கீ. இராமலிங்கனார்

From Tamil Wiki
Revision as of 21:55, 27 December 2022 by Santhosh (talk | contribs)
கீ. இராமலிங்கனார்

கீ. இராமலிங்கனார் என அழைக்கப்படும் கீ. இராமலிங்கம்( நவம்பர் 12,1899-1986)  தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தியவர். இதனால் இவர் ஆட்சிமொழிக் காவலர் என அழைக்கப்படுகிறார்.

பிறப்பும் கல்வியும்

கீ. இராமலிங்கனார் சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரி என்னும் கிராமத்தில் இரத்தின முதலியார் மற்றும் பாக்கியத்தம்மாள் தம்பதியருக்கு நவம்பர் 12, 1899 அன்று பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சீயோன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து, வெஸ்லி கல்லூரியில் பயின்றபோது திரு.வி. கலியாணசுந்தர முதலியார், சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்றார். பின் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

தொழில்

கீ. இராமலிங்கனார், படிப்புக்குப்பின் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தராக பணியாற்றினார். பின்பு,  சார்-பதிவாளர், நகரவை ஆணையர், கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தமிழ்ப் பணிகள்

கீ. இராமலிங்கனார்

இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தில் 1956-ஆம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீ. இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்றபெயரில் 1940-ஆம் ஆண்டு வெளியிட்டார். கீ. இராமலிங்கனார், ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, தான் சார்பதிவாளராகப் பணிபுரிந்த போது, மக்கள் தங்கள் சொத்துக்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாற்றம் செய்யும் பத்திரங்களில் முழுவதுமாகத் தமிழே இடம் பெறத்தக்க வழிமுறைகளைத் தெரிவித்து ஊக்குவித்தார்.  தமிழில் எழுதும் பத்திரங்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிவு செய்தார்.

கீ. இராமலிங்கனார், சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார்.  அப்போது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள்  பெயர்களைச்  சூட்டினார்.  மேலும், நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954- ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.

ஆட்சிக்குரிய தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘தமிழ்நாடு’ நாளிதழில், அது வாரந்தோறும் வெளியிட்ட ஞாயிறு மலர்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.  ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும்  நூலை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

கீ. இராமலிங்கனார் 1958-ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர், ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணி தீவிரமடைந்தது. தமிழ் வளர்ச்சி இயக்கம் என்ற துறை உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழமை நீதி மன்றங்களில் தீர்ப்புரைகள் தமிழில் எழுதப்பட்டன. சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும்  கீ. இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார். இதனால் கீ. இராமலிங்கனார் "ஆட்சி மொழிக் காவலர்" என அழைக்கப்பட்டார்.

தமிழ்மொழி மீது மட்டுமல்லாமல் சைவ சமயத்தின் மீதும் கீ. இராமலிங்கனார் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் எழுதிய வழி காட்டும் வான் பொருள், உண்மை நெறி விளக்கம், திருவெம்பாவை, ஐந்து நிலைகள் ஆகிய நூல்கள் இறையியல் தத்துவங்களை தாங்கி நிற்பவையாகும்.

தமிழர் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களையும்  கீ. இராமலிங்கனார் இயற்றினார். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்று இந்நூல்களில் விளக்கியுள்ளார்.

கீ. இராமலிங்கனார், 'மஞ்சள் மகிமை’ என்ற கவிதை நாடகத்தையும் எழுதியுள்ளார்.

மறைவு

கீ. இராமலிங்கனார்  1986-ஆம் ஆண்டு மறைந்தார்.

எழுதிய நூல்கள்

தமிழில் எழுதுவோம்

கீ. இராமலிங்கனார் 1930-இலிருந்து எழுதிய 17 நூல்கள்:

  • இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு குமரன் அச்சகம், காஞ்சிபுரம் - 1930
  • வழிகாட்டும் வான்பொருள் - இரெட்டியப்பட்டி அடிகளார் சங்கம், அருள் நகர், அரசூர்
  • உண்மை நெறி விளக்கம்- ஆராய்ச்சி உரை, தென் ஆற்காடு மாவட்டம் - 1936
  • நகராட்சி முறை - உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் தமிழைப் பயன்படுத்த உதவுவது, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு - 1954
  • திருவெம்பாவை - விளக்கத் தெளிவுரை, தருமயாதீன வெளியீடு - 1955
  • தமிழ் ஆட்சிச் சொற்கள் - ஆட்சிச் சொல் ஆக்கும் முறையை விளக்குவது. விசாலாட்சிப் பதிப்பகம், மதுரை - 1959.
  • ஆட்சித்துறைத் தமிழ் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்துதற்குரிய சொற்கள், தொடர்கள், வரைவுகள், குறிப்புகள்; சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு - 1968.
  • தமிழ் மண முறை - இலக்கிய மேற்கோளுடன் வெளியிட்டவர் இரா. முத்துக்குமாரசாமி, தமிழ் ஆட்சியர், வாலாஜாபாத், செங்கற்பட்டு மாவட்டம். சங்கர இராமசாமி - பரமேசுவரி ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து கீ.இராமலிங்கனார் அவர்களால் 18.01.1973 -அன்று வாலாஜாபாத்தில் வெளியிடப்பட்டது.
  • ஆட்சித் தமிழ் - அன்றுமுதல் இன்றுவரை, சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு - 1977.
  • ”தமிழில் எழுதுவோம்” - தமிழில் ஆட்சி நடத்த ஊக்குவிப்பது, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
  • திருமுறைச் சமுதாயம்-  ஆராய்ச்சி நூல். மாம்பாக்கம், குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.
  • ஐந்து நிலைகள் - ஆராய்ச்சி நூல், மாம்பாக்கம் குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.
  • Tamil Marriages, Modes of Performance and Significance, Translation of my talk in Tamil published by the Institute of Traditional Culture, Madras University
  • ஆட்சிச் சொல் அகராதி - பொது - செம்மை செய்தும், ஆக்கியும் பெருக்கியது. முதல் இரண்டு பதிப்புகள்,1958-1964, அரசினர் வெளியீடு.
  • “துறைச் சொற்கள்” - செம்மை செய்ததும், ஆக்கியதும் - துறைக்கு ஒரு சுவடியாக - அரசினர் வெளியீடு - 1958-1964.
  • தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour code). அரசு பணித்தவாறு மொழிபெயர்த்துத் தந்தது. - 1974.
  • புதுக்கோட்டை மாவட்டச் சுவடி (ஒரு பகுதி) - அரசு பணித்தவாறு மொழி பெயர்த்துத் தந்தது - 1975
  • தமிழ்த் திருமணம் - முறை விளக்கமும், செய்முறையும், தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம், குமரன் அச்சகம், காஞ்சிபுரம்.

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த பெருமக்கள், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு