being created

குழித்துறை மகாதேவர் கோவில்

From Tamil Wiki

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் மகாதேவர் எனும் சிவன். சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.

இடம்

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் குழித்துறை சந்திப்பிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இருந்து குழித்துறை தபால் நிலையம் அருகே பிரியும் சாலையில் முடிவில் குழித்துறை மகாதேவர் கோவில் உள்ளது. கோவில் சிறிய பாறை மேல் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மூலவர் மகாதேவர், பிரம்மா, விஷ்ணு.

மூலவர்

குழித்துறை மகாதேவர் கோவிலில் மகாதேவர் என்னும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் மூல தெய்வங்களாக உள்ளனர். பிரம்மா கருவறை பிற்காலத்தில் அமைக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதத் திருவிழா சிவன், விஷ்ணு இருவருக்குமுரியது.

தொன்மம்

குழித்துறை மகாதேவர் கோவில் சார்ந்து புராண கதைகள் இல்லை. கோவிலை கட்டிய திருவிதாங்கூர் அரச குடும்பம் தொடர்புடைய ஆலயம் என்பதால் திருவிதாங்கூர் வரலாற்றோடு தொடர்புடைய கதைகள் உள்ளன.

மார்த்தாண்டன் பிள்ளை கதை

ஒரு காலத்தில் துறைமுகமாக இருந்த இடத்தில் ஆய அரசர் ராஜவர்மரால் ஆலயம் கட்டப்படுகிறது. பூஜைகள், வேதபாடசாலை, ஊட்டுபுரை, களரிப் பயிற்சி என சிறப்பாக நடத்தி வரபட்டது. பிற்காலத்தில் திருவிதாங்கூர் அரசாட்சியின் போது முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளது. எட்டுவீட்டு பிள்ளைமார்களில் ஒருவரான மார்த்தாண்டன் பிள்ளை மற்றும் இடத்தறை போற்றி இருவர் தலைமையில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்துள்ளன. பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் மார்த்தாண்டன் பிள்ளையுடன் எட்டுவீட்டு பிள்ளைமார் கல்குளத்தில் தூக்கிலேற்றி கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் எடத்தறை போற்றியும் காலமானார். மார்த்தாண்டன் பிள்ளையின் ஆத்துமா பகையுடன் ஆலையத்தில் பிரம்ம ராட்சசனாக நிலைக் கொள்கிறார்.

கோவில் அமைப்பு

குழித்துறை மகாதேவர் கோவில் சிறிய குன்றின் மேல் பாறைகள் சூழ்ந்து உள்ளது. கோவில் கிழக்கே ஆற்றை நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளி வாசல் இல்லை, தென்கிழக்கு மூலையில் படித்துறை உள்ளது. மேற்கு வெளி வாசல் முன் இரண்டு யானைகள் மற்றும் சங்கு கொண்ட திருவிதாங்கூர் அரசச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

வெளிப்பிராகாரம்

மேற்கு வெளி வாசல் வழி மட்டுமே கோவிலினுள் செல்ல முடியும். மேற்கு வெளி வாசல் உள்ளே இடப்பக்கம் வெளிப்பிரகாரத்தில் பெரிய கோவில் மணி மற்றும் அலுவலகம் உள்ளது. வடக்கு வெளிபிரகாரத்தில் பாறை மேல் நாகசிற்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பாறையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன, கீழ் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கில் முகப்பு பகுதி செல்ல பாறையில் படிகள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வெளிப்பிராகாரத்தில் கிணறு மற்றும் மரங்கள் உள்ளன. தெற்கு வெளி பிராகாரத்தில் ஊட்டுபுரைகான வாயில் உள்ளது, வெளியே கேரள பாணி ஊட்டுபுரை உள்ளது. தென்மேற்கு மூலையில் கம்பி அளியிடப்பட்ட இரு மேடைகள் மேல் கல் விளக்குகள் நாகர் சிற்பங்கள் மற்றும் கணபதி சிற்பங்கள் உள்ளன.

கோவில் முகப்பு

கோவில் முகப்பு அகன்று கேரள பாணி ஓட்டுக் கூரையுடன் காணப்படுகிறது. கிழக்கு முகப்பின் தெற்கு பக்க வாசல் சிவன் கருவறை முன்பும் வடக்கு பக்க வாசல் விஷ்ணு கருவறை முன்பும் உள்ளன. நடுவில் ஒரு சிறிய வாசல் உயரத்தில் பிரம்மா கருவறை முன்பாக உள்ளது. நடுவாசல் வழி பிரம்மா கருவறையை பார்க்க மட்டுமே முடியும் உள்ளே செல்ல முடியாது. தெற்கு மற்றும் வடக்கு வாசல்கள் முன் நான்கு தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆன மாடங்கள் உள்ளன. மாடங்களில் பலிபீடங்கள் உள்ளன. முகப்பு சுவர்களில் கல் விளக்குகள் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

