கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன்( பொ.யு. 12-ம் நூற்றாண்டு), ஔவையார் எழுதிய அற நூல்களுள் ஒன்று.
தோற்றம்
12-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஔவையாரால் பாடப்பட்ட நீதி இலக்கிய நூல் கொன்றை வேந்தன். ஆத்திசூடி, மூதுரை, நல்வழி ஆகியன ஔவையாரால் பாடப்பட்ட பிற நூல்கள்.
நூல் அமைப்பு
கொன்றை என்பது ஒரு மரம். அதில் மலரும் கொன்றை மலர், சிவபெருமானின் விருப்பத்திற்குரிய ஒன்று. அந்தச் சிவபெருமானின் மைந்தனான முருகப்பெருமான் இந்நூலின் கடவுள் வாழ்த்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
இந்நூலில் மொத்தம் 91 பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. வரிகள் அகரவரிசையில் அமைந்துள்ளன. உயிர் வருக்கத்திலும், உயிர் மெய் வருக்கத்திலும் அகரவரிசையில் இந்நூல் பாடப்பட்டுள்ளது.
நூல் அமைப்பு
கொன்றை வேந்தன் நூல்,
கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
என்ற காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது. கொன்றை வேந்தன் என்பது சிவபெருமானைக் குறிக்கும். கொன்றை வேந்தன் செல்வன் என்பது முருகனைக் குறிக்கும். காப்புச் செய்யுளில் முதலில் இடம் பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பதே நூலுக்குரிய தலைப்பாக ஆனது.
கொன்றை வேந்தன் நூலும் ஆத்திசூடியைப் போலவே அகர வரிசையில் தொடங்கி, உயிர் வருக்கத்திலும், உயிர் மெய் வருக்கத்திலும் பாடப்பட்டுள்ளது. உயிர் வருக்கம், அகரகத்தில் தொடங்கி, ஆயுத எழுத்தில் நிறைவடைகிறது. உயிர்மெய் வருக்கம், ககரத்தில் தொடங்கி வகரத்தில் நிறைவடைகிறது.
கல்வி மற்றும் ஒழுக்கத்திற்கு கொன்றை வேந்தன் நூல் முக்கியத்துவமளித்துள்ளது. வாழ்வியல் நெறிகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒருவர் தன் இளமைப்பருவத்தில் தொடங்கி வாழ்க்கை முழுவதும் பின்பற்றத் தக்க பல்வேறு அறக்கருத்துக்கள் கொன்றைவேந்தன் நூலில் இடம்பெற்றுள்ளன.
பெற்றோரைப் பேணுதல், ஆயுத வழிபாடு, ஒழுக்கமாக வாழ வேண்டியதன் முக்கியத்துவம், கற்பதின் சிறப்பு, கற்பின் பெருமை, கோபம் தவித்தல், கடுஞ்சொல் கூறாதிருந்தல், அறத்தின் சிறப்பு எனப் பல்வேறு அறிவுரைகளைக் கொண்டதாக கொன்றை வேந்தன் நூல் அமைந்துள்ளது.
பாடல் நடை
உயிர் வருக்கம்
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று
- இல்லறம் அல்லது நல் அறம் அன்று
- ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
- எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
- ஏவா மக்கள் மூவா மருந்து
- ஐயம் புகினும் செய்வன செய்
- ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
- ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
- ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
- அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
உயிர்மெய் வருக்கம்
- கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
- காவல் தானே பாவையர்க்கு அழகு
- கிட்டாதாயின் வெட்டென மற
- கீழோர் ஆயினும் தாழ உரை
- குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
- …………………………………………………………………………………………
- …………………………………………………………………………………………
- ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
- வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
- வேந்தன் சீரின்-ம் துணை இல்லை
- வைகல் தோறும் தெய்வம் தொழு
- ஒ(வொ)த்த இடத்து நித்திரை கொள்
- ஓ(வோ)தாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
உசாத்துணை
✅Finalised Page