standardised

காமன்

From Tamil Wiki
Revision as of 23:19, 5 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
காமன் அதிபதி: காமத்தின் துணைவியார்: ரதி தேவி வாகனம்: கிளி ஆயுதம்: கரும்புவில் மற்றும் மலர்க்கணைகள் கொடி: மகரம் அல்லது சுறா மீன்

காமன் அல்லது காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் கடவுள். வலது கரத்திn கரும்பால் ஆன வில்லின் நாண் தேனிகளால் ஆனது. தாமரை, அசோகம், முல்லை, மா, குவளை என்னும் ஐந்து மலர்களால் ஆனது காமனின் அம்பு. காமனின் வாகனமாக கிளியும் கொடியின் சின்னத்தில் மகரம் அல்லது சுறா மீனும் அமையப் பெற்றிருக்கும். மேல் சொன்ன ஐந்து மலர்கள் போக உன்மதனம், தபனம், சோசனம், ஸ்தம்பனம் மற்றும் சம்மோஹனம் என்ற ஐந்து மலர்களையும் காமனின் அம்பாக சொல்வர்.

காம தேவனின் மனைவி ரதி தேவி. காமனுக்கு உரிய காலமென வசந்த காலம் சொல்லப்படுகிறது. காமனுக்கு மதனன், மன்மதன், மாரன், ப்ரத்யூமனன், மீனகேதனன், கந்தரவன், தார்பகன், அனங்கன், காமன், பஞ்சாக்‌ஷரன், சாம்பராரி, மனசிஜன், குசுமேசு, அனன்யஜன், புஷ்பதன்வன், ரதிபதி, மகரதுவாஜன், ஆத்மபூஷன், இரஜன், இம்சன், கிங்கரன், அபிரூபன், ருதுகாலகேலன், காஞ்சனன், ரமணன், திபாகன், மதுதீபன், சமந்தகன், முகிரன், ருபஸ்த்ரன், வாமன், புஷ்பகேதனன், மகரகேது, ரதிநாயகன், ரகுவர்த்தனன், சம்சரகுரு, கடாயிதுனு, மபதியன், மாயன் போன்ற பிற பெயர்களும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

தோற்றம்

பிரம்மனின் வலது மார்பில் இருந்து தர்ம பிரஜாதிபதி தோன்றினார். அழகானான தர்மரின் மகன்களாக சாமன், காமன், ஹர்ஷன் தோன்றினர். அவர்களுள் காமன் அழகின் கடவுளானான். மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் வரும் பாகம் - 66 இல் காமனின் மனைவி ரதி தேவி என்றும், சாமனின் மனைவி பிராப்தி என்றும், ஹர்ஷனின் மனைவி நந்தா என்றும் குறிப்பு வருகிறது.

காலிக புராணத்தின் படி பிரம்மன் பத்து பிரஜாதிபதிகளை தோற்றுவித்தார். அதன்பின் சந்தியா என்னும் பெண்ணை உருவாக்கினார். சந்தியா தோன்றும் கணம் அவள் அழகில் பிரம்மனும் மற்ற பிரஜாதிபதிகளும் மெய் மறந்து தங்கள் செய் தொழில் மறந்து எல்லோர் சிந்தையும் சந்தியா என்ற ஒன்றின் மீது கூடியது. அந்த கணத்தில்ல் பிரம்மனின் மனதில் இருந்து அழகிய இளைஞன் ஒருவன் கையில் மலர்க்கணைகளுடன் எழுந்து வந்தான். காமன் வெளியே வந்ததும் பிரம்மனிடம், “நான் யாரை மகிழ்விக்க வேண்டும்?” எனக் கேட்டான். பிரம்மன், “மண்ணில் வாழும் அனைத்து மனிதர்களின் மனமும் உன் அம்பை நோக்கியே குவியட்டும். நீ தட்சனின் மகளாகிய ரதி தேவியை மணந்து வாழ்க” என வரமளித்தார்.

