கே.என். சிவராஜ பிள்ளை

From Tamil Wiki
Revision as of 06:41, 31 January 2022 by Ramya (talk | contribs) (Created page with "கே.என். சிவராஜ பிள்ளை (1879-1941) கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாசிரியர், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் என பன்முகங்களைக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆய்வுப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கே.என். சிவராஜ பிள்ளை (1879-1941) கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாசிரியர், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் என பன்முகங்களைக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆய்வுப் பாரம்பரியத்தில் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ வரிசையில் சிவராஜ பிள்ளை முக்கியமானவர். சங்க இலக்கியம், அகத்தியர், கம்பராமாயணம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்புகள்.

பிறப்பு, கல்வி, தனிவாழ்க்கை

1729இல் திருவிதாங்கூர் ராஜ்யம் உருவான பின்பு திருநெல்வேலி மாவட்டம் தென்பகுதிக் கிராமங்களிலிருந்து பிராமணர்களும் வேளாளர்களும் திருவிதாங்கூரில் குடியேறினர். அப்படிக் குடியேறிய ஊர்களில் பீமநகரியும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் உள்ள பீமநகரியில் பிறந்தார். கங்கைகொண்டான் சிவன் கோவிலின் சொத்துக்களைப் பரம்பரையாகப் பராமரித்த சைவக்குடும்பத்தைச் சார்ந்தவர். அண்ணன் குமரேச பிள்ளை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இவருக்கு அத்தான் முறையுடையவர்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவர். பி.ஏ. படிப்பு முடிந்ததும் காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருவனந்தபுரத்தில் குதிரைப் பயிற்சி காவல்துறை பயிற்சி, என முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் முதலில் வேலைபார்த்தார். காவல்துறை வேலையை விட்டபின் திருவனந்தபுரத்தில் கூப்புக்குத்தகை வேலைபார்த்தார். இந்த காலகட்டத்தில் செல்லம்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.

1923-25இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்தார்.

இலக்கியவாழ்க்கை

காவல்துறையில் இவர் பணி செய்தபோது தமிழ் இலக்கியங்களை முறையாகப் படித்தார். திருவனந்தபுரத்தில் தீவிர வாசிப்புடைய தமிழறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிள்ளை தன் பொறுப்பில் இருந்த People's Opinion என்னும் மும்மாத இதழைக் கவனித்துக் கொள்ளச் சொன்னதன் பேரில் அதையும் செய்தார்.

பீமநகரியின் அருகில் இருந்த நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்த திருப்பதி சாரம் என்ற ஊரிலிருந்து கம்பராமாயண ஏடுகளையும் திவ்வியப்பிரபந்த ஏடுகளையும் சிவராஜபிள்ளை சேகரித்து வையாபுரிப் பிள்ளைக்குக் கொடுத்திருக்கிறார். கம்பராமாயண குமரேச பிள்ளை என 19ஆம் நூற்றாண்டு இறுதியில் நாஞ்சில் நாட்டவரால் அழைக்கப்பட்ட சிவராஜ் பிள்ளையின் அண்ணன் குமரேசபிள்ளையின் வழியாக கம்பராமாயணத்தில் இவருக்கு ஆர்வம் வந்தது.

நூல்கள்

சிவராஜபிள்ளை எழுதிய நூல்கள். 2 ஆங்கில நூல்கள், 4 கவிதை நூல்கள், 2 சொல்லாராய்ச்சி நூல்கள். பல நூல்க அச்சில் வராத கையெழுத்துப் பிரதிகளாக நின்று போனது.

இவர் முதலில் 1920இல் தொகுத்த நூல் சிறுபாமாலை. திருவனந்தபுரம் இலக்குமணபிள்ளை, பண்டித முத்துசாமி பிள்ளை, கவிமணி போன்றோர் எழுதிய குழந்தைப் பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. 1927இல் நெல்லைத் தமிழ்க்கழகம் வெளியிட்ட மேகமாலை கவிதைத் தொகுப்பு முத்தையா பிள்ளையின் உதவியுடன் வந்தது. குமரன், பத்திரிகையில் விருத்தப்பாவால் ஆன கம்பராமாயண கௌஸ்துபம் பாடல்களின் விமர்சனம் வெளிவந்தது. உந்து என்னும் சொல்லாராய்ச்சி அல்லது புறநானூற்றின் பழைமை (1929), Agastiya in the Tamil Land (1930), The Chronology of the Early Tamils (1932) ஆகிய மூன்று நூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிவராஜ பிள்ளை பணி செய்தபோது வெளிவந்தவை.

