under review

கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 22:08, 5 February 2024 by Tamizhkalai (talk | contribs)
Cayro.jpg

கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்தின் நகரில் அமைந்துள்ளது. இதன் பதிவு எண் NBD 4077. 1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி அரசாங்கப் பகுதி உதவிப் பெறுகிறது.

வரலாறு

கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் நீலாய் நகரத்திலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் (நீலாய் மூன்று) இருந்தது. மலாயா எஸ்டேட் எனும் பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான இத்தோட்டத்தில் 1926-ஆம் ஆண்டு இப்பள்ளித் தோட்ட நிர்வாகத்தால் நிறுவப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், தோட்டத்தில் பணிபுரிந்த திரு. நாகூரான், 1950-களில் தோட்டத்தில் கங்காணியாகப் பணிபுரிந்த திரு. சோணன் கங்காணி ஆகியோர் இப்பள்ளியை நடத்தினர். 1957-ஆம் ஆண்டு மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பள்ளி அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டு திரு.N.C. வரதன் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1960-களில் ஏற்பட்ட தோட்டத்துண்டாடல் பிரச்சனையில் இத்தோட்டத்தில் எஞ்சிய சுமார் 600 ஏக்கர் நிலத்தைத் தேசியக் கூட்டுறவுச் சங்கம் வாங்கி இப்பள்ளிக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வந்தது.

புதிய கட்டடம்

1981-ஆம் ஆண்டு இப்பள்ளியின் மிகப்பழமையான தோற்றத்தை மாற்றி ஒரு புதிய கட்டடத்தை ஏறக்குறைய ரி.ம 22,000 செலவில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் நிர்மாணித்தது. நவம்பர் 10, 1981 அன்று தோ புவான் உமா சம்பந்தன் அவர்களால் திறப்பு விழா காணப்பட்டது. 3 வகுப்பறைகளையும் ஓர் அலுவலகத்தையும் கொண்ட இப்பள்ளி 1996-ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை 45 முதல் 75 வரை சீராக இருந்தது. அன்றைய தலைமை ஆசிரியர் திரு. சா. சிவலிங்கம், ஆசிரியர்கள் பெ.ரெங்கசாமி, பெ. கிருஷ்ணன் ஆகியோரின் முயற்சியினால் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் ஆதரவுடன் 3 கொள்கல அறைகளில் இப்பள்ளி தொடர்ந்து இயங்கியது.

ஐந்து ஏக்கர் நிலம்

கெய்ரோ தமிழ்ப்பள்ளியின் சூழலை அறிந்த நெகிரி மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சுந்தரம் மந்தின் நகரில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை இப்பள்ளிக்காகப் பெற்றுத்தந்தார். அந்நிலத்தில் பள்ளி உருவாகும்வரை நெகிரி மாநில கல்வி இலாக்காவின் அனுமதி பெற்று செப்டம்பர் 3, 1999 முதல் மந்தின் ஆலய நிலத்தில் பள்ளி தற்காலிகமாகச் செயல்பட்டது. நெகிரி மாநில அரசாங்கம் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் ஆழமான குளங்கள் இருந்தன.  அந்தக் குளங்களைத் தூர்ப்பதற்கு நெகிரி மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தா. இராஜகோபாலு உதவினார். தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலவை உறுப்பினர் திரு. மூர்த்தியின் முயற்சியினால் ஹியூம் இன்டஸ்ட்றில் நிறுவனத்தின் சார்பில் குளங்களைத் தூர்க்கும் பணி முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழா

புதிய கட்டடத் திறப்பு விழா

கெய்ரோ பள்ளியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்  நாட்டு விழா ஜூலை 2, 2005-ல் மதிப்புமிகு டான்ஶ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இரண்டு வரிசை வகுப்பறைகள், சிற்றுண்டிச்சாலை, அலுவலக அறை உள்ளிட்ட இப்பள்ளிக்கட்டடம் சுமார் ரி.ம 600,000 செலவில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் முழுசெலவில் நிர்மாணிக்கப்பட்டது. நவம்பர் 1, 2005-ல் ஜேக்கப்தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுந்தரராஜூ தலைமையில் புதிய கட்டடம் திறப்பு விழா கண்டது.

இணைக்கட்டடம்

பள்ளியின் இணைக்கட்டடம் ஏப்ரல் 1, 2010 அன்று தொடங்கி செப்டம்பர் 15, 2010 அன்று கட்டி முடிக்கப்பட்டது. இப்புதிய கட்டடம் நவம்பர் 14, 2010 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறப்புவிழா கண்டது.

கணினி மையம்

2010 -ல் நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளியில் கணினி மையம் அமைக்கப்பட்டது. இக்கணினி மையத்தை நடத்த தி.எச்.ஆர் ராகா, ஆஸ்ட்ரோ மற்றும் மெக்னம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் 42 கணினிகளும் 42 நாற்காலிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் புதிய பள்ளித் திடல் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணிமாறன் தலைமையில் உருவாக்கப்பட்டது.

உசாத்துணை

  • 1897 - 2011 - நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.