கீழவளவுமலை

From Tamil Wiki
Revision as of 20:41, 27 February 2022 by Navingssv (talk | contribs) (கீழவளவுமலை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கீழவளவு தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம்

கீழவளவு மலை மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றம் என்னும் எட்டு சமண மலைப்பள்ளிகளுள் ஒன்று. மதுரையில் இருந்து நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் மேலூர் திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் கீழவளவு என்னும் கிராமத்திற்கு முன்பாக இக்குன்று அமைந்துள்ளது. கீழவளவு குன்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை குன்றுத்தளங்கள் சமணப்பள்ளிகளாக இருந்ததற்கான ஆதாரம் உள்ளது.

கீழவளவு மலை

கீழவளவு மலை குன்றில் அமைந்துள்ள சமணப்பள்ளிகள் பாண்டிய நாட்டில் அமைந்த சமணப்பள்ளிகளுள் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய பள்ளிகளில் ஒன்றாகும்.

கல்வெட்டு சான்றுகள்

இங்கு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு கிடைத்துள்ளது. இல்லறத்தை(உபாசன்) மேற்கொண்ட தொண்டியைச் சார்ந்த இளவன்(இளையன்) இப்பள்ளியை உருவாக்கியிருப்பதை இக்கல்வெட்டு கூறுகின்றது.

இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் விளக்கு எரிப்பதற்கும், அன்னம் படைப்பதற்கும் தானம் வழங்கியதைப் பற்றிச் சொல்கிறது. இக்குன்றில் உள்ள திருமேனிகளில் ஒன்றை சங்கரன் ஸ்ரீவல்லபன் என்பவன் செய்வித்து அதற்குத் திருவமுது படைப்பதற்காக நாள்தோறும் முந்நாழி அரிசியும், திருநந்தாவிளக்கு எரிப்பதற்காக ஐம்பது ஆடுகளும் அளித்துள்ளான்.

மேலும் ஸ்ரீகட்டி, லோகபானுபடாரர் ஆகியோரின் திருப்பணிகள் பற்றியும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சிற்பம்

குகைத்தளத்தின் கீழ்புறத்தில் வடக்கு நோக்கிய பாறையில் புடைப்புச் சிற்பங்களாக ஆறு தீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளன. தீர்த்தங்கரர் உருவங்கள் மீது வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை கி.பி. ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

உசாத்துணை

  • எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்