காமன் பிறந்ததும் பிரம்மனிடம் சென்று ”காம தர்ப்பயாமி” (நான் யாரை மகிழ்விக்க வேண்டும்?) என வினவியதால் அவனை கந்தர்வன் என்றழைக்கின்றனர். பிரம்மனின் மனதில் இருந்து தோன்றியதால் மன்மதன் எனக் காமன் அழைக்கப்படுகிறான். தேவர்களில் அழகியவன் ஆதலால் காமன் என்கின்றனர்.

புராணக் கதைகள்

பிரம்மனின் சாபம்

பிரம்மன் படைக்கும் பொருட்டு பரபிரம்மம் நோக்கி தவமிருந்தார். அத்தருணத்தில் பிரம்மனின் மனதில் காம எண்ணங்கள் துளிர்த்தது. அந்த கணத்தில் பிரம்மனின் மனதில் இருந்து ஒரு பெண் தோன்றினாள். பிரம்மா அவளை ”மானுடர்களின் நாவில் என்றும் அமர்க” என்று சொல்லி சரஸ்வதி எனப் பெயரிட்டு தன் மனைவியாக்கிக் கொண்டார்.

தன் தவம் கலைந்ததை எண்ணி வருந்தினார். அதற்கு காரணகர்த்தாவான காமனை நோக்கி, “என் தவம் கலைத்த நீ சிவனின் மூன்றாம் கண்ணான நெற்றி கண்ணால் எரிக்கப்படுவாய்” என சாபமிட்டார். அதன்பின் பிரம்மன் தன் காம இச்சைகளை அத்ரி முனிவருக்கு வழங்கினார். அவர் தன் மனைவி அனசூயையிடம் அதனை வெளிப்படுத்த அவர்களிடம் இருந்து சந்திரன் பிறந்ததாக பிரம்ம புராணத்தின் கதை சொல்கிறது.

(பிரம்ம புராணம் - பாகம் 43)

தியானத்தில் இருக்கும் சிவன் மீது காம அம்பை வீசும் காமன்.
காம தகனம்

முன்பொரு காலத்தில் தாரகாசூரன் வெல்வாரற்ற சக்தி பெற்றிருந்தான். அவன் சிவனின் மகனால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்ற வரத்தை பெற்றிருந்ததால் உலகம் யாவையும் வென்று அச்சுறுத்திக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் ஹிமாவனின் மகளான பார்வதி சிவனே தன் கனவனாகும் படி தவமிருந்தாள். இதனை அறிந்த இந்திரன் இந்திரலோகத்தை காக்கும் பொருட்டு சிவனின் மனதில் காதலை எழுப்ப காமனை அனுப்பினான். தவத்தில் இருந்த சிவனிடம் சென்ற காமன் தன் மலர்க்கணைகளை சிவனிடம் தொடுத்தான். காமனால் தன் தவம் கலைந்த சிவன் கோபம் கொண்டு தன் நெற்றிக் கண்ணால் சிவனை எரித்தான். சிவனால் காமன் எறிக்கப்பட்ட இடம் அங்கராஜ்யம் என்றழைக்கப்படுகிறது. காமன் தன்னுடலை இழந்ததால் அவன் அனங்கன் என்றழைக்கப்படுகிறான்.

(வால்மிகீ இராமாயணம் - பால காண்டம், பாகம் 23)

காமனின் மறுபிறப்பு

காமன் சிவனால் எரி க்கப்பட்டதும், அவன் மனைவி ரதி சிவனை நோக்கி தன் கணவனை திரும்ப தரும்படி தவமிருந்தாள். ரதியின் தவத்திற்கு இணங்கிய சிவன், ரதியை பூமியில் அவதரிக்கும் படியும் அவள் மகனாக காமன் பிறப்பான் என்றும் வரம் கொடுத்தார்.

