கே. எம். ஆதிமூலம்

From Tamil Wiki

கீரம்பூர் முத்துக்கிருஷ்ணன் ஆதிமூலம் (1938-2008) தமிழ்நாட்டின் நவீன ஓவியக் கலைஞர்களில் ஒருவர். தனது நவீன கோட்டோவியங்களால் தமிழ் இலக்கிய சூழலுக்கு பங்களிப்பாற்றியவர். இலக்கிய சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள், நூல்களுக்கான அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு என்று தொடர்ந்து இயங்கி நவீன ஓவிய வடிவிற்கான ஏற்பை தமிழ் சூழலில் உருவாக்கியவர். இந்திய மற்றும் வெளிநாடுகளில் ஓவியக் கண்காட்சிகள் நடத்தியவர். கண்காட்சிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளார். லலித் கலா அகாடமி விருது உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்.

தனி வாழ்க்கை:

ஆதிமூலம் 1935-ல் திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் பச்சைமலைக்கும் கொல்லிமலைக்கும் நடுவில் உள்ள கீரம்பூர் எனும் கிராமத்தில் பிறந்தார். தெலுங்கு பின்புலமுள்ள விவசாய குடும்பம். அப்பா முத்துக்கிருஷ்ணன், அம்மா செல்லம்மாள். இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் என மொத்தம் ஐந்து குழந்தைகள். ஆதிமூலம் நான்காவதாக பிறந்தார். கீரம்பூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார். பிறகு துறையூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

சிறுவயதில் தான் வளர்ந்த சூழலில் மரத்தச்சு உற்சவ வாகனங்கள் செய்கிறவர்கள், கூத்து போன்ற கிராமியக் கலைகள், பக்கத்து மாரியம்மன் கோவிலில் இருந்த மண் குதிரைகள், பெருமாள் கோவிலில் இருந்த தஞ்சாவூர் ஓவியம் போன்றவற்றால் கவரப்பட்டார். பள்ளி ஓவிய ஆசிரியர் வரைவதை பார்த்து தானும் சிலேட்டில் வரைய ஆரம்பித்தார். பத்தொன்பது வயதில் முதல் படம் முரசொலியில் மு. கருணாநிதியின் கவிதை வரிகளுடன் பிரசுரமானது. ஈ. வெ. ரா, அண்ணாதுரை, பாரதிதாசன் போன்ற தலைவர்களின் படத்தை வரைந்து அவர்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.

1959-ல் குடும்ப நண்பரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பி. எஸ். செட்டியார் மூலமாக சென்னை வந்தார். மூத்த அண்ணன் கே. எம். ரங்கசாமி ஆதரவுடன் சென்னை வந்தவர் பத்திரிகையிலோ சினிமாவிலோ வரையலாம் என்று நினைத்தார். இவரது ஓவியங்களை பார்த்தவர்கள் ஓவிய(சென்னை கலை மற்றும் கைவினை பள்ளி)ப் பள்ளியில் சேர்ந்து படிக்க சொன்னார்கள். பி். எஸ். செட்டியார் ஆதிமூலத்தை தனபாலிடம் அறிமுகப்படுத்தினார். கலைப் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சியை தனபால் அளித்தார்.

1960 முதல் 1966 வரை ஆறு வருட கலைப் பள்ளி படிப்பு. அங்கே மேற்கத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவ ஓவியங்கள் வரையும் பயிற்சிகளை பெற்றார். தன் சக மாணவரான பி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களுடன் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று நிலக் காட்சிகள், மக்கள் போன்றவற்றை வரைந்தார். 1965-ல் பனஸ்தளி என்ற ராஜஸ்தானில் உள்ள இடத்திற்கு அறுபது நாள் சுவரோவிய பயிற்சிக்காக ஆதிமூலம், பி. கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், ஹரிதாசன், வெங்கடபதி என்று ஐந்து பேரும் சேர்ந்து போனார்கள். சோழமண்டல கிராமம் ஆரம்பிக்கப்பட்ட போது அங்கே சக கலைஞர்களுடன் குடியேறினார். பின்னர் அங்கிருந்து வெளியேறி சோழமண்டலத்திற்கு அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனி வீடு கட்டி வாழ்ந்தார்.

