கி. ராஜநாராயணன்

From Tamil Wiki
Revision as of 19:39, 30 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 - 17 மே 2021), நவீன தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். கரிசல் நிலத்தை தன் இலக்கியத்தில் எழுதியவர். கரிசல் மண் சார்ந்து நாவல்கள், சிறுகத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 - 17 மே 2021), நவீன தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். கரிசல் நிலத்தை தன் இலக்கியத்தில் எழுதியவர். கரிசல் மண் சார்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள் எழுதியவர். ”கரிசல் வட்டார அகராதி” என்ற வட்டார தமிழ் அகராதி உருவாக்கியவர். ”கதைச்சொல்லி” என இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

கி.ரா என்றழைக்கப்படும் கி. ராஜநாராயணனின் இயற்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமனுஜ நாயக்கர். கி. ராஜநாராயணன் செப்டம்பர் 16 1922 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டி அருகில் உள்ள இடைசேவல் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

ஏழாம் வகுப்பு வரை படித்த கி.ரா. பின் விவசாயம் செய்தார். இயல்பில் விவசாயி ஆக இருந்த கி.ரா தன் பள்ளிக் கல்வியைப் பற்றிச் சொல்லும் போது, “நான் மழைக்குத் தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியவன். பள்ளியைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேன்” என்கிறார்.

தனி வாழ்க்கை

கி. ராஜநாராயணன் கணபதி அம்மாளை செப்டம்பர் 6 1954 அன்று திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் ஆகும் போதே கி.ரா.வுக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. கி.ரா கணபதி அம்மாள் தம்பதியருக்கு திவாகரன், பிரபாகரன் இரண்டு மகன்கள். மருமகள்கள் முறையே விஜயலட்சுமி, நாச்சியார்.

கி. ரா 1989 இல் பாண்டிசேரி வந்த போது அங்கே பாண்டிசேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். இணைப்பிரியாத தம்பதிகளாக இருந்த கி.ரா வை விட்டு கணபதி அம்மாள் பிரிந்து 2019 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இலக்கிய வாழ்க்கை

கி.ரா எழுதி முதல் சிறுகதை “சொந்த சீப்பு”. 1958 ஆம் ஆண்டு அவர் சரஸ்வதி இதழில் எழுதிய “மாயமான்” சிறுகதை பெரும் கவனம் பெற்றது. அதன் பின் இவரது “கதவு” சிறுகதையும் பெரும் வாசகர் கவனம் பெற்றது. அக்கதையைப் பாராட்டி சுந்தர ராமசாமி, அக்கதை ஆண்டன் செகாவ் பாணியில் இருப்பதாகக் கடிதம் எழுதினார்.

கி.ராவின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் பற்றி பேசுபவை. கரிசல் மண்னையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள், நாவல்,  குறுநாவல், கட்டுரை என விரிவான தளத்தில் இயங்கினார்.  கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார். நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார். ”நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்” என்ற தலைப்பில் நூலாக அன்னம் வெளியீட்டில் வந்தது.

விருதுகள்

  • சாகித்ய அகாடமி விருது,
  • இலக்கிய சிந்தனை விருது,
  • தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது,
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது
  • பேரா. சுந்தரனார் விருது

நூல்கள்