under review

சசிகலா குகமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 20:42, 27 February 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சசிகலா குகமூர்த்தி

சசிகலா குகமூர்த்தி (பிறப்பு: மார்ச் 9, 1958) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர், கல்வியியலாளர். இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தின் முதலாவது தமிழ்ப் பெண் பேராசிரியை.

வாழ்க்கைக் குறிப்பு

சசிகலா குகமூர்த்தி இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பாலசிங்கம், பத்மாவதி இணையருக்கு மார்ச் 9, 1958-ல் பிறந்தார். ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக் கழக புகுமுக வகுப்பு வரை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்றார். 1981-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 'யாழ்ப்பாண மாவட்டத்தில் பனை வளத்தின் செல்வாக்கு' என்ற தலைப்பில் புவியியலில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

1982-ம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த சசிகலா குகமூர்த்தி பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியைப் முழுமை செய்வதற்காக 1993-ல் 'சமூக நகர்வில் சமூகக் கல்விசார் எண்ணக்கருக்களின் தாக்கம்' என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து தங்கப்பதக்கத்தைப் பெற்றார். கல்வியில் முதுதத்துவமாணி பட்டத்திற்காக 'யாழ்ப்பாணத்து பெண்கள் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் 2001-ம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்தார். இந்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு 'யாழ்ப்பாணத்து பெண்கள் கல்வி ஒரு வரலாற்று நோக்கு' என்ற நூலை வெளியிட்டு யாழ்ப்பாணப் பெண்களது கல்விச் சிறப்பை வரலாற்று அடிப்படையில் இன்றைய சமூகத்திற்கு அறியச் செய்தார்.

2004-ல் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக கல்வி பீடத்தின் விரிவுரையாளராக இணைந்து, 2007-ல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழகழத்தில் 2010-ல் நிறைவேற்றினார். கலாநிதிப் பட்டத்திற்காக 'பெண் ஆசிரியர்களின் தொழில் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் காரணிகள் இலங்கையையும் இந்தியாவையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு ஒப்பீட்டு ஆய்வு' என்ற ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஆய்வுவாழ்க்கை

சசிகலா குகமூர்த்தி காலத்திற்கு காலம் கல்விப்புலத்தில் உள்ள பிரச்சினைகளை, தேவைகளை இனங்கண்டு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டதுடன் உலகின் பல்வேறு நாடுகளில் தமது ஆய்வு முடிவுகளை சர்வதேச கருத்தரங்குகளில் சமர்ப்பித்தார். 43 கல்விசார் ஆய்வுக் கட்டுரைகளையும் 36 கல்விசார் கட்டுரைகளையும் வெளியிட்டார். தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கல்விசார் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

பொறுப்புகள்

  • 2015 முதல் 2017 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் இரண்டாம் மூன்றாம் நிலை கல்வித்துறையின் தலைராகவும் இருந்தார்.
  • 2019 முதல் சிறப்பு கல்வித் தேவைகள் துறைக்கான தலைவராக செயற்பட்டார்.

இதழியல்

2012-ம் ஆண்டு முதல் இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்வி பீடத்தினால் வெளியிடப்படும் பார்வை என்ற வருடாந்த கல்விச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருந்தார்.

விருதுகள்

  • 1993-ல் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் அதிகூடிய ஆற்றலுக்கான தங்கப் பதக்கம்.
  • 2017-ல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆய்வாளருக்கான விருது

நூல் பட்டியல்

  • யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும்
  • கல்வியும் உளவியலும் பகுதி 1

உசாத்துணை


✅Finalised Page