கொடிமரங்கள்

கோவில் முகப்பு முன் சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவில் வாசல்கள் முன் இரண்டு தேக்கு மரத்தின் மீது செம்பு தகட்டால் பொதியப்பட்ட கொடிமரங்கள் பீடத்தின் மீது 2000-ல் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் சிவன் கோவில் கொடிமரம் 2016-ல் முறிந்து விழுந்துள்ளது. பின் ஆருடம் பார்க்கப்பட்டு கொடிமரம் வேண்டாம் என்று முடிவானதால் கொடிமரங்கள் மற்றும் கொடிமர பீடங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டன. இப்போது திருவிழா காலங்களில் மட்டும் தற்காலிக கமுகு மரத்தாலான கொடிமரம் நடப்படுகிறது.

உள்பிரகாரம்

கிழக்கு வாயில் உள்ளே தூண்களுடன் திண்ணை ஒட்டுக் கூரையுடன் உள்ளது. தென் கிழக்கு மூலையில் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அறையில் பூஜை பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் நான்கு புறமும் இது போன்று திண்ணை, ஓட்டுக் கூரை கொண்ட சுற்றாலை உள்ளது. தெற்கு சுற்றாலையின் பெரும்பகுதி அறைகளாக மாற்றப்பட்டு கோவில் காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தென் மேற்கு மூலை சுற்றாலை திண்ணையில் விநாயகர் கருவறை உள்ளது. மேற்கு திருச்சுற்றில் ஒரு வாயில் உள்ளது. ஆலய பணியாளர்கள், பூசகர் மேற்கு வாயிலை பயன்படுத்துகின்றனர். வடமேற்கு மூலையில் சிறிய அறையில் சில தெய்வங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு மூலையில் பாறைபகுதி தரைமட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படுகிறது.

சிவன் கோவில்

சிவன் கோவில் கருவறை மற்றும் நந்தி மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நந்தி மண்டபம் நான்கு கல்தூண்களுடன் மர அளிகள் மேல் ஓட்டு கூரையுடன் காணப்படுகிறது. கல்லால் ஆன நந்திச் சிற்பம் உள்ளது, இரண்டு சரவிளக்குகள் இரண்டு மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன, குடை மற்றும் நாகம் கொண்ட ஒரு பெருய விளக்கு உள்ளது. மூலவர் மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கருவறை கூம்பு வடிவ கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. மேற்கூரை மரப்பலகையால் வேயப்பட்டு செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. கூரையின் உச்சியில் நான்கு புறங்களில் பாம்புகளும் மூன்று குடங்கள் கொண்ட கலசமும் உள்ளன.கருவறைக்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மா கோவில்

பிரம்மா கோவில் சதுர வடிவ அர்த்த மண்டபம் மற்றும் செவ்வக வடிவ கருவறை கொண்டது. கூரை கேரள பாணி ஓட்டுக் கூரை. கூரையின் உச்சியில் கலசம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மா கருவறையில் சிவலிங்கம் உள்ளது. முகமண்டபம், வாகனம் இல்லை.

விஷ்ணு கோவில்

விஷ்ணு கோவில் கருவறை மற்றும் முகமண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நான்கு தூண்கள் கொண்ட முகமண்டபத்தில் கருடன் சிற்பம் மற்றும் சரவிளக்குகள், மணிகள் உள்ளன. முகமண்டபம் மிக எளிய வேலைபாடுகளுள்ள மர விட்டத்தின் மேல் ஓடு வேயப்பட்ட கூரைக் கொண்டது.

கருவறை வட்ட வடிவம், மரஅளிகள் மீது செம்பு தகடு போர்த்தப்பட்ட கூம்பு வடிவ மேற்கூரைக் கொண்டது. கூரையின் உச்சியில் மூன்று குடங்கள் கொண்ட கலசம், நான்கு உலோக நாகங்கள் நான்கு திசைகளிலும் உள்ளன. கருவறையில் விஷ்ணு சிற்பம் உள்ளது.

சாமுண்டீஸ்வரி கோவில்

குழித்துறை மகாதேவர் கோவிலுடன் தொடர்புடைய சாமுண்டீஸ்வரி கோவில் கோவில் வளாகத்தின் வெளியே தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. அரச குடும்பத்தின் பரதேவதையான சாமுண்டீஸ்வரி கோவில் ஓலைக்கூரையாக இருந்து 2007-ல் புதுப்பிக்கப்பட்டது. சாமுண்டீஸ்வரி கோவிலின் தெற்கே இக்கோவில்களை முன்காலத்தில் பராமரித்து வந்த நிர்வாகிகள் தங்கிய கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது.

