கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 18:10, 6 May 2022 by Navingssv (talk | contribs)
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (12 ஆகஸ்ட் 1892 - 15 ஜூன் 1975)

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (12 ஆகஸ்ட் 1892 - 15 ஜூன் 1975) வரலாற்றாளர், ஆய்வாளர், பேராசியர், எழுத்தாளர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்களும் நூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் பல புத்தகங்கள் வரலாற்று ஆய்விற்கான உசாத்துணையாக அமைந்தன. இவரது ”சோழர்கள்” வரலாற்று நூல்களில் முக்கியமானது.

பிறப்பு, கல்வி

கல்லிடைக்குறிச்சி அய்யாவய்யர் நீலகண்ட சாஸ்திரி 12 ஆகஸ்ட் 1892 அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் தெலுங்கு நியோகி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் அய்யாவய்யருக்கு மூன்றாவது மகன். இவரது தந்தை அய்யாவய்யர் கல்லிடைக்குறிச்சியில் ஆரம்பப் பள்ளி நடத்தி வந்தார். நீலகண்ட சாஸ்திரியால் பள்ளிக் கல்வியை முடிக்க முடிந்தாலும் அவரது தந்தையால் கல்லூரிக்கான செலவுகளை ஏற்க முடியவில்லை. சாஸ்திரி அவரது மூத்த சகோதிரர் குப்புசாமி சாஸ்திரியின் (சென்னை சமஸ்கிருதப் பள்ளிகளில் சூப்பரின்டென்ட் ஆக பணியாற்றினார்) உதவியால் கல்லூரிப் பயன்றார்.

நீலகண்ட சாஸ்திரி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பைப் (F.A) பயின்றார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். இங்கே டாக்டர் மெக்பேலிடம் வரலாறு படித்தார். முதுகலைப் பட்டத்தை மெட்ராஸ் மாகாணத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றார். சென்னையில் முதுகலைப் பட்டம் பயின்றபோது மாதம் 20 ரூபாய் உதவித் தொகையாகப் பெற்றார். அது அவரது முதுகலைப் படிப்பிற்கு உதவியது.

தனி வாழ்க்கை

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி லட்சுமி நரசம்மாளை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கே.என்.விஸ்வேஸ்வரன் ஒரே மகன். சாரதா சாடிலியா சாஸ்திரியின் பேத்தி.

பொது வாழ்க்கை

Nilakanda sastri history of south india.jpg
கல்வி பணி

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் 1913 முதல் 1918 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இங்கே இவருக்கு நண்பர்களாக பேராசிரியர் வி. சாரநாதன், கே.சி. வீரராகவய்யர், என். சங்கர ஐயர் நண்பர்களாகக் கிடைத்தனர். 1918 ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட முதலில் நால்வரும் ஒவ்வொருவராக கல்லூரியை விட்டு விலகினர். பின்னர் பனாரஸ் இந்துக் கல்லூரியில் சாஸ்திரிக்கு வேலைக் கிடைக்க சர். பி.எஸ். சிவசாமி ஐயர், வி.எஸ். ஸ்ரீனிவாஸ சாஸ்திரி உதவினர். இரண்டு ஆண்டுகள் வாரணாஸியில் வேலைச் செய்தபின் அங்கிருந்து சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். ஒன்பது வருடம் அங்கே பணிபுரிந்து, 1929 ஆம் ஆண்டு அண்ணாமலை செட்டியாருடன் ஏற்பட்ட கருந்து வேறுபாட்டால் வேலையை ராஜனாமா செய்தார்.

இதற்கிடையில் 1914 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்ட இந்தய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் (Vijayanagara Empire) 1929 இல் பணி ஓய்வு பெற்றார். சாஸ்திரி அந்த பணிக்கு விண்ணப்பித்த போது தேர்வு குழுவில் இருந்த சர் ஜடுநாத் சர்கார் சாஸ்திரியை தேர்வு செய்தார். 1929 முதல் 1947 இல் பணி ஓய்வு பெறும் வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவு நூல்களை மாற்றியமைத்து அவருக்கு பின்பு வரலாற்றாளர்கள் நிறை உருவாக உதவினார். சி. மீனாட்சி, டி.வி. மகாலிங்கம் போன்ற அறியப்பட்ட வரலாற்றாளர்கள் இவரது மாணவர்கள்.

