கிருஷ்ணப் பருந்து

From Tamil Wiki
கிருஷ்ணப் பருந்து

கிருஷ்ணப் பருந்து (1980) ஆ.மாதவன் எழுதிய நாவல். இது அவருடைய இரண்டாவது நாவல். இயல்புவாத அழகியல் கொண்ட இந்த நாவல், அவர் எழுதியவற்றுள் முதன்மையானதாவும், தமிழ் நவீன நாவல்களில் சிறந்தவற்றில் ஒன்றாகவும் விமர்சகர்களால் கருதப்படுகிறது. குருஸ்வாமி என்ற மையகதாபாத்திரத்தின் ஆன்மீக பயணமும் அவருக்குள் நிலைத்திருக்கும் காமத்தின் அப்பட்டமான எதார்த்தமும் இரண்டுக்கும் இடைப்பட்ட போராட்டமும் இன் நாவலின் மைய பேசுபொருள்.

ஆ.மாதவன் 2005-கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர். 2010ல் முதல் விஷ்ணுபுரம் விருதை பெற்ற எழுத்தாளர்.

எழுத்து,பிரசுரம்

ஆ.மாதவனின் இரண்டாவது நாவலான கிருஷ்ணப் பருந்து 1980 வாக்கில் எழுதப்பட்டது. கலைஞன் பதிப்பதகத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு வெளியிடபட்ட இருபத்தைந்து நாவல்களில் ஒன்றாக வெளியானது இந்நாவலின் முதல் பதிப்பு (). தமிழினி பதிப்பகம் () வெளியிடாக வந்தது. 2014,2016 ஆகிய ஆண்டுகளில் நற்றிணை பதிப்பகத்தின் வெளியிடாக அடுத்தடுத்த பதிப்புகள் வந்துள்ளன.


கதைச்சுருக்கம்

குருஸ்வாமி என்ற மையகதாபாத்திரம் குழந்தையாக இருக்கும் பொழுது தன்னுடைய தாயை இழந்துவிடுகிறார். ஆடம்பரமான வாழ்க்கை பெண்களுடனான பாலியல் உறவுகள் கொண்ட அப்பாவின் கட்டற்ற வாழ்க்கை வழியாக அவருடைய குழந்தை பருவம் அமைகிறது. வளர்ந்து குருஸ்வாமிக்கு திருமணம் ஆகும் போது மனைவியும் சில ஆண்டுகளில் இறந்துவிடுகிறார். இந்த அனுபவங்கள் வழியாக அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவும் தனித்தவராகவும் ஆகிறார். அதன்பின் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தனிமையில் துறவியை போல வாழும் குருஸ்வாமியின் அகத்தில் தனியாத காமமும் அதற்க்கான ஏக்கமும் உள்ளது. பருந்தை போல காமம் அவருள் சந்தர்பத்திற்க்காக காத்திருக்கிறது. இந்த பின்னனியில் இவருக்கும் இவருடைய சுற்றத்தாருக்குமான உறவு சிக்கல்கள் அறசிக்கல்களும் நாவலில் நிகழ்கின்றன.

தன் தோப்பில் வாடகைக்கு வாழும் வேலப்பன் என்பவரின் மனைவி ராணி மீது குருஸ்வாமி காம விருப்பம் கொள்கிறார். ராணியின் கணவன் வேலப்பனுக்கு நேரும் இக்கட்டான சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு தன்னிடம் உதவி கேட்டு வந்த ராணியுடன் குருஸ்வாமி தன்னுடைய விருப்பத்தை தெறிவிக்கிறார். அதற்க்கு ராணி ஒத்துக்கொள்ளும் போதிலும் அத்தருனத்தில் அவளுக்கு தான், தன்னுடைய உடல், ஆசை, விருப்பு வெறுப்பு, அறம், ஒழுக்கம் ஆகிய அனைத்துக்கும் அப்பால் தன்னுடைய கணவனும் அவரை மீட்பதும் முக்கியமாக படுக்கிறது. தன் கணவனை மீட்பதை தவிற ராணியின் கண்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. ராணியின் இந்த தீரகமும் காதலும் குருஸ்வாமியை தன்னுடைய இழிநிலையை உணர செய்கிறது.