1935இல் சென்னையில் இருக்கும்போது நாஞ்சில் வெண்பா என்ற கவிதை நூலை வெளியிட்டார். இது நூல். 1968இல் இவர் இறந்த பிறகு சில தமிழ்மொழி ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தது. சிவராஜ பிள்ளை எழுதி அச்சில் வராத நூல்களாக வாழ்க்கை நூல், சிறுநூல் தொகை, இயற்கைப் பாவினமும் சில்லறைப் பாக்களும், நாட்டுக்கண்ணிகளும் சந்தப்பாக்களும், இசைப் பாட்டுகள், அருவியின் கதை, புதுஞானக்கட்டளைக் கலிப்பா ஆகியன. இவர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளும் நூல் வடிவில் வரவில்லை.

இவரது அச்சில் வராத கவிதைகளில் வாழ்க்கைநூல் குறட்பா வடிவில் அமைந்தது. இது 6 இயல்கள், 160 அதிகாரம், 2118 குறள்கள் கொண்டது. அதிகாரத்துக்கு 10 முதல் 30 பாடல்கள். இவர் 1939இல் இதை எழுதியபோது திருநெல்வேலிப் பதிப்பாளர் அச்சிட முன்வந்திருக்கிறார். சிவராஜ பிள்ளை ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டார்.

நாகர்கோவிலில் சிதம்பரநகர் ஜங்ஷனில் சிவராஜபிள்ளை வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் அவரது நூற்றாண்டுவிழா நடந்தது (1979 பெப்ரவரி). தியாகி பி.எஸ். மணி ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் 'சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி' நூல் வெளியிடப்பட்டது. அவரது கையெழுத்து பிரதிகள் பல தொலைந்துபோயின என்றும், வாழ்க்கைநூல் என் நூலின் கையெழுத்துப் பிரதி மட்டும் தம்மிடம் இருப்பதாக அது வெளியிடப்படும் என்றும் சிவராஜ பிள்ளையின் உறவின் ஒருவர் கூறினார். ஆனால் அது வந்ததாகத் தெரியவில்லை.

1898இல் திருவனந்தபுரம், சாலை செந்தமிழ்க் கழகத்தில் இவர் பேசிய பேச்சு செந்தமிழ் தொகுதி 19 இல் உள்ளது. இதைச் சென்னைப் பல்கலைக்கழகம் (1981) வெளியிட்டுள்ளது. இது கவிதை பற்றிய விமர்சனம். ஒருவகையில் சிவராஜ பிள்ளையின் கருத்தாக்கமாக இக்கட்டுரைப் பகுதியைக் கொள்ளலாம். இது 1921இல் “செந்தமிழ் கவிவாணருக்கு” என்ற தலைப்பில் செந்தமிழில் வெளியானது.

கட்டுரை

1893இல் விவேகானந்தர் திருவனந்தபுரம் வந்தபோது சுந்தரம்பிள்ளையுடன் அத்வைதம், சைவசித்தாந்தம் பற்றி விவாதம் பற்றிய கட்டுரைyஐ சிவராஜ பிள்ளை People's Opinion பத்திரிகையில் எழுதினார். இவர் நடத்திய Malabar ouarterly Review இதழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை "Nancil Nadu Vellalas" என்ற 30 பக்கக் கட்டுரையை எழுதினார். இராவணன் ஆரியனா திராவிடனா என்னும் விவாதத்தை இலங்கை பொன்னம்பலம் பிள்ளை ஆரம்பித்ததற்கு Malabar Quarterly Review காரணமாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் பரோடா அரசர் நடத்திய ஒரு கட்டுரைப் போட்டிக்கு (Carte) இவர் அனுப்பிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றது (ரூ.500). Monist இதழில் Indian Objectives என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகள் எல்லாம் 1922க்கு முன்வந்தவை. இவை நூல் வடிவில் வரவில்லை .

உரைகள்

சிவராஜ பிள்ளை திருவனந்தபுரத்தில் இருந்தபோது Trivandrum Literary Clubக்கு இராஜாஜி பேச வந்தார். இந்தக் கூட்டத்தில் சிவராஜ பிள்ளை வர்ணாஸ்ர தர்மம் சாதிக்கெதிரானது என்னும் தலைப்பில் பேசினார். பின்னர் இதை நூல் வடிவில் ஆக்கினார். Indian Social idol Review என்ற இந்த நீண்ட கட்டுரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. வர்ணாஸ்ர தர்மம் இந்தியாவை எப்படிப் பாதிக்கிறது. தமிழ் மக்களுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு என்ன; இந்திய சாதிகளுக்கும் சடங்குகளுக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது என்னும் கருத்துக்கள் இதில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன.

திருவனந்தபுரம் சமூக உரிமைக் கழகம் என்ற அமைப்பில் முதல் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு சிறுபிரசுரமாக வந்திருக்கிறது.