படிப்பை முடித்த பிறகு நெசவாளர் பணிமையத்தில் பணியாற்றினார். 1989-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

இருமுறை லலித் கலா அகாடமி  உறுப்பினராக இருந்தார். தேசிய ஓவியக் கண்காட்சியில் நடுவராக இருந்திருக்கிறார்.

தன் 24 வயதில் திருமணம் செய்து கொண்டார். மனைவி பெயர் ஆ.லலிதா, இரு மகன்கள்: அபராஜிதன், அபனீந்திரன்.

கலை வாழ்க்கை:

கலைப்பள்ளி

கலைப்பள்ளி முதல்வராக இருந்த கே சி எஸ் பணிக்கர் மூலமாக மேற்கத்திய ஓவியர்கள் மற்றும் ஓவிய வடிவங்கள் ஆதிமூலத்திற்கு அறிமுகமானது.  தனபால், சந்தானராஜ், அல்போன்ஸ் ராஜ், எல் முனுசாமி, முருகேசன், கிருஷ்ணா ராவ் போன்ற அக்காலத்தின் சிறந்த கலைஞர்கள் ஆதிமூலத்திற்கு ஆசிரியர்களாக இருந்துள்ளனர். படிக்கும் போதே தனக்கென நவீன பாணியை உருவாக்கி கொண்டார். அதற்கு ஆதிமூலத்திற்கு சூழலில் இருந்து அறிமுகமான பாரம்பரிய கலைகளுடன் மேற்குலக ஓவிய மேதைகளும் உந்துதலாக இருந்தார்கள். மேற்கின் ஓவிய வடிவங்களான இம்பிரசனிசம் மற்றும் பிக்காசோவின் கியூபிசம் போன்றவற்றின் தாக்கம் ஆதிமூலத்திடம் இருந்தது. பிக்காசோவை தன் குரு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி ஓவியங்கள்

ஆதிமூலம் காந்தியிடம் பற்று கொண்டிருந்தார். 1969-ல் காந்தி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காந்தியின் தேர்ந்தெடுத்த புகைப்படங்களை வைத்து நூறு கருப்பு-வெள்ளை கோட்டோவியங்களை வரைந்து கண்காட்சி நடத்தினார். காந்தியின் ஆளுமை கியூபிசம் கலந்த நவீன வடிவில் வெளிப்படும் இவ்வோவியங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. கி. அ. சச்சிதானந்தம் ஆதிமூலத்தை எம். கோவிந்தனிடம் அறிமுகப்படுத்த எம். கோவிந்தன் கேரளாவில் நடத்திய சமீக்ஷா என்ற காலாண்டு இதழிலும் பிற மலையாள பத்திரிகை இலக்கிய இதழ்களிலும் ஆதிமூலத்தின் காந்தி ஓவியங்கள் வெளியாகின. தமிழில் 1968-ல் தொடங்கப்பட்ட நடை இதழின் ஐந்தாம் பதிப்பில் காந்தி ஓவியங்கள் இடம் பெற்றன.

இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள், நூல்களுக்கு ஓவியம் மற்றும் அட்டைப்படங்கள்

