under review

கே. தாமோதரன்

From Tamil Wiki
Revision as of 06:57, 18 April 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
கே.தாமோதரன்
கே.தாமோதரன்
கே.தாமோதரன் (புகைப்படம் புனலூர் பாலன்)
கே.தாமோதரன்

கே.தாமோதரன் (5 பிப்ரவரி 1912- 3 ஜூலை 1976) இந்திய தத்துவ சிந்தனையாளர். மலையாள இலக்கியவாதி. இந்திய இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவர். மார்க்ஸிய தத்துவம் சார்ந்தும், மார்க்ஸிய இயங்கியல் வரலாற்று வாத நோக்கில் இந்திய தத்துவயியல் சார்ந்தும், இடதுசாரி அரசியல் நடவடிக்கைகள் சார்ந்தும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதினார்

பிறப்பு, கல்வி

கே.தாமோதரன் கேரளத்தில் மலப்புறம் மாவட்டத்தில் திரூர் அருகே பொறூர் என்னும் ஊரில் கீழேடத்து என்னும் நாயர் இல்லத்தில் கிழக்கினியேடத்து இல்லத்தை சேர்ந்த துப்பன் நம்பூதிரிக்கும் கீழேடத்து வீடு என்னும் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணி அம்மாவுக்கும் 5 பிப்ரவரி 1912-ல்பிறந்தார்.

திரூரங்காடி மாட்டாயி ஆரம்பப்பள்ளியிலும், திரூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். கோழிக்கோடு சாமூதிரி கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

கோவை சிறையில் இருக்கையில் தமிழ், இந்தி மொழிகளைக் கற்ற கே.தாமோதரன் ஆச்சாரிய நரேந்திரதேவ் ஊக்குவித்தமையால் 1935ல் சம்ஸ்கிருதக் கல்விக்காக காசி வித்யாபீடத்தில் சேர்ந்தார். காசி பல்கலையில் லால்பகதூர் சாஸ்திரி கே.தாமோதரனின் உடன் பயின்றவர். காசி வித்யாபீடத்தில் சம்ஸ்கிருதத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றார். காசியில் இருக்கையில் உருது, வங்காள மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

கே.தாமோதரனின் மனைவி பத்மம். மகன் கே.பி.சசி ஆவணப்பட இயக்குநர், கேலிச்சித்திரக் கலைஞர்.

அரசியல்

இந்திய தேசிய இயக்கம்

கல்லூரி நாட்களில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் செயலாளராகச் செயல்பட்டார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சொற்பொழிவாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். 1930 மே மாதம் கோழிக்கோட்டில் நடைபெற்ற சத்யாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுக்கச் சென்றாலும் 18 வயது ஆகாததனால் தலைவர்கள் அனுமதிக்கவில்லை.

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து 17 மார்ச் 1931-ல்தானூர் என்னுமிடத்தில் ஆற்றிய உரைக்காக ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறைசென்றார். 23 மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்று கோயம்புத்தூரில் சிறையில் இருந்தார்.

கே.தாமோதரன் 1938ல் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக ஓராண்டு பணியாற்றினார்.1940ல் .கே.தாமோதரன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (All India Congress Committee - AICC) உறுப்பினரானார். 1940 ஆகஸ்டில் காந்தி தனிநபர் சத்யாக்கிரகத்தை அறிவித்ததை தொடர்ந்து செப்டெம்பர் 15-ல்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இரண்டுமுறை சிறை சென்ற கே.தாமோதரன் 1945ல் விடுதலையானார்.