ஆராய்ச்சியாளர்

உந்து என்னும் இடைச்சொல் பிரயோகம் அல்லது புறநானூற்றின் பழைமை என்ற நூல் ஆராய்ச்சி நூல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு. இந்நூலில், புறநானூற்றில் வரும் உந்து என்னும் வினைமுற்று குறித்த ஆய்வின்வழி அந்நூலின் காலத்தை வரையறை செய்யலாம் என்கிறார். உந்து என்பது திணை, பால், எண், இடம், சுட்டாத வினைமுற்று. தொல்காப்பியர் இதுகுறித்து இலக்கணம் வகுக்கவில்லை. அதனால் புறநானூற்றுப் பாடல்களுக்கும் பிற்பட்டது தொல்காப்பியம்; கோவூர்கிழார் உட்பட புலவர்களின் பாடல்களின் சொல், நடை, போக்கு அடிப்படையில் தொல்காப்பியம் புறநானூறுக்குப் பிற்பட்டது. வடமொழிச் சொற்களின் கலப்பு இல்லாத பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அதனால் தொல்காப்பியம் புறநானூற்றுக்குப் பிற்பட்டது என்னும் செய்திகளை முன்வைத்தார்.

சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான Agastya in the Tamil land (1930) என்னும் ஆங்கில நூலுக்கு மறுபதிப்பு வந்திருக்கிறது. இந்த நூலில் Early History of Decah (Bhahdagar), History of Ancient Sanskrit Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்த்திருக்கிறார். அகத்தியரை இராமாயண, ரிக்வேத நூல்களின்படி பார்ப்பது பொதுவான ஆராய்ச்சியாகிவிட்டது. அகத்தியர் குறித்த தொன்மம் கம்போடியா, இந்தோனேஷியா தீவுகளில் உண்டு. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. தொல்காப்பியர் அகத்தியரைக் குறிக்கவில்லை. காரிக்கண்ணனார் ஆலத்தூர் கிழார், தாமப்பல் கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த பழைய தொன்மத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட The Chronology of the Early Tamils (1932) என்ற புத்தகமும் மறுபதிப்பு வந்திருக்கிறது. கே.என். சிவராஜ பிள்ளையின் பெயரைக் தக்கவைத்துக்கொண்டிருப்பது இந்தப் புத்தகம் ஒன்றுதான். சங்கப் பாடல்களை வரலாற்று ரீதியில் ஆய்வு செய்கிறது இந்த ஆங்கிலப் புத்தகம். சங்க இலக்கியப் பெருமை பேச எழுந்த நூல். சங்கப் பாடல்களில் கூறப்பட்டவை உண்மை என உணர்வதற்காக எழுதப்பட்ட நூல். நான்கு பெரிய தலைப்புகளும் 87 உள் தலைப்புகளும் கொண்ட இந்நூலில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட திராவிடர் பற்றிய ஆய்வுச் செய்திகள் உண்டு.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்ற வரிசையில் அடக்கும் இவர் சங்கம் இல்லை என்பதற்குப் பத்துக் காரணங்கள் கூறுகிறார். சங்கப்பாடல்கள் தொகுக்கப்பட்ட முறையையும் விவரிக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை மட்டுமேம் பழம் இலக்கியங்களாக ஒத்துக்கொள்கின்றன. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றைத் தொகுத்தவர் பெருந்தேவனார். நல்லந்துவனார் கலித்தொகையை இயற்றியவர்; தொகுத்தவரும் அவரே. பரிபாடல் பிற்காலத்தது.

சங்கப் பாடல்களின் அடிப்படையில் அரசர்களைப் பத்து தலைமுறைகளாக வரிசைப்படுத்துகிறார். முதல் தலைமுறையினர் செழியன், தித்தன் போன்ற சோழர்கள். இவர்களில் சிலர் உறையூரைக் கைப்பற்றியவர்கள். பத்தாம் தலைமுறையினர் கோச்செங்கண் சோழன். பழந்தமிழ் மன்னர்கள் கிமு 50 முதல் 200வரை வாழ்ந்தவர்கள். இதுபோன்று நுட்பமாக ஆராயப்பட்டது இந்நூல். இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வரவில்லை.

சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி என்ற நூல் சிவராஜ பிள்ளையின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது(1997). 79 சொற்கள், தொடர்கள் பற்றிய ஆராய்ச்சி நூல். உ.வே.சாவின் சங்கப் பதிப்புகளில் சில இடங்களில் சரியானபடி பொருள் இல்லை என இதில் மறுக்கிறார். இந்நூலில் ஓரிடத்தில் "எனது தொல்காப்பிய உரிச்சொல்” ஆராய்ச்சியில் காண்க என்கிறார். அப்படியானால் சிவராஜ பிள்ளை தொல்காப்பிய உரிச்சொல் நிகண்டு என்ற நூலை எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது.

