being created

குறவஞ்சி

From Tamil Wiki

குறவஞ்சி பாடல் நாடக வடிவத்தில் அமைந்த சிற்றிலக்கியம். சிற்றிலக்கிய வகைமைகளில் குறிப்பிடத்தக்கது.

பெயர்க்காரணம்

குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று பிரியும். வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி போன்ற பெண் என்று பொருள். குறவஞ்சி என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இந்த நூலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை இடம் பெறுவதால் இந்த இலக்கிய வகை குறவஞ்சி என்ற பெயரைப் பெற்றுள்ளது.

குறவஞ்சி நூல்கள் பெயர் பெறும் முறை
  • இடத்தின்/நாட்டின் பெயரால் பெயர் பெறுதல்- திருக்குற்றாலக் குறவஞ்சி, திருஈங்கோய்மலைக் குறவஞ்சி, சிவன்மலைக் குறவஞ்சி
  • தலைவன் பெயரால் பெயர் பெறுதல்-சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
  • பாட்டுடைத் தலைவன் பெயரால் பெயர் பெறுதல்-தியாகேசர் குறவஞ்சி
  • இடம், தலைவன் பெயர் இரண்டாலும் பெயர் பெறுதல்-தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
  • தலைவியின் பெயரால் பெயர் பெறுதல்- தமிழரசு குறவஞ்சி
  • குறத்தியின் பெயரால் பெயர் பெறுதல்-துரோபதைக் குறவஞ்சி

தோற்றம்

பிற சிற்றிலக்கிய வகைகளைப் போலவே குறவஞ்சி இலக்கிய வகைக்கும் உரிய கருக்கள் தொல்காப்பியத்திலும் பிற இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. தலைவி தலைவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படுகின்றது. தலைவனைக் காணாததால் தலைவி மனம் வருந்துகின்றாள். உடலும் உள்ளமும் வாடிக் காணப்படுகின்றாள். தலைவியின் இந்த நிலையைச் செவிலித்தாயும் நற்றாயும் காண்கின்றனர். தலைவியின் இந்த நிலைக்கு உரிய காரணத்தை அறிய, கட்டு, கழங்கு, வெறியாடல் ஆகியன மூலம் குறிபார்க்கின்றனர். கட்டு என்பது முறத்தில் நெல்லைப் பரப்பி வைத்து, அந்த நெல்லை எண்ணிக் குறிபார்ப்பது ஆகும். தலைவியின் நோய்க்குக் காரணம் என்ன என்று அறிவதற்காக வேலன் குறிபார்ப்பது கழங்கு ஆகும்.

சங்க இலக்கியத்திலும் குறிபார்த்தல் பற்றிய செய்திகள் இடம்பெறக் காணலாம். பெருங்கதைக் காப்பியத்திலும் குறி சொல்லும் நிகழ்ச்சி இடம்பெறக் காணலாம். (உஞ்சைக் காண்டம், பாடல்கள் 235-238)

பக்தி இலக்கியத்தில், திருவாய்மொழியில் நம்மாழ்வார் குறிபார்க்கும் பெண்ணைக் கட்டுவிச்சி என்கிறார். (பாடல் 6:3) சிறிய திருமடலிலும் குறிபார்க்கும் மரபு காட்டப்படுகின்றது.

இவ்வாறு, இலக்கியம், இலக்கியக் கருக்களிலிருந்து குறவஞ்சி என்ற இலக்கிய வகையானது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட குறவஞ்சி நூல்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.