கதைமாந்தர்

  • குருஸ்வாமி - தன் ஐம்பது வயதிற்க்குள் மனைவியை இழந்து குழந்தைகள் அற்று இருக்கும் தனியர். தாடி வைத்துகொண்டு ஒரு துறவியை போல் இருக்ககூடியவர். புத்தக வாசிப்பு பழக்கம் கொண்டவராகும், முற்ப்போக்கு கருத்துக்கள்,வேதாந்த தத்துவங்கள் பேச கூடியவராகவும் இருக்கிறார். ஊரில் பெரிய குடும்பத்தில் பிறந்து நசிந்து தனித்த அவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தென்னை தோப்பில் ஆறு வீடுகளை வாடகைக்கு விட்டுக்கொண்டு அந்த வருவாயில் அங்கேயே மாடி அறை ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையை நடத்துகிறார்.
  • அம்மு – குருஸ்சுவாமி தாய்யை இழந்து சிறுவனாக இருந்த பொழுது வீட்டில் வேலை பார்த்த பெண். அவரை அன்னையின் இடத்தில் இருந்து பார்த்துகொள்கிறாள். குருஸ்வாமி அவரை அம்மு அம்மை என்று அழைக்கிறார். அத்தகைய அம்முவும் தன்னுடைய தந்தையும் படுக்கையில் ஒன்றாக உறவு வைத்து பார்க்க நேரும் காட்சி குருஸ்வாமிக்கு வாழ்க்கை முழுக்க பாதிப்பு செலுத்துவதாக அமைகிறது.
  • சுப்புலஷ்மி – குருஸ்வாமியின் மனைவி. குருஸ்வாமிக்கும் சுப்புலஷ்மிக்கும் கருவுரும் குழந்தைகள் குறை பிரசவத்தில் தொடர்ந்து இறக்கின்றன. அப்படி ஒரு பிரசவத்தில் சுப்புலட்சுமியும் இறந்துவிடுகிறாள்.
  • வேலப்பன் – . நாவலில் தொடர்ச்சியாக மாற்றத்துக்கு உள்ளாகும் கதாப்பாத்திரம். குருஸ்வாமியின் தோப்பில் வாடகைக்கு வசிக்க கூடியவன். பால் விவசாயச் சங்க கறவைக்காரர்.பின்பு தொழிற்சங்கம் அரசியல் என வளர்ந்து கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவிக்கும் குருஸ்சுவாமிக்கும் உறவு இருக்கும் என்று சந்தேகம் கொள்கிறார்
  • ராணி – வேலப்பனின் மனைவி. இரண்டு குழந்தைகளுக்கு அன்னை.
  • ரவி – பெய்ண்டர். குருஸ்சுமியின் தோப்பில் வாடகைக்கு இருக்கிறார். குருஸ்வாமியை ஓவியமா வரைகிறார்.
  • பார்வதி – குருஸ்சுவாமியின் தோப்பில் வாடகைக்கு இருக்கும் பெண். ஒவ்வொரு வீட்டுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொடுத்து பிழைப்பை நடத்துகிறாள்.
  • வெங்கு பாகவதர் – தெருவில் பாடல்கள் பாடி பிச்சை எடுத்து வாழ்பவர். குருஸ்சுவாமியின் தோப்பில் வாடகைக்கு உள்ளார்.
  • பப்பன் – ஈயம் பூசும் வேலை செய்பவர். குருஸ்சுவாமியின் தோப்பில் வாடகைக்கு வசிக்கிறார்.


இலக்கிய இடம்

குருஸ்வாமியின் ஞானமும் துறவும் வெற்று பாவனைகளா நின்றிருக்க, தொழிற் வளர்ச்சி அரசியல் போட்டிகளின் ஊடாக வேலப்பன் மனிதர்களின் மீதான நம்பிக்கையும் தன்னுடைய கள்ளமின்மையும் இழந்திருக்க, ராணி தன்னுடைய எளிமையாலும் அன்பாலும் அனைத்து கீழ்மைகளையும் கடந்தவளாக ஆகியிருப்பதை சித்தரிக்க கூடிய நாவல் கிருஷ்ணப் பருந்து. இது இயல்புவாதம் என்ற அழகியல் பாணிக்குள் வரகூடியது.

தமிழில் ஆ. மாதவனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தன் மொத்த எழுத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்தே அமைத்துகொண்ட படைப்பாளி அவர். திருவனந்தபுரம் சாலைதெரு அவரது களம். வணிகர்களும் பொறுக்கிகளும் பிச்சைக்காரர்களும் வேசிகளும் வாழ்வது அந்தக் களம். ஆ.மாதவன்,பண்பாடு என்ற திரைக்கு அப்பால் மனித வாழ்க்கையின் சாரமாக உள்ளது என்ன என்ற வினாவை இந்த மேடையில் வைத்து ஆராய்கிறார், என்று எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடை நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

வெளிதோற்றத்துக்கு அப்பால் மனிதன் முற்றிலும் வேறான ஒருவன் என்பது மாதவனின் அசைக்க முடியாத நம்பிக்கை. வேஷங்கள் மோதிக்கொள்ளும் ஒரு தருணத்தில் நிகழும் திறுப்பத்தையே மாதவன் மீண்டும் மீண்டும் தன்படைப்புலகில் சித்தரித்துக் காட்டுகிறார்.சிறந்த உதாரணம் கிருஷணப் பருந்து, என்று ‘ஆ.மாதவன்: தீமை நடமாடும் தெரு’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். மேலும் அவர் தன் நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்ற நூலில் அளிக்கும் ‘விமர்சகனின் சிபாரிசு’ என்ற தமிழின் தலைசிறந்த பத்து நாவல்களின் பட்டியலிள் 9 வது இடத்தில் கிருஷ்ணப் பருந்தை சொல்கிறார்.


உசாத்துணை

  • நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் – எழுத்தாளர் ஜெயமோகன்
  • ஆ.மாதவன்: தீமை நடமாடும் தெரு – இலக்கிய முன்னோடிகள் – எழுத்தாளர் ஜெயமோகன்
  • கடைத்தெருவின் கலைஞன் – எழுதாளர் ஜெயமோகன்

இணைப்புகள்

https://www.jeyamohan.in/84/

https://www.jeyamohan.in/9185/

https://saravanansarathy.blogspot.com/2010/11/blog-post_03.html

https://nanjilnadan.com/2020/06/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/