நவீன தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய ஆளுமைகளுடன் ஆதிமூலத்திற்கு இருந்த நல்லுறவு இலக்கிய சிற்றிதழ்களுக்கும் நூல்களுக்கும் தன் ஓவியங்கள் மூலம் பங்களிப்பாற்ற உதவியது. ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் அவரை கவர்ந்த எழுத்தாளர்கள். 1971-ல் கசடதபற இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்ட போது அதற்கு ஆதிமூலம் லட்சிணை- வாளையும் கேடயத்தையும் கைகளில் ஏந்தி இருக்கும் ஐயனார், எழுத்து, புத்தக வடிவமைப்பு செய்து கொடுத்தார். நடை, விருட்சம், யாத்ரா, காலச்சுவடு போன்ற பல்வேறு பத்திரிகைகளின் எழுத்துக்களை தமிழ் கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகளின் எழுத்து வடிவங்களின் அடிப்படையில் உருவாக்கினார். ஆதிமூலம் முதன்முதலில் செய்த புத்தக அட்டைபடம் 1969-ல் ஞானக்கூத்தனின் திருமணத்தை முன்னிட்டு க்ரியா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து வெளியிட்ட கவிதை தொகுப்பு- 'அன்று ஒரு கிழமை' நூலுக்கானது. அதன் பிறகு அசோகமித்திரனின் 'காலமும் ஐந்து குழந்தைகளும்', ஜி. நாகராஜன் எழுதிய 'நாளை மற்றொரு நாளே', மா. அரங்கநாதனின் 'பொருளின் பொருள் கவிதை', இமையத்தின் 'ஆறுமுகம்', சுந்தர ராமசாமியின் 'நடுநிசி நாய்கள்', கி. ராஜநாராயணனின் 'கரிசல்காட்டு கடிதாசி', 'கோபல்லபுரத்து மக்கள்' போன்ற பல நூல்கள் தொடர்கள் கட்டுரைகள் கவிதைகளுக்கு ஓவியங்கள் அட்டை படங்கள் நூல் வடிவமைப்பு செய்து கொடுத்தார்.

அரூப ஓவியங்கள்

1975-ல் அரூப ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். 1980-ல் வண்ணங்கள் உபயோகப்படுத்தி அரூப ஓவியங்கள் வரைய துவங்கினார்.

பிற ஓவியங்கள்

இந்திய ராஜாக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஆளுமை இழந்து வெறும் பிம்பமாக மட்டும் மாறியதை சித்தரிக்கும் விதத்தில் ராஜாக்களை முகம் இல்லாமல் வெறும் ராஜ உடைகளுடன் மட்டும் வரைந்த கோட்டோவியங்கள் பிரபலமானது. 1982-ல் பாரதியின் நூற்றாண்டு விழாவின் போது ஞானக்கூத்தன் கொண்டு வந்த 'பாரதியின் புதுக்கவிதை' என்கிற நூலுக்கு கம்புடன் பாரதி உட்கார்ந்து இருக்கும் ஓவியம், ஜெயகாந்தனின் மணிவிழாவிற்கு தயாரிக்கப்பட்ட இதழுக்கு அவர் வரைந்த ஜெயகாந்தன் ஓவியங்கள் பிரபலமானது. தெருக்கூத்து ஓவியங்களை வரைந்திருக்கிறார். திருப்பதி வெங்கடாசலபதியையும் அலமேலு மங்கை தாயாரையும் தனித்தனியாக படம் வரைந்தார். அதை துணியில் அச்சிட்டது திருப்பதி தேவஸ்தானம். இவரது ஓவியங்கள் பல தனி நபர் மற்றும் குழு கண்காட்சிகளில் பங்கெடுத்துள்ளன.

இறப்பு:

1998-ல் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பத்து வருடங்கள் சிகிச்சையில் இருந்தார். 2008 ஜனவரி 15 அன்று காலமானார்.

கலைத்துறையில் இடம், அழகியல்:

ஆதிமூலம் கருப்பு-வெள்ளை  கோட்டோவியங்களில் தனக்கேயுரிய பாணியை உருவாக்கியவர். தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, சுடுமண் சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியம் என்று தமிழ்ச்சூழலில் உள்ள கலைகளின் பாதிப்பும் வெளிப்பாட்டு யுக்தியில் மேற்கத்திய கலைஞர்களான பிக்காசோவின் கியூபிசம் போன்ற நவீன ஓவிய வடிவங்களின் பாதிப்பும் இவரிடம் உள்ளது.