பொதுவுடைமை இயக்கம்

1935ல் காசி வித்யாபீடத்தில் கல்வி கற்கச் சென்ற கே.தாமோதரன் ஓங்கார்நாத சாஸ்திரி என்னும் மூத்த மாணவரால் பொதுவுடைமைக் கருத்துக்கள் நோக்கி ஈர்க்கப்பட்டார். 1937ல் கேரளம் திரும்பிய கே.தாமோதரன் கேரள சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார். அன்று காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் தலைவராக இருந்த பி.கிருஷ்ணபிள்ளையின் அணுக்கரும் மாணவருமாக ஆனார். கோழிக்கோடு அருகே ஃபரோக் ஓட்டுத்தொழிற்சாலை ஊழியர்களின் சங்கத்தில் பணியாற்றினார். அவர்களின் முதல் வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தார். பொன்னானி பீடித்தொழிலாளர் வேலைநிறுத்ததை ஒருங்கிணைத்து இரண்டாம் முறையாகச் சிறை சென்றார்.

1939-ல்கேரளத்தில் காங்கிரஸில் இருந்த சோஷலிஸ்டுகள் கருத்துவேறுபாட்டால் தனியாகப் பிரிந்தனர். அதன்பொருட்டு கூடிய முதல் கூட்டத்தில் இருந்த ஐந்து பேரில் (பி.கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, என்.சி.சேகர், எஸ்.வி.காட்டே) ஒருவர் கே.தாமோதரன். 1 மே 1939-ல்கேரளத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் கிளை உருவாக்கப்பட்டது. அதில் கே.தாமோதரன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகப் பொறுப்பு வகித்தார்.

25 ஜனவரி 1940-ல்கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் கிளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் கே.தாமோதரன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் 1945 வரை பணியாற்றினார். 1951ல் மலபார் கம்யூனிஸ்டுக் கட்சியின் வட்டச்செயலாளராகப் பதவியேற்றார். 1951ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டபோது நான்காவது முறையாகச் சிறை சென்றார்

1964ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுண்டபோது கே.தாமோதரன் கம்யூனிஸ்டுக் கட்சி (CPI) அணியில் இருந்தார்.

கே.தாமோதரன் 1960-ல்இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்

தேர்தல்

கே.தாமோதரன் கேரளத்தின் தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். தேர்தல்களில் வெல்லவில்லை.

  • 1951 கேரளச் சட்டச்சபைக்கு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்
  • 1957ல் இந்திய மக்களவைக்கு போட்டியிட்டு தோல்வியடந்தார்
  • 1964-ல்இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார். 1970 வரை அப்பதவியில் இருந்தார்.
விலகல்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இந்திய தேசிய காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து கேரள அரசை ஆட்சி செய்ததில் உடன்பாடுகொள்ள முடியாத கே.தாமோதரன் கட்சியில் இருந்து விலகி இறுதிக்காலத்தில் ஆய்வாளராகச் செயல்பட்டார்,

பயணங்கள்

கே.தாமோதரன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணங்கள் செய்தார்.

இதழியல்

1960 முதல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கோட்பாட்டு வெளியீடான நவயுகம் இதழின் ஆசிரியராக கே.தாமோதரன் பணியாற்றினார்.

இலக்கியம்

நாடகம்

கே.தாமோதரன் 1937ல் மலையாளத்தில் எழுதிய பாட்டபாக்கி (குத்தகைபாக்கி) என்னும் நாடகம் பொதுவுடைமைப் பிரச்சார நாடகமாக பெரும்புகழ்பெற்ற ஒன்று. திரிச்சூர் வந்நேரி ஊரில் வெலத்தூர் கடலாயி மனை என்னும் வீட்டில் தலைமறைவாக இருக்கையில் இதை இரண்டு நாட்களில் எழுதினார். திரிச்சூர் மாவட்டம் கொரிஞ்ஞியூர் என்னுமிடத்தில் 1938ல் முதலில் அரங்கேறிய இந்நாடகம் கேரள வரலாற்றின் மிகப்புகழ்பெற்ற அரசியல்நாடகமாகக் கருதப்படுகிறது. கேரளத்தின் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் பலர் இதில் நடித்துள்ளனர். ரக்தபானம் என்னும் நாடகமும் குறிப்பிடத்தக்கது

சிறுகதைகள்

கே.தாமோதரன் மலையாளத்தில் எழுதிய சிறுகதைகள் கண்ணுநீர் என்னும் பேரில் நூலாயின. பிரச்சார நோக்கம் கொண்ட கதைகள் அவை.

