடல், குறத்தி குறி உரைத்தல் இவை சுவைபடச் சொல்லப்பட்டுள்ளன.
இடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும், வசனத்தையும் கலந்து கீர்த்தன வடிவமாக அமைந்துள்ளது. படிப்போர் எளிதில் அறியும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளது. சரபோஜி மன்னர் பாட்டுடைத் தலைவராக இருப்பினும் இந்நூல் தஞ்சைப் பெருவுடையாரின் சிறப்பும், மகாராட்டிர மன்னர் வழிபடு தெய்வமாகிய ஸ்ரீ பவானி சந்திர மௌளீஸ்வரரின் பெருமையும் கொண்டு சங்கீதமும், அபிநயமும், நடனமும் கலந்துவரும் ஒரு நாடக நூலாகும். குறத்தி தன் மலை வளம் கூறுதல், குறவன் குறத்தி உரையாடல், குறத்தி குறி உரைத்தல் ஆகியவை இந்நூலில் அமைந்துள்ளன. குறவஞ்சி எனும் சிற்றிலக்கிய வகைமையில் குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்ததாக சரபேந்திர பூபாலக் குறவஞ்சி சிறப்பு பெற்றது. அறுபது தமிழ் வருடப் பெயர்களில் 19 பெயர்கள் இடம்பெறும் பாடல் புகழ்பெற்றது[1].
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் திருவிழாக்களில் நாட்டிய நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அஷ்டகோடி விழாக்காலத்தில் நிகழ்த்தப்பட்டதால் 'அஷ்டகோடி குறவஞ்சி' எனவும் அழைக்கப்பட்டது.
பார்க்க : சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்
உசாத்துணை
- சரபேந்திர பூபாலக் குறவஞ்சி-தமிழ் இணைய கல்விக் கழகம்
- Sarabhendra Bhūpala Kuravānji Nātakam
- தமிழ்க்கனல்-சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page