கிங் விஸ்வா
கிங் விஸ்வா தமிழ் பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களில் வரைகலை நாவல்கள் ( Comics and Graphic novels ) குறித்து அறிமுகப்படுத்தியும் அந்நாவல்கள் குறித்த அழகியல் மதிப்பீடு மற்றும் திறனாய்வுக் கட்டு்ரைகளும் எழுதியவர். தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைதளம் வாயிலாக காமிக்ஸ் நாவல்கள் குறித்து 750 க்கும் அதிகமான எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஊடகவியலாலராக பணிபுரிந்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
கிங் விஸ்வாவின் இயற்பெயர் விஸ்வநாதன் தேவராஜ். இவர் 14-04-1979 அன்று, அகர்தலா- வில் (திரிபுராவின் தலைநகர்) திரு M தேவராஜ் மற்றும் திருமதி லோகநாயகி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது சொந்த ஊர் அரக்கோணம் மாவட்டத்தின் சோளிங்கர் மலைக்கோவிலை அடுத்துள்ள அரியூர் என்கிற கிராமம் ஆகும். தந்தை இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். ஆகவே ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இடம் பெயர வேண்டியிருந்தது. அவ்வகையில், சண்டிகர் (பஞ்சாப்), மேற்கு வங்கம், தில்லி, ஹைதராபாத் மற்றும் சென்னையில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பள்ளிப்படிப்பு பயின்றார். சென்னை, சி. கந்தசுவாமி நாயுடு ஆண்கள் கலைக்கல்லூரியில் இளங்கலை கணிதமும் வேலம்மாள் கல்லூரியில் முதுகலை மேலாண்மையியலும் பயின்றார். தற்போது சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார்
இலக்கிய வாழ்க்கை
கிங் விஸ்வா தனது சிறு வயது முதல் காமிக்ஸ் நாவல்களால் ஈர்க்கப்பட்டார். 2008-ல் தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைப்பூவைத் துவக்கி அதில் தனது கட்டுரைகளை பதிவேற்றிவந்தார். 2014-ல் ’தமிழ் இந்து’வில் வந்த கட்டுரை, அச்சில் வந்த இவரது முதற்கட்டுரையாகும்.