சதங்கை
வனமாலிகையை ஆசிரியராகக்கொண்டு நவம்பர் 1971 முதல் நாகர்கோவிலிலிருந்து வெளிவரத் தொடங்கியது சதங்கை மாத இதழ். ஆரம்ப காலங்களில் அது ஒரு ஜனரஞ்சக இதழ்போலவே வெளிவந்தது. “ஒரு சிறந்த இலக்கியப் பத்திரிகை நடத்தலாம். அல்லது ஒரு பொழுது போக்குப் பத்திரிகை நடத்தலாம். ஆனால் இரண்டையும் கலந்து செய்துவிட வேண்டும் என்பது எப்பொழுதும் வெற்றிபெற்றதில்லை” (ஜனவரி 1973) என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் சுந்தர ராமசாமி. மே 1973 இதழில், “நண்பர் சுந்தர ராமசாமி சதங்கையில் தொடர்ந்து எழுதுவதுடன் அவர்களது ஆலோசனைகளின்படி இதழ்கள் தொடர்ந்து வெளியாகும்” என்ற அறிவிப்புடன் சதங்கை ஒரு இலக்கிய இதழாக மாற்றம் பெற்றது. அப்போது நாகர்கோவிலில் தங்கியிருந்த பிரமிளும் சதங்கையில் எழுதத் தொடங்கினார். பல்வேறு இலக்கியப் பார்வைகள் கொண்ட படைப்பாளிகளுக்கும் சதங்கை களம் அமைத்துக் கொடுத்தது. தரமான படைப்புகள், கட்டுரைகளுடன் சாதாரணமான எழுத்துக்களும் வெளிவந்தன. வெளியீட்டில் இடைவெளிகள் இருந்த போதிலும் புத்தாயிரத்திலும் வெளியீட்டைத் தொடர்ந்து, வனமாலிகையின் மரணம் வரையிலும் நீடித்தது சதங்கை. இதழின் ஆரம்ப காலம் தொடங்கி இறுதிவரையிலும் எம். எஸ். ஸின் பங்களிப்பு இடையீடின்றித் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.