1947 சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு 1952 முதல் 1956 மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் (Indology) துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1952 இல் சிறிது காலம் நேபாளம் சென்று அங்குள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தில் இந்திய பண்பாடுப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். 1956 சென்னை திரும்பி யுனெஸ்கோ மற்றும் சென்னை பல்கலைக்கழகம் நிறுவிய தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரியக் கலாச்சாரத்திற்கான (Institute of Traditional Cultures of South East Asia) கல்வி நிறுவனத்தின் இயக்குனரானார். இப்பதவியில் 1971 வரை இருந்தார். இக்காலக்கட்டத்தில் சிக்காகோ பல்கலைக்கழகத்திற்கு வருகைப் பேராசிரியராகச் சென்று அங்குள்ள தொல்லியல் துறையின் மத்திய ஆலோசனைக் குழுவிலும், இந்திய வரலாற்று பதிவு குழுவிலும் இருந்தார்.

வரலாற்றாளர் பணி
Nilakanda sastri ages.jpg

நீலகண்ட சாஸ்திரி சென்னைப் பல்கலைக்கழக இதழ், இந்திய வரலாற்று மலர், இந்தியன் ஆன்டிகுயரி, இந்தியன் ஹிஸ்டாரிகல் குவார்டர்லி, எபிகிராபிஃகா இண்டிகா, கல்கத்தா ரிவ்யூ ராயல் ஏஷியாடிக் சொசைட்டி மலர், கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஆப் இந்தியா, கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஆப் இந்தியா போன்ற பல வரலாற்று இதழ்களில் கட்டுரை எழுதினார்.

1929 ஆம் ஆண்டு சாஸ்திரியின் “பாண்டிய அரசு” (Pandiyan Kingdom) நூல் வெளிவந்தது. 1935 சாஸ்திரி எழுதிய “சோழர்கள்” (The Cholas) நூலை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

வரலாற்று ஆராய்ச்சியில் கால ஆராய்ச்சி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சாஸ்திரி அதனை திடமாக நம்பியதோடு மட்டுமல்லாமல் தனது மாணவர்களுக்கு கால ஆராய்ச்சியின் திட்பநுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையும் சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். வையாபுரிப்பிள்ளையின் கால ஆராய்ச்சி முறைமையில் சாஸ்திரியின் செல்வாக்கு இருப்பதை பின்னாளில் பல வரலாற்றாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

வரலாற்று ஆய்வு இடம்

Cholas.jpg

நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்று எழுத்து முறை பல வகையில் முன்னோடி முயற்சி. அவர் சங்க காலத்தை கி.மு. 100 முதல் கி.பி. 250 வரை என நிறுவுகிறார். இந்த கால ஆராய்ச்சி பின்னாளில் எஸ். வையாபுரிப்பிள்ளையால் மேற்கொள்ளப்பட்டது. நீலகண்ட சாஸ்திரியின் எழுத்து முறையில் இருந்த ஆய்வை நோக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதும் தன்மை பின்னாளில் இந்திய வரலாற்று எழுத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன. சாஸ்திரி எழுதிய பாண்டியர் மற்றும் சோழர் வரலாறு பிற்காலத்தில் டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் “பாண்டியர் வரலாறு”, “பிற்கால சோழர் வரலாறு” நூல்களுக்கு முன் மாதிரியாக அமைந்தன.

சோழர்கள் நூல் சாஸ்திரியின் தனிப்பட்ட சாதனையாகும். இந்நூல் அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இந்நூலில் முழுமையான சோழ வரலாறு, சோழ பேரரசின் ஆட்சி முறை, வரி விதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, தொழில், வணிகம், விவசாயம், நில உரிமை, கல்வி, சமயம், கலை இலக்கியம் என சோழர் காலத்தின் பல தளங்களையும் ஆதாரத்துடன் சொல்கிறார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி தன் தமிழ் இலக்கிய் வரலாறு நூலில் நீலகண்ட சாஸ்திரியைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இலக்கிய வரலாறு தொடர்பான மற்ற முக்கிய எழுத்துத் தொகுதி தமிழ் மொழி, தமிழ் நாடு பற்றிய வரலாற்று ஆய்வுகளாகும். எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், பி.ஆர். ஸ்ரீனிவாஸ் ஐயங்கார் போன்ற அறிஞர்களின் ஆக்கங்கள் இத்தொகுதிக்குள் அடங்கும். இவ்விரு அறிஞர்களும் இலக்கியச் சான்றுகளைக் கையாளும் வழியில் வேறுபாடுகள் உடையோராகக் காணப்பட்டோர் எனினும் சங்க இலக்கியக்களில் காணப்பட்டவற்றைச் சான்றுகளாகக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாறு பற்றிய தரமான இந்தியா முழுவதும் ஏற்புடைய கவர்ச்சி பெற்று விளங்கிய நூல்களை எழுதினர். இந்திய பண்பாட்டினை முழுமையாக விளங்கிக் கொள்வதற்குத் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளை உன்னிப்பாக ஆராய்தல் வேண்டும் என்பதனை இந்திய வரலாற்று ஆசிரியர்களிடையே வற்புறுத்தித் தென்னிந்திய வரலாற்றினை தாம் எழுதிய வகையாலும் எழுதியவற்றாலும் வன்மையான தளநிலைப்படுத்திய நீலகண்ட சாஸ்திரியின் வருகையுடனேயே சங்க இலக்கியத்தை வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகள் தெளிவுற விளக்கப்படுகின்றன” என்கிறார்.

