standardised

குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்

From Tamil Wiki
Revision as of 19:01, 1 April 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்

குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில் (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டம் குண்ணத்தூரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

வடஆர்க்காடு மாவட்டத்தில் போளூருக்கு ஐந்து கிலோமீட்டர் வடக்கிலுள்ள குண்ணத்தூர்/இரண்டேரிப்பட்டு குண்ணத்தூரில் அமைந்த ரிஷபநாதர் கோயில்.

வரலாறு

குண்ணத்தூரில் அழிந்த நிலையிலிருக்கும் சமணக்கோயில், முதலாவது தீர்த்தங்கராகிய ரிஷபதேவருக்காக கட்டப்பட்டது. பொ.யு. 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கோயிலை அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதனைப் புதுப்பித்தனர்.

கல்வெட்டு

கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள கல்வெட்டொன்று, இந்த அருகன்கோயில் பொ.யு. 1441-ல் கட்டப்பட்ட செய்தியைக் கூறுகிறது. மேலும் அப்போது இவ்வூர் ’குன்றை' எனப் பெயர் பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. அதாவது குன்றை 'குன்றத்தூர்’ என வழங்கப்பட்ட பெயர்தான் தற்காலத்தில் குண்ணத்தூர் என மறுவியுள்ளது.

அமைப்பு

கோயிலின் கருவறையை ஒட்டி மண்டபமும், திருச்சுற்று மதிலும் உள்ளது. இந்த மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு இக்கோயில் கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். கருவறையின் கூரைவரையிலும் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறையின் மேலுள்ள சிகரம் பிற்காலத்தில் செங்கல் சாந்து ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கட்ட முயன்ற செங்கலாலான மண்டபம் சிதைந்த நிலையிலும், அரைகுறையாகவும் உள்ளது.

கோயிலின் கருவறையில் சற்று உயரமான பீடத்தில் ஆதிநாதரது புடைப்புச்சிற்பம் உள்ளது. தியான கோலத்தில் வீற்றிருக்கும் இத்தேவரின் தலைக்குப் பின்புறம் வட்ட வடிவ பிரபையும், அதற்குமேல் முக்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது தோள்களுக்கிணையாக சாமரம் வீசுவோர் இருவர் மெல்லிய சிற்ப வடிவங்களாக உள்ளனர்.

வழிபாடு

தற்போது இவ்வூரில் சமணசமயத்தவர் மிகச்சிலரே உள்ளனர். இக்கோயிலில் வழிபாடுகள் ஏதும் நடத்தப் பெறுவதில்லை.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.