(பார்க்க குழித்துறை சாமுண்டீஸ்வரி கோவில்)

பூஜைகளும் விழாக்களும்

குழித்துறை மகாதேவர் கோவில் பூஜைகள் கேரள தாந்திரிக முறைபடி நடைபெறுகின்றன. தினம் ஐந்து காலப் பூஜை நடைபெறும். திருப்பலி முன்னர் மூன்று முறை நடத்தப்பட்டு இப்போது பூசகர் ஒருவரே உள்ள காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. பிரதோஷம், ஆயில்யம், மிருத்தியுஞ்சய ஹோமம் சிறப்பு பூஜைகளாக நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை பலி நடைபெறுகிறது. தமிழ், கேரள மாத கணக்குகளின் வேறுபாட்டால் சில ஆண்டுகள் இரண்டு முறை நடைபெறும். வாவு பலி நிகழும் முக்கிய இடங்களில் ஒன்று.

வாவு பலி

கேரள கர்கிடக மாதம் கறுத்த வாவு நாளில் இறந்த முன்னோர்களுக்கு உறவுகளால் இங்கு பலி தர்ப்பணம் கோவிலை ஒட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் நடத்தப்படும். கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக மக்கள் இங்கு வருகின்றனர்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழா

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானம் நடத்தும் நவராத்திரி விழா நடைபெறும். விழாவில் பங்கெடுக்க சுசீந்திரம் முன்னுதித்த அம்மன், வேளிமலை குமாரசுவாமி கோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய விக்கிரகங்கள் ஊர்வலமாக நடந்தபடி திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். ஊர்வலம் முதல் நாள் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலுடன் இணைந்தசாமுண்டீஸ்வரி கோவிலில் வந்து தங்கி இரண்டாம் நாள் காலைப் புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவில் சென்று தங்கி அடுத்தநாள் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும். திரும்பி செல்லும்போதும் ஊர்வலம் இதே முறையில் தங்கிச்செல்லும். சாமுண்டீஸ்வரி கோவிலில் மூர்த்திகளின் வாகனக்கள் நிறுத்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மார்கழித் திருவிழா

குழித்துறை மகாதேவர் கோவில் திருவிழா மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரம் தொடங்கி திருவாதிரை நட்சத்திரம் வரை எட்டு நாட்கள் நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிரந்தர கொடிமரம் இல்லாததால் கமுமரம் அல்லது மூங்கில் மரத்தாலான தற்காலிக கொடிமரம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் முடித்து கொடி ஏற்றப்படும். திருவிழா நாட்களில் நிர்மாய பூஜை தொடங்கி ஐந்து கால பூஜை மற்றும் திருபூதப்பலி நடைபெறும்.

வேட்டை
ஆறாட்டு

இரண்டு யானைகள் மீது சிவன் மற்றும் விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகள் ஏற்றப்பட்டு அருகில் குழித்துறை சப்பாத்து பாலம் அருகே வா.ஊ.சி. வளாகத்தில் உள்ள சாலைக்குடி கடவு வரை ஊர்வலம் செல்வர். அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலில் மூர்த்திகள் வைக்கப்பட்டு தந்திரிகளால் பூஜைகள் செய்யப்படும். பின்னர் மூர்த்திகளுடன் தந்திரிகள் ஆற்றில் இறங்கி மூன்று முறை முங்கி எழுவர். பந்தலுக்கும் கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் மூன்று முறை முங்கி எழுந்து மூர்த்திகளை ஆற்று நீரால் சுத்தம் செய்வர். மூர்த்திகள் பந்தலுக்கு எடுத்து வரப்பட்டு ஆடை, பூமாலை அணிவிக்கப்பட்டு ஆற்றில் பலிதர்பணம் முடித்து பூஜைகள், அபிஷேகம், தீபாராதானை நடைபெறும். உற்சவ மூர்த்திகள் யானை மீது ஏற்றப்பட்டு கோவில் வந்து வெளிபிரகாரத்தில் ஏழுச் சுற்றுகள் முடித்து கோவில் உள்ளே மூர்த்திகள் வைக்கப்படுவர்.

கொடி இறக்கப்பட்டு பட்டசு வெடிக்கப்பட்டு திருவிழா நிறைவுறும்.

வரலாறு

கல்வெட்டுகள்

உசாத்துணை

  • தென்குமரி கோவில்கள், முனைவர் ஆ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2018.
  • கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள், அ. கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2023.
  • தகவல்கள், நன்றி - வெங்கட்ராமன், நிர்வாகத் தலைவர், குழித்துறை மகாதேவர் கோவில்.

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.