சா. கந்தசாமி கூறியது: 1971-ல் 'கசடதபற' பத்திரிகையைத் துவக்கிய போது அதற்கு ஆதி தான் 'லோகோ' வரைந்து கொடுத்தார். கிராமத்திலிருந்து வந்தவர் என்பதால் நாங்கள் பேசுவதை கிரகித்துக் கொண்டு கையில் அரிவாளுடன் கூடிய அய்யனார் ஓவியம் வரைந்து கொண்டு வந்தார். எங்களுக்கு ஒரே வியப்பு. 'இது தான் வேண்டும்' என்று அவரை பாராட்டினோம்.

நவீன ஓவியங்கள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இலக்கியச் சூழலில் கூட நவீன ஓவிய வடிவம் குறித்த  ஒவ்வாமை இருந்தது. நவீன ஓவியத்தில் இருக்கும் யதார்த்தத்தை மீறிய கோணல்கள் உடைவுகள் அந்நியமாக தெரிந்தது. ஆதிமூலம் சிற்றிதழ்களில் நவீன ஓவியத்தை அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு ஏற்பை தமிழ் இலக்கியச் சூழலில் உருவாக்கினார். பின்னர் ஆனந்த விகடனில் கி. ராஜநாராயணனின் 'கரிசல் காட்டு கடிதாசி' தொடருக்கு ஆதிமூலத்தை ஓவியங்கள் வரைய கேட்டு கொண்ட போது தமிழின் ஜனரஞ்சக இதழ்களில் நவீன ஓவியங்கள் இடம்பெற தொடக்கம் குறிக்கப்பட்டது. இதன் மூலம் மக்களிடமும் நவீன ஓவியம் குறித்த இரசனை வளர காரணமானார். தமிழ் நவீன இலக்கியத்திற்கும் ஓவியத்திற்கும் இடையே உறவை ஏற்படுத்தியவர் ஆதிமூலம்.

தமிழ் கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி எழுத்துக்களில் உள்ள கோட்டோவியத் தன்மையின் அடிப்படையில் புத்தக அட்டைப்பட ஓவியங்கள், கையெழுத்து வடிவிலான தலைப்புகள் வடிவமைத்தார். பின்னர் இப்பாணி எழுத்துக்கள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தன. திரைப்படத்துறையிலும் பயன்படுத்தப்பட்டது.

ஆதிமூலம் லலித்கலா அகாடமியின் உயர் கமிட்டியில் இருந்த போது தமிழ்நாட்டு ஓவியர்களுக்கு கவனமும் அங்கீகாரமும் பெற முடிந்தது.

விவாதங்கள்:

ஆதிமூலத்தின் நவீன ஓவியங்கள் மற்றும் கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி சார்ந்து உருவாக்கப்பட்ட கையெழுத்து வடிவ எழுத்துருக்கள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளப்படாமல் விவாதத்தை கிளப்பின. தொடர்ந்து இவைகள் இலக்கிய சூழலிலும் வெகுஜன சூழலிலும் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்பை அடைந்தன.

தன் கடைசி காலங்களில் ஆரூப வண்ண ஓவியங்களை வரைந்தார். இவ்வோவியங்கள் தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்று ஆதிமூலத்திற்கு அங்கீகாரத்தை பெற்று தந்தது. ஆனால் தமிழ்ச் சூழலுக்கு இவ்வோவியங்கள் புரியவில்லை என்பதால் விமர்சனத்திற்கு உள்ளானது.