மொழியாக்கங்கள்

கே.தாமோதரன் இந்தி, வங்காளி, ரஷ்ய மொழியில் இருந்து மலையாளத்திற்கு ஏராளமான மொழியாக்கங்களைச் செய்துள்ளார்.

ஆய்வுப்பணிகள்

தத்துவம்

கே.தாமோதரனின் புகழ்பெற்ற நூலாக கருதப்படுவது இந்திய சிந்தனையை தொகுத்து அவர் எழுதிய நூல். ஆங்கிலம், இந்தி மொழிகளில் அது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வரலாறு

கே.தாமோதரன் ருஷ்ய, சீன புரட்சிகளின் வரலாற்றை எழுதினார். அவர் எழுதிய கேரள சுதந்திரப்போராட்ட வரலாறு ஒரு முதன்மையான நூல்

கே.தாமோதரன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுமையான வரலாற்றை எழுதும்பொருட்டு இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் (Indian Council of Historical Research- ICHR) நிதிக்கொடையை பெற்றார். ஆய்வுக்காக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோது மறைந்தார்.

மறைவு

கே.தாமோதரன் 3 ஜூலை 1976ல் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மறைந்தார்.

வாழ்க்கை வரலாறு

கே.தாமோதரன் வாழ்க்கை வரலாறு (மலையாளம்), எம்.ரஷீத்

வரலாற்று இடம்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (கேரளம்) முன்னோடித் தலைவர்களில் ஒருவர். பொதுவுடைமைப் பார்வையில் வரலாறு, தத்துவம் ஆகியவற்றை எழுதுவதற்கு வழிகாட்டியாக அமைந்தவர். கே.தாமோதரனின் இந்திய சிந்தனை என்னும் பெருநூல் அத்துறையில் மார்க்ஸிய இயங்கியல் அணுகுமுறையை சமரசமின்றி, நடுநிலையுடன் பயன்படுத்திய நூலாக மதிப்பிடப்படுகிறது.

நூல்கள்

மலையாளம்

வாழ்க்கை வரலாறு
  • ஜவகர்லால் நேரு
  • கார்ல் மார்க்ஸ்
அரசியல்
  • ஏகவழி
  • சமஷ்டிவாத விக்ஞாபனம்
  • மனுஷ்யன்
  • கம்யூனிஸம் எந்து எந்தினு?
  • கம்யூனிசமும் கிறிஸ்து மதமும்
  • மார்க்ஸிசம் (10 தொகுதிகள்)
  • இந்தியயுடே ஆத்மாவு
  • தார்மிக மூல்யங்கள்
  • இந்தியயும் சோஷலிசமும்
  • சாமூஹ்ய பரிவர்த்தனங்கள்
  • சோஷலிசவும் கம்யூனிசவும்
  • யேசுகிறிஸ்து மாஸ்கோவில்
வரலாறு
நாடகம்
  • பாட்டப்பாக்கி
  • ரக்தபானம்
கதைகள்
  • கண்ணுநீர்
பொருளியல்
  • தனசாஸ்த்ர பிரவேசிக
  • உறுப்பிக
  • தனசாஸ்த்ர தத்துவங்கள்
  • இந்நத்தே இந்தியௌடே சாம்பத்திக ஸ்திதி
இலக்கியக்கொள்கைகள்
  • எந்தாணு சாகித்யம்
  • புரோகமன சாகித்யம்
  • சாகித்ய நிரூபணம்
  • இந்தியயுடே சாகித்ய அபிவிருத்தி

ஆங்கிலம்

  • Indian Thought
  • Man and Society in Indian Philosophy
  • Marx Hegel and Sreesankara
  • Marx Comes to India (co-authored with P.C.Joshi)

இந்தி

  • பாரதீய சிந்தா பரம்பரா

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.