கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தேசிய வகை கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி.
வரலாறு
கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1925-ம் ஆண்டு தோட்ட நிர்வாகத்தினரின் ஆதரவோடு தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் இப்பள்ளி மூன்று ஆசிரியர்களோடு இயங்கியது. கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் தமைமையாசிரியர் நாராயணசாமி.
கட்டிடம்
1925-ம் ஆண்டு கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி தகரக் கூரையாலும் பலகையாலும் கட்டப்பட்டிருந்தது. 1948-ம் ஆண்டு அரசால் கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அரசு அங்கீகாரம் கிடைத்தவுடன், 1954-ம் ஆண்டு இப்பள்ளி கோல சிலாங்கூர் தோட்டத்தில் பழைய இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டது. புதிய கட்டிடம் கோல சிலாங்கூர் தோட்ட நிர்வாகத்தினரால் கட்டித் தரப்பட்டது. கோல சிலாங்கூர் தோட்டத்தின் மூன்று டிவிஷன்களிலிருந்து மாணவர்கள் இப்பள்ளியில் அடிப்படை வசதிகளோடு கல்வி கற்றனர்.
1990-ல் ரெங்கசாமி தலைமையில் இயங்கத்துவங்கிய இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை உயர்வினால் ஓர் இணைக் கட்டிடம் கட்டப்பட்டது. 1998-ல் ரெங்கசாமியின் பணியிட மாற்றத்திற்குப் பிறகு, எஸ்.மாணிக்கம் கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். எஸ்.மாணிக்கம் தலைமையாசிரியராகப் பொறுப்பாற்றிய காலத்தில் பள்ளியில் ஓர் இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. பள்ளியின் தலைமைத்துவத்திற்கேற்ப பள்ளியின் வளர்ச்சிகளும் மேம்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இன்றைய நிலை
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்றளவும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்டுள்ள பள்ளி எனும் பிரிவில் கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்குகின்றது.
உசாத்துணை
- க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
- மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.