கவிப்பித்தன்
கவிப்பித்தன் ( நவம்பர் 10, 1971 ) தமிழில் எழுதிவரும் கவிஞர் மற்றும் நாவலாசிரியர். கவிதைகள் சிறுகதைகள் நாவல்கள் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
கவிப்பித்தன் ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தைச் சார்ந்த நீவாநதிக்கரை கிராமமான வசூரில் திரு.மு.கண்ணன் - திருமதி. சக்கரவேணி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.( வசூர், தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது ). இவரது இயற்பெயர் தேவராஜு
தொடக்ககக் கல்வியை வசூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியினை வள்ளிமலை - அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியைப் பொன்னை - அரசினர் மேநிலைப்பள்ளியிலும் கற்றார்.
செய்யாறில் உள்ள அறிஞர் அண்னா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் பிரிவில் தனது அறிவியல் இளங்கலையை நிறைவு செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கவிப்பித்தனின் மனைவி திருமதி மஞ்சுளா. இவர்களுக்கு ஆகஸ்டு 22, 1999 ல் திருமணம் ஆனது. ஓவியா மற்றும் சிந்து ஆகிய இரு மகள்கள் உள்ளனர் . நிலவழகன் என்கிற ஒரு மகன் இருக்கிறார்.
கவிப்பித்தன் அரசு ஊழியராக உள்ளார். வருவாய்த் துறையில் வட்டாட்சியராகப் பணிபுரிகிறார்
இலக்கிய வாழ்க்கை
கவிப்பித்தனின் இயற்பெயர் தேவராஜு என்பதாகும். புதுமைப்பித்தன் பெயர் மீதிருந்த ஈர்ப்பினால் கவிப்பித்தன் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டார்.
’முதுகெலும்புகள்’ என்கிற கவிதை 1992 ம் ஆண்டு வெளியானது. இவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ’ஒரு மேகத்தின் தாகம்’ என்கிற கவிதைத் தொகுப்பு வெளியானது. ஆண்மை வதை என்கிற முதல் சிறுகதை 2000 ம் ஆண்டிலும், நீவாநதி என்கிற முதல் நாவல் 2015 ம் ஆண்டிலும் வெளியானது.
புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், வண்ணதாசன், கி.ரா, தி.ஜானகிராமன், எஸ்.ராமகிஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணநிலவன், முகில் இவர்களோடு ஏராளமான சக படைப்பாளிகளும் ஏதேனும் ஒரு இழையினூடாக தனக்கு முன்னோடிகளாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.