குணா கந்தசாமி

From Tamil Wiki
Revision as of 02:05, 7 February 2024 by Kaliprasadh (talk | contribs) (நிறைவு)

குணா கந்தசாமி( பிறப்பு, மே 29, 1979) தமிழில் எழுதிவரும் கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதை, நாவல், சிறுகதை மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ஆகிய வடிவங்களில் எழுதிவருகிறார்

குணா கந்தசாமி

பிறப்பு, கல்வி

குணா கந்தசாமி திருப்பூர் மாவட்டம், கொடுவாய் வட்டம், நிழலி வஞ்சிபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கந்தசாமி, தேவாத்தாள் தம்பதியருக்கு மகனாக 1979, மே 29 இல் பிறந்தார்.

கணினி அறிவியல் இளங்கலைப் படிப்பை கோபிச்செட்டிபாளையம் கோபி கலைக்கல்லூரியிலும், தகவல் தொழில்நுட்பவியல் முதுகலை படிப்பை திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியிலும் நிறைவு செய்தார்

தனி வாழ்க்கை

குணா கந்தசாமி 2011 ஆம் ஆண்டில் கோ.சித்ராதேவியை மணந்தார். மனைவி சித்ராதேவி மென்பொருள்துறையில் பணியாற்றுகிறார். மகள் பிரனவி. சென்னை வேளச்சேரியில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பணியின் நிமித்தம் பெங்களூருவிலும் உருகுவே, அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகிய  நாடுகளிலும் வசித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

குணா கந்தசாமியின் முதல் கவிதை 1999 ஆண்டு பிரசுரமானது. ’தூரன் குணா’ என்ற புனைப்பெயரில் முதல் கவிதை நூல் ”சுவரெங்கும் அசையும் கண்கள்” 2007 ஆம் அண்டு சந்தியா பதிப்பக வெளியீடாகவும் இரண்டாவது தொகுப்பு “கடல் நினைவு” 2012 ஆம் ஆண்டில் தக்கை பதிப்பக வெளியீடாகவும், சிறுகதை தொகுப்பு ”திரிவேணி” பாதரசம் பதிப்பக வெளியீடாக 2013 ஆம் ஆண்டிலும் வெளியானது.

இவை யாவும் பிறகு எழுதப்பட்ட புதிய படைப்புகளோடு உள்ளடக்கப்பட்டு மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் (கவிதைகள்), கற்றாழைப்பச்சை (சிறுகதைகள்)  நூல்களாக வெளியாகின.

சிற்றிதழ் சூழல் உள்ளிட்டு தமிழின் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளிலிருந்து உருவான நவீன செவ்வியல்  நாவல்களின் வழியாகவும் உலக, இலக்கியத்தில் குறிப்பாக நாவல் வடிவத்தின் வழியாகவும் தன் படைப்புச் செயல்பாட்டுக்கான உந்துதலைப் பெறுவதாகவும் கவிதையில் தன் முன்னோடியாக தேவதச்சனையும் குறிப்பிடுகிறார்.

சேலத்தில் தக்கை இலக்கிய அமைப்புடன் இணைந்து இயங்கி விமர்சன அரங்குகள் மற்றும் பதிப்பகப் பணிகளில் பங்களித்திருக்கிறார். தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதுகிறார்.

விருதுகள்/ பரிசுகள்

  • உலகில் ஒருவன் – நாவல் – ஜெயந்தன் நினைவு விருது
  • மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் – கவிதைகள்- கவிஞர் ராஜமார்த்தாண்டன் நினைவு விருது
  • கற்றாழைப்பச்சை – சிறுகதைகள்- கோவை கொடீசியா இலக்கிய விருது

இலக்கிய இடம்

மரபான வேளாண்மைச் சமூகம் மற்றும் உலகமயமாக்கலின் வழியாக திறக்கப்பட்ட புதிய உலகம், இவை இரண்டுக்கும் இடைப்பட்ட புலத்திலிருந்து தன் படைப்புகளை எழுதுகிறார்

குணா அடிப்படையில் கவிஞர் என்றாலும் முற்றிலும் நிதானமான மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை அளித்துள்ளார். சிறுகதைகளே ஆனாலும் அவை நாவல் தன்மை கொண்டுள்ளது என்று சுனில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். கிரேக்கத் துன்பியல் நாடகங்களில் இனம் காணப்பட்ட சாப வகையிலான அரூபத் துயரங்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை குணா தனது படைப்புகள் வழியாக புதுப்பித்துள்ளதாக சமயவேல் தனது மதிப்புரையில் குறிப்பிடுகிறார்.

குணாவின் கவிதைகளினூடாக ஒருவித உருவ ஒழுங்கையும் ,ஓசையமைதியையும்  உணரமுடியும். முதிர்ச்சியும் பக்குவமும் கொண்ட உலகியல் நோக்கும் , அது கூட்டியிருக்கும் மென்மையானதொரு அங்கதமும் , சுழித்தெழும் உணர்ச்சிகளை கையாளும் போதுகூட பேணுகிற சமநிலையும் ,  வெகு நுட்பமான தருணங்களையும் , சலனங்களையும் , அதன் சாயைகளுடன் ஒற்றி எடுத்துவிடக்கூடிய நேர்த்தியான மொழியும் , இந்த கவிதைகளுக்கு ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாத , அசலானதொரு ஆழத்தை வழங்குகிறது . கவிதையை அதன் பிரதிபெயர்க்கவியலாத தீவிரத்தன்மைக்காகவே அணுகுகிற வாசகருக்கு குணா கந்தசாமியின் கவிதைகள் நிறைவை தருவதாக அமைந்திருப்பதாக கவிஞர் க. மோகனரங்கன் குறிப்பிட்டுள்ளார்

நூல் பட்டியல்

கவிதைத்தொகுதி
  • சுவரெங்கும் அசையும் கண்கள் ( தூரன் குணா)- சந்தியா பதிப்பகம்- 2007
  • கடல் நினைவு( தூரன் குணா) – தக்கை வெளியீடு-2012
  • மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்- காலச்சுவடு வெளியீடு - 2016
சிறுகதைகள்
  • திரிவேணி( தூரன் குணா) – பாதரசம் வெளியீடு-2013
  • கற்றாழைப்பச்சை – சிறுகதைகள் – தமிழினி வெளியீடு - 2018
நாவல்
  • உலகில் ஒருவன் – நாவல் – தக்கை வெளியீடு - 2015
கட்டுரைகள்
  • புலியின் கோடுகள் – கட்டுரைகள் – தக்கை வெளியீடு-2016

உசாத்துணை