பேராசிரியர். ஆர். செம்பகலட்சுமி சாஸ்திரியின் இல்லஸ்ட்ரேடட் ஹிஸ்டரி ஆப் சவுத் இந்தியா (Illustrated History of South India) புத்தகத்தின் முன்னுரையில் நீலகண்ட சாஸ்திரியைப் பற்றி குறிப்பிடும் போது,”சாஸ்திரியின் பணிகள் மரபான/பாரம்பரியத் தன்மைக் கொண்டது. வரலாற்று எழுத்தின் சமிபத்திய முன்னேறத்தில் அவர் ஒரு விமர்சன அணுகுமுறையை சேர்க்கிறார். ஆனால் இவ்வரிகள் சாஸ்திரியின் பணிகளை எவ்வகையிலும் குறைத்து சொல்வதற்கில்லை. சாஸ்திரி திடமான கால வரிசையை இட்டுத் தந்தார். அவை பேரரசின் காலத்தை ஆராய்ச்சி செய்வதில் முக்கிய பங்காற்றியது.” என்கிறார்.

வரலாற்றாளர் நொபுரோ கிராஷிமா (Noboru Karashima) A Concise History of South India என்னும் புத்தகத்தை 2014 ஆம் ஆண்டு திருத்தியவர், சாஸ்திரி அப்புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, “சாஸ்திரியின் இந்தப் புத்தகம் ஒரு பிரமாதமான வரலாற்று புத்தகம். சாஸ்திரி இதில் தென்னிந்தியாவின் வரலாற்று மூலத்தை உன்னிப்பாகவும், முழுவதுமாகவும் சேகரித்து அளித்திருக்கிறார்” என்கிறார்.

மறைவு

சென்னை மைலாப்பூரில் உள்ள எட்வர்ட் எலியாட்ஸ் சாலையில் (பழைய பெயர் தற்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அமைந்த சாஸ்திரியின் ”நீலேஷ்வர்” வீட்டில் ஜூன் 16, 1975 அன்று உயிரிழந்தார்.

விருதுகள்

  • 1958 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் நீலகண்ட சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

நூல்கள்

நீலகண்ட சாஸ்திரி தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார்.

  • The Pāṇḍyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century. Luzac. 1929.
  • Studies in Chola history and administration. University of Madras. 1932.
  • The Cholas. University of Madras. 1935.
  • A comprehensive history of India. Orient Longman. 1936.
  • Foreign Notices of South India: From Megasthenes to Ma Huan. University of Madras. 1939.
  • Historical method in relation to problems of South Indian history.. University of Madras. 1941.
  • Gleanings on social life from the Avadanas. Indian Research Institute. 1945.
  • Further sources of Vijayanagara history. University of Madras. 1946.
  • The Tamil kingdoms of South India. The National Information & Publications. 1948.
  • South Indian Influences in the Far East. Hind Kitabs. 1949.
  • History of Sri Vijaya. University of Madras. 1949.
  • A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar: from prehistoric times to the fall of Vijayanagar. Oxford University Press. 1955.
  • Historical method in relation to Indian history. 1956.
  • A Comprehensive History of India. Orient Longman. 1957.
  • Development of religion in South India. Orient Longman. 1963.
  • The Culture and History of the Tamils. K. L. Mukhopadhyay. 1964.
  • Sources of Indian history with special reference to South India. Asian Publishing House. 1964.
  • A great liberal: speeches and writings of Sir P. S. Sivaswami Aiyar. Allied Publishers. 1965.
  • Life and culture of the Indian people: a historical survey. Allied Publishers. 1966.
  • Cultural Contacts Between Aryans and Dravidians. Manaktalas. 1967.
  • Age of the Nandas and Mauryas. Motilal Banarsidass. 1967.
  • An Advanced history of India. Allied Publishers. 1971.
  • Sangam literature: its cults and cultures. Swathi Publishers. 1972.
  • Aspects of India's history and culture. Oriental Publishers. 1974.
  • South India and South-East Asia: studies in their history and culture. Geetha Book House (Mysore). 1978.

உசாத்துணை