குமரகுருபரன் (கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 09:58, 11 February 2022 by Thangapandiyan (talk | contribs)
குமரகுருபரன் (1974 - 2016)

குமரகுருபரன் (ஜூன் 10, 1974 - ஜூன் 19, 2016) கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், கால்நடை மருத்துவர்.

பிறப்பு, கல்வி

குமரகுருபரன் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் கிராமத்தில் ஜூன் 10, 1974ல் பிறந்தார். தந்தை ஜெயராமன், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர். தாய்  குருப்ரசாதவல்லி, இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர். பெற்றோர்கள் தமிழ்ப்பற்று காரணமாக குமரகுருபரன் என பெயரிட்டனர். ராஜபாளையம் அன்னப்பா ராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பயின்ற குமரகுருபரன் பின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தார். விவாகரத்தானவர்.

இலக்கிய வாழ்க்கை

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் அந்திமழை இளங்கோவன் தொடங்கிய கையெழுத்து பத்திரிகையான ‘அந்திமழை’ குமரகுருபரனுக்கு இலக்கிய வாசலைத் திறந்துவிட்டது. கல்லூரியின் ’அந்திமழை’ மாணவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். அதற்காக ஆனந்த விகடனின் 'சிறந்த கல்லூரி இதழ்' களுக்கான போட்டியில் சிறந்த மாணவ ஆசிரியர் விருதைப் பெற்றவர். இந்த இதழ்தான் இப்போது ‘அந்திமழை’ என்ற மாதாந்திர இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. குமரகுருபரனின் முதல் கவிதை கணையாழியில் வெளியானது.

பட்டப்படிப்பு முடிந்ததும் முழு நேர பத்திரிகையாளரானார். குமுதம் உதவி ஆசிரியராகவும், குமுதம் ஸ்பெஷல் புத்தகத்தின் ஆசிரியராகவும் பணிபுரியும்போது பல  கட்டுரைககள், தொடர்களை எழுதியுள்ளார். "பயணிகள் கவனிக்கவும்" தொடரும், தமிழ்த் திரை உலகில் மாற்றங்களைக் கொண்டுவந்த இயக்குநர்களைப் பற்றிய ‘ஸ்கேன்’ தொடரும் குமுதத்தில் வெளியாகி கவனம் பெற்றவை. விண் நாயகன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பு வகித்தார். பின்னர் தினமலரின் வாரமலர், சிறுவர் மலர், பெண்கள் மலர் உள்ளிட்ட எட்டு இணைப்பு புத்தகங்களுக்கு ஆசிரியாக பணியாற்றினார். தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கும் Media 4 U நிறுவனத்தை நடத்திவந்தார். பிறகு எல்லாவற்றிலும் இருந்து வெளியேறி முழுநேர எழுத்தாளரானார்.

Image9.png

இலக்கிய அழகியல்

செறிவான கவிமொழியையும், இயற்கையான சொற்சேர்க்கைகளுடன் கூடிய புதிய சொல்லாட்சிகளையும் கொண்டவை குமரகுருபரனின் கவிதைகள். ‘மீறல்களின் கனவு’என ’இன்னொருவனின் கனவு’ புத்தகத்திற்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரையில் மீண்டும் மீண்டும் மீறல்களைச்சார்ந்து பொதுச்சினிமா சென்றுகொண்டிருப்பதற்கான ஆவணமாகவே அமைந்திருக்கும் நூல் இது என குறிப்பிடுகிறார்[1].

குமரகுருபரனை தான் ஒரு கவிஞராகக் கருதுமளவுக்கு அவர் கவிதைகள் இடம் தருபவை அல்ல லக்‌ஷ்மி மணிவண்ணன் (கவிஞர்) கூறியிருக்கிறார். ஆனால், குமரகுருபனின் கவிதைகள் நவீனத்தமிழில் அபூர்வமாக மொழியால் கலைக்கப்பட்ட சித்தம் கவிதையாகி வெளிவருவது போன்றது என்றும். பிரமிள், தேவதேவன், ஆத்மாநாம், அபி, சு.வில்வரத்தினம் போன்ற சில விதிவிலக்குகளின் ஆக்கங்களின் சிறிய பட்டியலில் இடம்பெறும் கவிதைகளைக் கொண்டது குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதை நூல் என்றும் ஜெயமோகன் கூறுகிறார்[2].

Image10.png

நூல்பட்டியல்

கவிதை நூல்கள்

ஞானம் நுரைக்கும் போத்தல்  (2014 - ஆதிரை பதிப்பகம்)

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது  (2015 - உயிர்மை பதிப்பகம்)

Image11.png

கட்டுரைத்தொகுப்பு

இன்னொருவனின் கனவு  (உலக சினிமாக்கள் பற்றிய  தொகுப்பு. 2014, அந்திமழை வெளியீடு)

பயணிகள் கவனிக்கவும் (பயணக் கட்டுரை. 2015, குமுதம் வெளியீடு)

Image12.png

சிறுகதைகள்

பேரரசரின் கோபம் (2014)

மூன்று பெக்குகளும் நான்கு இட்லிகளும் (2014)

விருதுகள்

  • கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் (பேராசிரியர் மயில்வாகனன் நினைவாக) வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது - 2015. ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது.
  • 'ஞானம் நுரைக்கும் போத்தல்' (2015) புத்தகத்திற்கு சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான நாகர்கோயில் நெய்தல் அமைப்பின் ராஜமார்த்தாண்டன் விருது - 2015  (குமரகுருபரன் இதனை வாங்க மறுத்து விட்டார்).

குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது

குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக 2017ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் தொடங்கப்பட்டது. பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய். முதல் விருது 2017ல் கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கண்டராதித்தன் (2018), ச.துரை (2019), வேணு வேட்ராயன் (2020), மதார் (2021) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறைவு

குமரகுருபரன் ஜூன் 19, 2016 ல் தனது 42-வது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

உசாத்துணை