சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார் (பிறப்பு: டிசம்பர் 5, 1966) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். வார, மாத இதழ்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். பொழுதுபோக்குக் கதைகளை எழுத ஆரம்பித்தவர், பின்னர் கவனிக்கத்தக்க பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் அமெரிக்க இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளை அதிகம் படைத்து வருகிறார்.
பிறப்பு, கல்வி
சத்யராஜ்குமார் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சியில் கிருஷ்ணசாமி - பத்ரவேணி தம்பதியருக்கு டிசம்பர் 5, 1966-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை குப்பாண்ட கவுண்டர் நடுநிலைப்பள்ளியிலும், நாச்சிமுத்து பாலிடெக்னிக் தொழில்நுட்பப் பள்ளியிலும் படித்தார். பின்னர் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் டிப்ளமோ பெற்றவர், பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கோவை அரசு பொறியியல் கல்லூரியில் எஞ்சினீரிங் பட்டப்படிப்பைப் படித்து முடித்தார்.
தனி வாழ்க்கை
சத்யராஜ்குமாரின் மனைவி பெயர் கவிதா ராமஜெயம். மகன் அகில் ராஜ், மகள் தென்றல் ராஜ். மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் சத்யராஜ்குமார் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள வர்ஜீனியா மாநிலத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழ்நாடு காலகட்டம்
சத்யராஜ்குமாரின் முதல் சிறுகதை 1985-ஆம் ஆண்டு சாவி வார இதழில் வெளியானது. அதே வருடம் இதயம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சிறுகதைக் களஞ்சியம் என்னும் வாரமிருமுறை இதழில் ஆசிரியர் மணியன் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் பல வார மாத இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது வாசிப்புக்குரிய பொழுதுபோக்குச் சிறுகதைகளை எழுதி வந்தவர், 1994-ஆம் ஆண்டு தனது எழுத்தின் போக்கை மாற்றியமைத்துக் கொண்டு கல்கியில் ‘அந்நிய துக்கம்’ என்னும் முதல் பரிசுக்குரிய கதையை எழுதினார். தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற இதழ்களில் சமூக அக்கறையும், உணர்வுபூர்வமும் கொண்ட பரிசுக்குரிய பல கதைகளைப் படைத்தார்.
புலம்பெயர் காலகட்டம்
2003-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர் அங்கே வாழும் இந்தியர்களின் அமெரிக்க வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளைத் தனது எழுத்துக் களமாக ஆக்கிக் கொண்டுள்ளார். இவ்வகை சிறுகதைகளை அவ்வப்போது தமிழக வார இதழ்களில் எழுதுவதோடு அல்லாமல் சொல்வனம், பதாகை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.
பரிசுகள், விருதுகள்
- அந்நிய துக்கம் - சிறுகதை - அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு, கல்கி வார இதழ் (1994)
- ஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை - இலக்கிய சிந்தனை விருது - கல்கி வார இதழ் (1995)
- உள்காயம் - சிறுகதை - அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு, கல்கி வார இதழ் (1996)
- பாலை மனம் - சிறுகதை - அமுதசுரபி சிறுகதைப் போட்டி - பரிசு பெற்ற கதை - அமுத சுரபி (1997)
- நம்பிக்கை வெளிச்சம் - குறுநாவல் - அமரர் ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டி - இரண்டாம் பரிசு, கலைமகள் மாத இதழ் (1998)
- இறந்த காலம் - சிறுகதை - விகடன் ஓவியக் கதைகள் போட்டி - மூன்றாம் பரிசு, ஆனந்த விகடன் (2002)
- மைய விலக்கு - சிறுகதை - உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு சிறுகதைப் போட்டி - பரிசுக்குரிய கதைகளில் ஒன்றாகத் தேர்வு (2009)
இலக்கிய இடம்
சத்யராஜ்குமார் எளிதாக வாசிக்கத்தக்க சுவாரஸ்யமிக்க கதைகளைப் படைப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளார். பொழுதுபோக்குக் கதைகள் எழுதும்போது கதையின் சுவாரஸ்யத்தோடு ஏதேனும் ஒரு புதுத்தகவலை உறுத்தாமல் கடத்துகிறார். இதற்கு மாறாக சமூக அக்கறை கொண்ட படைப்புகளில் மனித உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்து எழுதியிருப்பதைக் காண முடிகிறது. குற்றவியல் சார்ந்த கதைகளிலும் சமூக அக்கறையை நிலைநாட்டும் நோக்கில் எழுதியிருந்தது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் காந்தியன் ஸ்டடீஸ் துறையிலிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றது.
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- ஒரு விநாடியும் ஒரு யுகமும் - வார இதழ்களிலும், இலக்கிய சிந்தனை அமைப்பிலும் பரிசு பெற்ற கதைகள் - திருமகள் நிலையம் (2008)
- நியூயார்க் நகரம் - அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள் - அகநி வெளியீடு (2017)
- ஸ்டிக்கர் பொட்டு - பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள் - கிண்டில் மின்னூல் (2018)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
- Colors - பதாகை இணைய இலக்கிய இதழில் வெளியான வர்ணம் சிறுகதை Unwinding: and other Contemporary Tamil Short Stories என்னும் ஆங்கிலத் தொகுப்பில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பிற வடிவங்களில்
- பறந்து செல்ல வா (2016) - திரைப்படம் - கதை-திரைக்கதையில் பங்களிப்பு
- வருந்துகிறோம் Sorry! (2020) - குறும்படம் - எழுத்து, இயக்கம் - இத்திரைப்படத்துக்காக டொரண்ட்டோ தமிழ்த் திரைப்பட விழாவில் Best Social Message Short Film Director Jury Award பெற்றார்.
இணைப்புகள்
- சத்யராஜ்குமாரின் வலைத்தளம் - sathyarajkumar.com
- ஸ்நேகிதி - சிறுகதை - சொல்வனம் இணைய இதழ்
- வர்ணம் - சிறுகதை - பதாகை இணைய இதழ்
- மைய விலக்கு - ‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ பரிசுக்கதை, இன்று – Today, Glimpses of moments, ஜூன் 2009
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.