பங்கெடுத்த ஓவிய முகாம்கள்:

1979, தமிழ்நாடு மாநில லலித்கலா அகாடமியில் ஊட்டி ஓவிய முகாம்

1980, டெல்லி லலித்கலா அகாடமி

1980, காஷுவல்லி ஓவியர் முகாம்

1981, கேரள லலித்கலா அகாடமி

1986, SAARC ஓவிய முகாம், பெங்களூரு

1987, லலித்கலா அகாடமி ஓவிய முகாம், அந்தமான்

1989, அகில இந்திய ஓவியர்கள் முகாம், லக்னோ

1989, மும்பை ஆர்ட் சொசைட்டி முகாம்

1990, ONGC ஓவிய முகாம், டேராடூன்

1991, தென்னக மத்திய கலாச்சார மண்டலம், குவாலியர்

1992, அனைத்து இந்திய ஓவியர் முகாம், கான்பூர்

1992, தேசிய ஓவிய முகாம், பாண்டிச்சேரி

2000, தாஜ் ஹோட்டல் மற்றும் டெல்லி ஆர்ட் வேல்ட் கேலரி இணைந்து நடத்திய ஓவிய முகாம்

2001, ஹம்பி ஓவிய முகாம்- மைசூர் சேல்ஸ் இன்டர்நேஷனால் நடத்தியது

விருதுகள்:

1979 National Award, Lalit Kala Akademi, New Delhi

1978 Lalit Kala Academy, Chennai

1973 Academy of Fine Arts, Kolkata

1965, 66 Hyderabad Art Society''s Award, Hyderabad

1965, 66 Mumbai Art Society''s Award, Mumbai

1965 Lalit Kala Academy, Chennai

1964 Lalit Kala Academy, Chennai

1963 Chitra Kala Parishad, Bangalore

1963 Lalit Kala Academy, Chennai

மரணத்திற்குப் பிந்தைய கண்காட்சிகள்:

2012 'One Eye Sees, the Other Feels', The Viewing Room, Mumbai

2010 'Who Has Seen Gandhi?', presented by Tangerine Art Space at Raj Bhavan; KynKyny Art Gallery and Tangerine Art Space, Bangalore

2010 'K M Adimoolam: A Retrospective', Jehangir Art Gallery, Mumbai

2009 'Indian Harvest', presented by Crimson- The Art Resouce, Bangalore at SG Private Banking, Singapore

2008 ''From Beyond The Vindhyas'', Ganges Art, Kolkata

தனிநபர் கண்காட்சிகள்:

2007 ‘Lines form an Artistic Life’, The Drawings of Adimoolam, Book release and Exhibition, The Mint, New Delhi

2007 ‘Abstract’, Art Motif, New Delhi

2006 Solo Show, Saffronart, New York as well as Online Show at Saffronart.com

2005 Berkeley Square Gallery, London

2003 Crimson Art Resource with Windsor Sheraton, Bangalore

2000 Art Heritage, New Delhi

1999 Crimson Art Gallery, Bangalore

1997 Retrospective Exhibition of Drawings (1962-1996) organized by Values Art Foundation, Chennai and jointly sponsored by Crimson Art Resource and Max Muller Bhavan, Bangalore

1994 British Council, Chennai

1993 Crimson Art Gallery, Bangalore

1987 Jehangir Art Gallery, Mumbai

1981 Jehangir Art Gallery, Mumbai

1969 Sarala Art Centre, Chennai

1969 100 Drawings on Gandhiji to Mark his Birth Centenary

1966 First Solo Show, Chennai

குழு கண்காட்சிகள்:

2007 ‘Six Abstract Artists ‘ Show’, Akar Prakar Gallery, Kolkata

2006 India Fine Arts, Mumbai

2006 Art Motif, New Delhi

2006 Organized by Vinyasa Gallery, Chennai at New Delhi, Mumbai, Bangalore, Chennai

2004 ‘Indian Artists’ Show’, Prakriti Gallery, Hong Kong

2004 ‘Still Life’, Art Motif, New Delhi

2004 Art Motif Gallery, New Delhi

2003 ‘Five Chennai Artists ‘ Show’, Vinyasa Gallery, Chennai

2003 Indian and Korean artists at Korea

2002 ‘Three Artists’ , Anant Art Gallery, New Delhi

2002 ''Landscapes'', Art-Motif, New Delhi

2001 Art-Motif, New Delhi

1999 ‘Six Indian Artists’, London by Maya Art Gallery

1999 ‘Small Formats’, group show of 6 artists at Chennai, Bangalore, Mumbai and Hyderabad, by Art in Crafts, Bangalore

