under review

கரு. ஆறுமுகத்தமிழன்

From Tamil Wiki
Revision as of 13:03, 31 March 2024 by Ramya (talk | contribs)
கரு. ஆறுமுகத்தமிழன்

கரு. ஆறுமுகத்தமிழன் (ஆறுமுகம்) (பிறப்பு: 1970) எழுத்தாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவ இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். இலக்கியம், மெய்யியல், அரசியல், சைவம் சார்ந்து உரை நிகழ்த்தும் பேச்சாளர்.

பிறப்பு, கல்வி

கரு. ஆறுமுகத்தமிழனின் இயற்பெயர் ஆறுமுகம். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பழ. கருப்பையா, கமலா இணையருக்கு 1970-ல் ஒரே மகனாகப் பிறந்தார். மதுரை லட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்றார்.

சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் மெய்யியலில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டமும், பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப்பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் முத்துலட்சுமியை 2003-ல் மணந்தார். மகள்கள் கமலா, மெய்யம்மை.

கரு. ஆறுமுகத்தமிழன்

ஆசிரியப்பணி

கரு. ஆறுமுகத்தமிழன் சென்னைப் பல்கலைக்கழகம், மாமல்லபுரம் அரசினர் சிற்ப-கட்டடக் கலைக் கல்லூரி, பூவிருந்தவல்லி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கு இந்திய தத்துவம், சைவ சித்தாந்தம், இந்திய அழகியல் சார்ந்த வகுப்புகள் எடுத்தார். சென்னை, விவேகானந்தர் கல்லூரியின் மெய்யியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன் அரசியல், சைவம் சார்ந்த நிலைப்பாடுகள் கொண்ட கட்டுரைகளால் ஆசிரியப்பணி வாய்ப்புகள் பலவற்றை இழந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் இளமையில் மரபார்ந்த சைவ சமயத்தின் மீதும், பிரம்மச்சரியத்தின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் சித்தர் மரபின் மீது கவனம் சென்றபின் மரபார்ந்த சைவத்தின் மீது விமர்சனப் போக்கு கொள்ளலானார். அவருடைய சைவக் கட்டுரைகள், நூல்களில் இத்தகைய விமர்சனப் போக்குகள் உள்ளன.

அரசியல் வாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் தேர்தல் அரசியலில் பங்கேற்கவில்லை. ஆனால் தமிழ் தேசியச் சார்புடையவர். இடதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான போக்கு கொண்டவர். தொடர்ந்து தன் அரசியல் சார்ந்த சொற்பொழிவுகள், கட்டுரைகள் வழியாக அரசியல் களத்தில் பங்கேற்பவர்.

பொறுப்புகள்

  • சித்தர் யோக ஆய்வு மையம் என்ற ஆய்வுத் திட்டத்தில் துணை இயக்குநர்
  • ஐபிஎன் மேலாண்மை, சட்ட ஆலோசனை நிறுவனத்தில் மேலாளர்
  • புதிய தலைமுறை நிறுவனத்தின் புதுயுகம் தொலைக்காட்சிக்கான எழுத்தாளர் குழுவில் உறுப்பினர்

இதழியல்

கரு. ஆறுமுகத்தமிழன் கல்லூரி காலத்தில் 1989-ல் “விடியல்” என்ற இலக்கியம் சார்ந்த கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். அதன் ஆசிரியர்குழுவில் இருந்தார். மூன்று ஆண்டுகள் இந்த இதழ் தொடர்ந்து வெளியானது.

இலக்கிய வாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் ஆன்மிகம், சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார். சைவ இலக்கியங்களுக்கு உரை எழுதினார். இவரின் கட்டுரைகள் தமிழினி. காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

கரு. ஆறுமுகத்தமிழனின் முதல் கட்டுரை “இறை உண்டா?” கல்லூரி இதழில் வெளியானது. முதல் நூல் முனைவர் பட்ட ஆய்வேட்டின் திருத்தப்பட்ட வடிவம் ”திருமூலர்: காலத்தின் குரல்” 2004-ல் தமிழினி வெளியீடாக வந்தது. தமிழினி அச்சு இதழாக வெளிவந்து கொண்டிருந்தபோது அதில் தலையங்கங்களும் அரசியல் விமரிசனக் கட்டுரைகளும் எழுதினார். தலையங்கங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ”நாமார்க்கும் குடியல்லோம்” என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக 2011-ல் வந்தது.

சென்னை வானொலியில் காலை தமிழ்ச் சுவை என்னும் நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட இலக்கியம், மெய்யியல் சார்ந்த சிற்றுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு ”நட்ட கல்லைத் தெய்வமென்று” என்னும் தலைப்பில் தமிழினி வெளியீடாக 2013-ல் வந்தது. இந்து தமிழ் திசை நாளேட்டின் ஆனந்தசோதி இணைப்பில் உயிர் வளர்க்கும் திருமந்திரம் என்னும் தலைப்பில் எழுதிய நூற்றியிருபது கட்டுரைகள் அதே தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு இந்து தமிழ் திசை பதிப்பகத்தால் 2020-ல் இரண்டு பகுதிகளாக வந்தது.

சென்னை வானொலிக்காக ஆற்றிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உரைகள் தொகுக்கப்பட்டுப் ”பெண் உகந்த பெரும்பித்தன்” என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக 2023-ல் வந்தது. இணையாசிரியராக இருந்து எழுதிய ”The Yoga of Siddha Tirumular: Essays on the Tirumandiram” என்னும் நூல் 2006-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பு

சித்தர் யோக ஆய்வு மையத்தில் பணி செய்த காலத்தில் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஒரு பகுதியாகத் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரத்தை மொழிபெயர்த்தார். இது 2010-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் "TIRUMANDIRAM" என்ற பெயரில் வெளியானது.

நூல் பட்டியல்

  • திருமூலர்: காலத்தின் குரல் (2004, தமிழினி)
  • நட்ட கல்லைத் தெய்வமன்று (2011, தமிழினி)
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
  • பெண் உகந்த பெரும்பித்தன்: திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் (2023. தமிழினி)
  • நாமார்க்கும் குடியெல்லோம்
ஆங்கிலம்
  • The Yoga of Siddha Thirumular: Essays on Thirumandiram
மொழிபெயர்ப்பு
  • TIRUMANDIRAM (volume 1-10)
கரு. ஆறுமுகத்தமிழன் (நன்றி: Shruti tv)

உரைகள்

கரு. ஆறுமுகத்தமிழனின் முதல் உரை 1997-ல் தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தில் நிகழ்ந்தது. அது பரவலாக பாராட்டப்பட்டது. இலக்கியம், மெய்யியல், சைவம், அரசியல் சார்ந்து தொடர்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.