under review

கீர்த்தித் திருவகவல்

From Tamil Wiki
Revision as of 20:47, 23 February 2024 by Madhusaml (talk | contribs)

கீர்த்தித் திருவகவல் திருவாசகத்தில் சிவபுராணத்துக்கு அடுத்து இடம்பெறும் அகவல். சிவபெருமானின் புகழைக் கூறுகிறது.

ஆசிரியர்

கீர்த்தித் திருவகவல் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில் இடம்பெறுகிறது. மாணிக்கவாசகரால் திருப்பெருந்துறையில் இயற்றப்பட்டது.

அமைச்சராகப் பரிவாரங்களுடன் வந்த மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் குருமூர்த்தியாகிய சிவபெருமானிடம் உபதேசம் பெற்று உலகைத் துறந்ததாக அவரது வரலாறு கூறுகிறது. அவருடைய ஆன்ம யாத்திரையின் மாற்றத்தைக் கூறுவதாகக் கொள்ளப்படுகிறது.

பெயர்க்காரணம்

சிவபெருமானின் புகழையும், விளையாடல்களையும் பேசுவதால் கீர்த்தித் திருவகவல் எனப் பெயர் பெற்றிருக்கலாம். கீர்த்தித் திருவகவல் என்ற தலைப்புக்குப்பின் 'சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை' என்ற தலைப்பும் காணப் பெறுகிறது. கீர்த்தி என்ற வடசொல் பழைய தமிழிலக்கியங்களில் காணப்பெறவில்லை. எனவே, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிகளார். இப்பெயரை இட்டிருப்பாரா என்பது சிந்தனைக்குரியது என்று அ.ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுகிறார்.

நூல் அமைப்பு

கீர்த்தித் திருவகவல் 146 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவாக அமைந்தது.

இறைவன் உயிர்கள்மேல் கொண்ட கருணையினால் புரியும் செயல்கள் அனைத்தும் 'திருவிளையாடல்' என்றே அறியப்படுகின்றன. கீர்த்தித் திருஅகவலில் இடம்பெரும் கதைகளில் சில, சில மாறுபாடுகளுடன் திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ளன. எல்லையற்ற பெருமையுடையவனும், மகேந்திர மலைக்கு உரிமையுடையவனும், எம்மை ஆண்டு கொண்டவனும் ஆகிய அண்ணலின் பெருமை பின் வருமாறு என்று தொடங்கி அவனுடைய தசாங்கம் கூறப்படுகிறது.

கீர்த்தித் திருவகவல் கூறும் சிவனின் சில விளையாடல்கள்
  • திருப்பெருந்துறை, திருப்பாலை, கடம்பூர், திருஈங்கோய்மலை, திருவையாறு, திருத்துருத்தி, திருப்பனையூர், கழுமலம் (சீர்காழி, திருக்கழுக்குன்று, திருப்புறம்பயம், குற்றாலம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட தலங்களில் கோவில் கொண்டு அருள் புரிந்தவன்
  • தில்லை மன்றத்தில் இடது பாதத்தினைத் தூக்கி ஆடுபவன். ஆய கலைகளின் ஆதாரமானவன்
  • மண்ணையும் விண்ணையும் தேவர்கள் உலகினையும்  படைத்த அவர் அவைகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமானவர்.  உயிர்களுக்காக எண்ணற்ற அருள் விளையாட்டுகளை நடத்தியவன்
  • வேடிச்சி வேடம் தாங்கிய  அம்பிகையோடு வேட உரு தாங்கி வந்தவன். (அருச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் அருள வந்தது)
  • உமையம்மை தழுவக் குழைந்த நாதன்
  • அன்னைக்காக மீனவனாக வந்து வலைவீசி கெளுத்தி மீன் பிடித்தவன். மீனின் வயிற்றில் இருந்த ஆகமங்களை மீட்டவன்.  மகேந்திர மலையில் ஐந்து திருமுகங்களோடு வீற்றிருந்து அனைத்து முகங்களாலும் ஆகமங்களை உபதேசித்தவன்.
  • வந்திக் கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்தவன்
  • உத்தர கோச மங்கை எனும் தலத்தில்  ஞான ஆசிரியனாகத் தோன்றியவன். 
  • திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற பக்தைக்கு தன்  தூய வடிவினை காட்டி அருளியவன்.
  • வாதவூரில் அழகிய திருஉருவுடன் எழுந்துஅருளிப் பின் தனது காற்சிலம்புகளின் ஒலியைக் கேட்கச் செய்தவன். 
  • தண்ணீர் பந்தல் அமைத்து தானே பணியாளனாக இருந்து தாகம் தீர்த்தவன்.
  • திருப்பாலையில் தன் உருவம் காட்டியது
  • முத்தலைச் சூலத்தால் மும்மலங்களையும் கிழித்து எறிபவன்.
  •   உத்தரகோச மங்கையில் விரும்பி உறைபவன்.
  • மதுரையில் தட்சிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு வேத ஆகப் பொருளை உரைத்தது

பாடல் நடை

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5
என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.