1997 ''Major Trends'', group show to commemorate 50 years of India''s Independence by Lalit Kala Akademi, New Delhi

1997 ''Major Trends'', group show to commemorate 50 years of India''s Independence, jointly sponsored by Crimson Art Resource and Max Muller Bhavan, Bangalore

1996 Exhibition to raise funds for Jehangir Art Gallery, Mumbai

1996 ''Madras-An Emotion'', organized by Values Art Foundation, Chennai

1995 ''Gandhiji in Postcard'', Traveling Exhibition at Various Cities in India

1995 Group show of Indian Artists organized by Sarala''s Art Centre at Tokyo, Japan

1995 ‘Three Indian Artists Show’, Maya Gallery, Hong Kong

1995 ''Save the Children'', Charity Exhibition at Mumbai

1993 ''Wounds'', Centre of International Modern Art (ClMA), Kolkata

1992 Sakshi Gallery, Bangalore

1992 Southern Region Art Exhibition by Birla Academy of Art and Culture, Kolkata

1991 ''9 Indian Artists'' by Walk-in-Gallery, Singapore

1991 ''Rimbaud-91'', organized by Alliance France De Chennai, in Chennai and France

1990 Sakshi Gallery, Chennai

1990 Dhoomimal Art Centre, New Delhi

1990 & 91 ''Touch Stone'' shows by Sakshi Gallery Chennai and Bangalore

1989 ''Nature and Environment'', exhibition organized by Lalit Kala Akademi, New Delhi

1988 Sakshi Gallery, Chennai

1983, 84 ''Sketch Book Series'' (drawings) Sarala Art Centre Chennai and Kritika Art Gallery, Bangalore

1983 Art Heritage Show, New Delhi

1973 Seven South Indian Painters, Australia  1972 Twenty Five Years of Indian Art, New Delhi

கூட்டு கண்காட்சிகள்:

2003 Forum Art Gallery, Chennai

2001 Jehangir Art Gallery, Mumbai

1995 Jehangir Art Gallery, Mumbai

1993 Jehangir Art Gallery, Mumbai

1991 Jehangir Art Gallery, Mumbai

பங்கேற்புகள்:

1987 19th Sao Paulo Biennale, Brazil

1986 Sixth Triennale India, New Delhi

1986-89 Kala Yatra Show, Bangalore

1963-85 National Exhibition of Art, New Delhi

முக்கிய பங்கேற்புகள்:

1986, தேசிய ஓவிய கண்காட்சியின் ஜூரியாக சேவை செய்தது

1990, துருக்கியில் மூன்றாவது அங்காரா பியன்னியல் நிகழ்விற்கு  இந்திய குழுவின் பொறுப்பாண்மை குழுவில் சேவை செய்தது

1991, டெல்லி லலித்கலா அகாடமி நடத்திய 'Drawings India-91' நிகழ்வின் அமைப்பாளர்

1992, மும்பை ஆர்ட் சொசைட்டி நடத்திய வருடாந்திர அனைத்து இந்திய ஓவியக் கண்காட்சியில் நடுவர்

1993, டெல்லியில் நடைபெற்ற தேசிய ஓவியக் கண்காட்சியில் தனிநபர் நடுவர்

நூல்கள்:

உயிர்க்கோடுகள் (கி. ராஜநாராயணனின் 'கரிசல்காட்டு கடிதாசி', 'கோபல்லபுரத்து மக்கள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளும், அதற்கு ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்களும்)

Lines from an Artistic Life: The Drawings of Adimoolam, Lund Humphries Publishers Ltd (28 March 2008)

The Art of Adimoolam, Gayatri Sinha, Mapin Publishing, 2005

உசாத்துணை:

ReplyForward