கா.சுப்ரமணிய பிள்ளை
கா. சுப்ரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) (5 நவம்பர் 1888 - 30 ஏப்ரல் 1945) தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாறாசிரியர். சைவசித்தாந்த வல்லுநர், வழக்குரைஞர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர், சொற்பொழிவாளர்.தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர்.
பிறப்பு, கல்வி
கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் சைவ வெள்ளாளர் மரபில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு 1888 – நவம்பர் – 5 ல் பிறந்தார். திருநெல்வேலி திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். 1908 -ல் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow of Arts) தேர்வில் வென்றார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1910ஆம் ஆண்டில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் படித்து பி.ஏ பட்டம்பெற்றார்.1913ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கியத்திலும் 1914ஆம் ஆண்டில் தமிழில் இலக்கியத்திலும் தேறிஎம்.ஏ பட்டங்களைப் பெற்றார். சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல் பட்டத்தையும் 1917ஆம் ஆண்டில் எம்.எல் பட்டத்தையும் பெற்றார்.