கம்பராமாயண ஆராய்ச்சி

1923-25இல் இந்தச் சமயத்தில் யாழ்ப்பாணம் பொன்னம்பலம் பிள்ளை கம்பராமாயண ஆராய்ச்சித் திட்டத்திற்காக யாழ்ப்பாணம் வரும்படி சிவராஜ பிள்ளையை அழைத்ததன் பேரில் அங்கு சென்றார். யாழ்ப்பாணத்திலிருந்து பீமநகரிக்கு வந்ததும் பழைய இலக்கியங்கள் பற்றி ஆய்வு செய்யத் திட்டமிட்டார். அப்போது பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் வேலைக்கு அவரை அழைத்தனர். 1926இல் குடும்பத்துடன் சென்னை சென்றார்.

கம்பராமாயணக் கௌஸ்துபம் பாடல்களை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது (1981). இது கம்பராமாயணத்துக்குக் கவிதை வடிவிலான விமர்சனம். திருமாலின் கௌஸ்துப அணி போன்றது இது என்ற பொருளை உணர்த்துவது. முன்னுரைப் படலம் முதல் இலக்கணப்படலம் ஈறாக பல படலங்களையும் 422 பாடல்களையும் கொண்டது. இவற்றில் 36 பாடல்கள் கம்பனிடமிருந்து எடுத்துக்காட்டப்பட்டவை.

தமிழ்த்துறை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் அனவரத விநாயகம் பிள்ளை, வெங்கடராஜூலு ரெட்டியார் போன்றோரும் மலையாள ஆராய்ச்சித் துறையில் அச்சுத மேனனும் இருந்தனர். இந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் இவரது மூன்று நூல்களை வெளியிட்டது. இங்கு ஆராய்ச்சித் துறையில் முதுநிலை விரிவுரையாளர் என்னும் பதவியில் இருக்கும்போது ஓய்வு பெற்றார்.

பத்திரிகையாளர்

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் People's Opinion நின்றுபோன பிறகு Malabar Quarterly Review மும்மாத ஆராய்ச்சி இதழை சிவராஜ பிள்ளை நடத்தினார். இதை நடத்துவதற்கென்று ஓர் அச்சகத்தை விலைக்கு வாங்கினார். திருவனந்தபுரம் கூப்பு வியாபாரம் நஷ்டமானபோது பத்திரிகையும் நின்றுபோனது. பின்னர் பீம நகரிக்கு வந்து நாஞ்சில்நேசன் என்னும் பத்திரிகையை ஆரம்பித்தார். கவிமணியின் சில கவிதைகள் இதில் வந்தன. கன்னடியன் கால் பற்றிய சிறு குறிப்பும் எழுதியிருக்கிறார். "அப்போது இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு ஆளில்லாமல் பீமநகரியில் இருந்ததுதான் தண்டனை” என்று சொல்லியிருக்கிறார் என்றும் இது பெரும்பாலும் என்று 1923ஆக இருக்கலாம் என்றும் அ.கா. பெருமாள் தன் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 1937இல் ஜனமித்திரன் என்ற மும்மாத இதழை ஆரம்பித்தார். இது ஓராண்டு நடந்தது.

இறுதிக்காலம்

சிவராஜ பிள்ளை ஓய்வுபெற்றபின் நாகர்கோவில், சிதம்பர நகரில் ஒரு வீட்டைக்கட்டிக்கொண்டு வாழ்ந்தார். 1941இல் நாகர்கோவில் சிதம்பரநகர் ஜங்ஷன் அமரரானார். அப்போது வயது 62 தான். 1937இல் …நண்பர்களுடன் உரையாடுதல், கவிதை எழுதுதல் எனப் பொழுதைக் கழித்தார். ஒருவகையில் அவர் ஓய்வுபெற்றபின் தீவிரமாய் எழுதவில்லை. கவிதையிலும் தத்துவத்திலும் ஈடுபாடு காட்டியிருக்கிறார். ஆனால் அவர் தத்துவவாதியாகவோ கவிஞராகவோ அடையாளப்படுத்தப்படவில்லை. சிவராஜ பிள்ளை நாகர்கோவிலில் இருந்த காலக்கட்டத்தில் (1936-41) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை புத்தேரியில் இருந்தார். தமிழகக் கவிஞர்களும் நடிகர்களும் ஆராய்ச்சியாளர்களும் கன்னியாகுமரிக்கு வந்தபோதெல்லாம் கவிமணியைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். திருவனந்தபுரத்திலிருந்த மு. இராகவையங்கார் கவிமணியைச் சந்திக்க அடிக்கடி வந்திருக்கிறார்

உசாத்துணை