சிவனின் வரத்தால் ரதி மாயாவதி என்னும் பெயரில் பூவுலகில் பிறந்தாள். சாம்பரன் என்னும் அசுரனின் அரண்மனை சேடிப் பெண்ணாக வளர்ந்தாள். அதே நேரம் கிருஷ்ணன் தனக்கு ஒரு மகன் வேண்டுமென சிவனிடம் வேண்டினார். காமன் கிருஷ்ணனின் மகனாக பிறக்கும் வரத்தை சிவன் வழங்கினார். கிருஷ்ணனுக்கும், ருக்மணிக்கும் மகனாக காமன் பிறந்தான்.

சாம்பரன் சிவனிடம் பெற்ற வரத்தின் பெயரில் பூமியில் அவனது இறப்பு காமன் பிறந்ததன் பிற்பாடுதான் நிகழும் என்றிருந்தது. இதற்காக காமனின் பிறப்பை குறித்த தகவல்களை சேகரிக்க சாம்பரன் தன் காவல்படைகளை அனுப்பினான். கிருஷ்ணன், ருக்மணி மகனாக காமன் பிறந்ததை அறிந்த சாம்பரன் அவனை கடத்திச் சென்று ஆழ்கடலில் வீசினான். காமன் கடலினுள் இருந்த சுறாவின் வயிற்றுக்குள் வளர்ந்தான்.

மீனவர்கள் அந்த பெரிய சுறாவை பிடித்து சாம்பரனின் அரண்மனை சமையலுக்கு கொண்டு வந்தனர். சுறாவினுள் இருந்த சிறுவனைக் கண்டு மாயாவதி (ரதி) மகிழ்ந்தாள். அவனை சீராட்டி வளர்த்தாள். நாரதர் மாயாவதியிடம் வந்து நிகழ்ந்ததை கூறினார். முன் ஜென்மத்தில் ரதியும், மன்மதனுமாக இருவர் இருந்ததையும் சிவனின் கோபம் மற்று வரத்தால் பூமியில் இருவரும் பிறந்ததையும் பற்றிச் சொன்னார். அதன் பின் மாயாவதி காமனை மிகுந்த அன்புடன் வளர்த்தாள்.

அவன் வளர்ந்ததும், அவனைக் கொல்ல சாம்பரன் திட்டமிட்டு கடலில் வீசியதைப் பற்றிச் சொன்னாள். சாம்பரனை கொல்லும்படி காமனிடம் கட்டளையிட்டாள். காமன் சாம்பரனைக் கொன்றதும், இருவருமாக விமானத்தில் ஏறி துவாரகைக்கு சென்றனர். அங்கே மீண்டு வந்த காமன் பல துறவிகளின் முன்னிலையில் பிரத்யூமனன் எனப் பெயர் சூட்டப் பெற்றான். உஷையின் மகனான அனிருத்தன் பிரத்யூமனனின் மகன். த்ரிஷா அவனது மகளாக பூமியில் வளர்ந்தாள்.

(கதாசரித்தசாகரம்)

காமனின் ஆயுதங்கள்

காமனின் வலது கையில் கரும்பால் ஆன வில்லையும், மலர்க்கணைகளால் ஆன அம்பை இடது கையிலும் கொண்டுள்ளான். காமனின் வாகனம் கிளி, கொடியின் சின்னம் மகரம் அல்லது சுறா மீன். தாமரை, அசோகம், முல்லை, மா, குவளை என்னும் ஐந்து மலர்களால் ஆனது காமனின் அம்பு.

(அமர கோஷம்)

காயத்திரி மந்திரம்

காமதேவனுக்கு உரிய காயத்திரி மந்திரம்,

காமதேவாய விதுமகே புட்பதேவாய தீமகி

தன்னோ அனங்கப் பரஞ்சோதியது

காமன் கோவில்

சங்க காலத்தில் காமனுக்கு கோவில் இருந்ததை, சங்க இலக்கிய நூல்களில் இருந்து அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் அவளது தோழி கோவலன் திரும்பி வரும் பொருட்டு வழிபட வேண்டிய கோவில்களை சொல்லும் போது, “காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர்” (சிலம்பு - கானாதிரமுனர்ந்தகாதை 60-61).

காமனுக்கு கோவில் இருந்ததற்கு சான்றாக காமன் பண்டிகை என்னும் விழாவும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.